வெள்ளி, 22 நவம்பர், 2019

நீட் தேர்வு: இனி இட ஒதுக்கீடு இல்லை!

நீட் தேர்வு: இனி இட ஒதுக்கீடு இல்லை!மின்னம்பலம் : ஆண்டுதோறும் மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான அகில இந்திய நீட் பிஜி (PG - முதுநிலை) தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. வரும் 2020ஆம் ஆண்டுக்கான நீட் பிஜி தேர்வில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
நாடு முழுவதும் உள்ள சுமார் 30,774 மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான இடங்களுக்கு (MD, MS) அகில இந்திய நீட் பிஜி தேர்வு ஜனவரி மாதம் மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான குறிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், மொத்தமுள்ள 30,774 இடங்களில் 50 சதவிகிதம் அதாவது, 15,387 இடங்களுக்கு மத்திய அரசே கவுன்சிலிங் மூலம் இடத்தை நிரப்பும். இந்த 15,387 இடங்களில் இப்போதுள்ள இட ஒதுக்கீடு முறையில் 50 சதவிகிதம் (7,693 இடங்கள்) பொதுப்பிரிவிலும், 22.5 சதவிகிதம் (3,462 இடங்கள்) தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும், 27 சதவிகிதம் (4,155 இடங்கள்) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வழங்க வேண்டும்.

ஆனால், இந்த அறிவிக்கையில் இதர பிற்படுத்தப்பபட்டோருக்கான இட ஒதுக்கீடு (OBC) மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படும் என்றும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் இருந்து பெறப்படும் இடங்களில் இதர வழங்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் சொற்பமான 300 இடங்கள் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குக் கிடைக்கிறது. இந்த நிலை வரும் கல்வியாண்டிலும் தொடர்ந்தால் சுமார் 3,800 இடங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்காமல் போகும். ஆனால், இதே ஆணையில் பொதுப்பிரிவில் உள்ள உயர்சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடான 10 சதவிகிதத்தை மொத்தமுள்ள 15,387 இடங்களிலும் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 1,758 மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான இடங்களைக்கொண்டு அதிலும் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக உள்ளது. இதில் 50 சதவிகிதம் அதாவது, 879 இடங்கள் மத்திய அரசிடம் தரப்படுகின்றன. இந்த 879 இடங்களில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 50 சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடும் பின்பற்றப்படுவதில்லை. மத்திய அரசின் 27 சதவிகித ஒதுக்கீடும் தரப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2006ஆம் ஆண்டில் ஓபிசி (என்சி) இட ஒதுக்கீடு தொடங்கியதிலிருந்து மேற்கண்ட நடைமுறை நடந்துகொண்டிருக்கிறது. இது தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில் அதிக பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என பெயர் வெளியிட விரும்பாத மருத்துவர் ஒருவர் கூறினார்.
நீட் பிஜி தேர்வு: கவனிக்க வேண்டிய முக்கிய புள்ளிகள்
1. அகில இந்திய ஒதுக்கீடு என்பது இந்தியா முழுவதும் உள்ள மாநில அரசுக்கு சொந்தமான கல்லூரிகளிலிருந்து 50 சதவிகித முதுநிலை இடங்களை எடுத்து தனியாக கவுன்சிலிங் நடத்துவது ஆகும்.
2. இந்த அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இந்தியாவின் எந்த பகுதியினரும் எந்த கல்லூரியிலும் சேர்ந்து படிக்க இயலும்.
3. நீட் சட்டம் வந்தபோது அதில் AIIMS, PGI, JIPMER ஆகிய மூன்று தன்னாட்சி அதிகாரம் (autonomous) கொண்ட மத்திய கல்லூரிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
4. ஆனால், இவை மூன்று தவிர இன்னும் சில மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. Armed forces medical college, Bhanaras Hindu university, Aligarh Muslim university ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும். இந்தக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படவில்லை.5. ஆகவே அவை நீட் தேர்வு வழியே மட்டுமே மாணவர்களைத் தேர்வு செய்ய இயலும். ஆகவே இந்தக் கல்லூரிகள் கவுன்சிலிங் நடத்தும் பொறுப்பையும் மத்திய அரசிடமே வழங்கிவிட்டன.

6. இவ்வாறு அகில இந்திய ஒதுக்கீடு என்பதில் மாநில அரசு கல்லூரிகள், மத்திய அரசு கல்லூரிகள் என்று இரண்டும் உள்ளன.
7. ஆனால், மாநில அரசு கல்லூரிகள் என்பதுதான் 97-98 சதவிகிதம் இந்த கவுன்சிலிங்கில் உள்ளது. மத்திய அரசு கல்லூரிகள் என்பது ஓரிரண்டு மட்டுமே.
8. இப்போது வெளிவந்துள்ள NEET PG அறிவிப்பில் 27சதவிகித இட ஒதுக்கீடு மத்திய அரசு கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மாநிலக் கல்லூரிகளுக்கு குறிப்பிடவில்லை. ஆனால் 10 சதவிகித EWS இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களவையில் எதிரொலி
மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று நேற்று (நவம்பர் 21) மக்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பின. OBC வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு நிராகரிக்கப்பட்டது குறித்து மக்களவையில் விவாதிக்க திமுக ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்தது.
மக்களவையில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு, தேசிய அளவில் மருத்துவப் படிப்புக்கான இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிக்கை விடுத்துள்ளார். “தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான, இட ஒதுக்கீடு 50 சதவிகிதம் வரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கான பொதுத் தொகுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடுகூட அரசியல் சட்டப்பிரிவுகளின்படி வழங்கப்படவில்லை.
மத்திய அரசு அடுத்த கல்வியாண்டிலாவது (2019-2020) அரசியல் சட்டத்தின் மாண்புகளைக் காப்பாற்றும் வகையில் மருத்துவக் கல்லூரிகளில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை மத்திய தொகுப்பிலிருந்து வழங்கிட வேண்டும்” என டி.ஆர்.பாலு கேட்டுக்கொண்டார்.
பாமக இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இதுதொடர்பாக NEET MDS அறிவிப்பு வந்தபோது தனது கண்டத்தை தெரிவித்திருந்தார். சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு நவம்பர் 1ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அதில், “நாடெங்கும் மொத்தம் 23,729 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 18,000 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குச் சொந்தமானவை என்பதால், அவற்றில் 50 சதவிகிதம், அதாவது சுமார் 9,000 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும்.
மத்திய சுகாதாரத் துறை நிறுவனங்களின் இந்த விசித்திரமான நிலைப்பாடு காரணமாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய 2430 மருத்துவப் பட்ட மேற்படிப்பு இடங்களும், 183 பல்மருத்துவப் பட்ட மேற்படிப்பு இடங்களும் பறிக்கப்படுகின்றன. இளநிலை மருத்துவப் படிப்பு, இளநிலை பல் மருத்துவப் படிப்பு ஆகியவற்றுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் இதே அநீதி இழைக்கப்படுகிறது.
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த திருத்தங்களின்படி, மாநில அரசுகளுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50 சதவிகித இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு பெறப்படுகிறது. இதனால், மாநில அரசுகளால் உள்ளூர் மாணவர்களுக்கு உரிய அளவில் வாய்ப்பு வழங்க முடியவில்லை” எனக் கூறினார்.

கருத்துகள் இல்லை: