செவ்வாய், 19 நவம்பர், 2019

பெரியார் அறிவுசார் தீவிரவாதி.. பெரியார் மொத்த இந்தியாவிற்குமானவர்

மின்னம்பலம் : சுபகுணராஜன் : ஓரிரு நாட்களுக்கு முன்னர், ரிபப்ளிக் எனும் ஆங்கிலச் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பாபா ராம்தேவ் எனும் யோகா / ஆன்மிக வியாபாரி, தனது பேட்டியில், பெரியாரை ‘ அறிவுசார் தீவிரவாதி ‘ என்றும், அவர் இந்து மதத்திற்கெதிரான கருத்துக்களை மக்களிடையே, குறிப்பாக தமிழக மக்களிடையே விதைத்து, அந்தப் பகுதியை பாழடித்துவிட்டார் எனப் பேசியிருக்கிறார்.
இந்த நேர்காணலை நடத்திய அர்னாப் கோஸ்வாமி என்ற ஊடகவியலாளர், இந்திய ஊடக அறம் தரைதட்டி விட்டதை அல்லது அதற்கு ஊடக அறவாதம் என்ற கோட்பாட்டையே தெரியாது என்பதற்கான வாழும் சாட்சி. ஒரு இந்துத்துவ பெரும்பான்மைவாதச் சகிப்பின்மையின் வடிவாக காட்சிப்படும் மனிதர் அர்னாப் கோஸ்வாமி. அவரது விவாதமுறையே பயங்கரமானது. ஒரு நெறியாளர் விவாதப்புள்ளியை முன்வைக்கும் முறையிலேயே, அவரது சார்புகளும், நோக்கங்களும் தெறித்து நம்மை திணறச் செய்ய முடியுமென்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்தவர். .ஏற்கனவே தொகுத்துக் கொண்டது போல் பாபா ராம்தேவ் ஒரு வியாபாரி, அதிலும் தரமற்ற பொருட்களை வெற்றிகரமாக சந்தைப்படுத்த ஆன்மீக அரசியலை கையிலெடுத்தவர். அதிலும் பாமரத்தனமான சந்தர்ப்பவாதி.,அவ்வப்போதுள்ள அதிகாரமிக்க ஆட்சியாளர்களை அண்டிப் பிழைப்பவர். ஆனால் அவரை நம்பும் பாமரர் கூட்டம் பெரிது. இங்கு பாமரர் கல்விசார் தகுதி அடிப்படையிலானது இல்லை. நம்மூரிலேயே அவரது பதஞ்சலி பொருள் வியாபாரத்தை நடத்துபவர்களையும், அதனைப் பெருமிதமாகப் பேணுவோரையும் கண்டாலே இந்தப் ‘ பாமரர் ‘ கல்வியும், வளமான வாழ்வும் பெற்ற மேல் மற்றும் நடுத்தட்டு ’இந்து’ மக்கள் என்பது விளங்கும். நிற்க.

பெரியார் அறிவுசார் தீவிரவாதியா என்ற விவாதத்தில், நேர்காணல் நடத்தியவர் மற்றும் பதிலளித்தவர் குறித்த இவ்வளவு நீண்ட அறிமுகம் ஏன்? காரணமில்லாமலில்லை. தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகிய கருத்தாக்கங்களையும், பெரியாரது செயல்களம் குறித்த சில அடிப்படைகளைத் தொகுத்துக் கொள்ளவே. பெரியார் எந்த நிலையிலாவது , கருத்து ரீதியாகவேணும் “ தீவிரவாதம் “ எனும் இன்றைய கருத்தாக்கம் சார்ந்து இயங்கியவரா? ஒரு போதும் இல்லை. நாமறிந்த அளவில் தான் செய்கிற காரியம் குறித்த தெளிந்த சிந்தையோடு இயங்கியவர் பெரியார். அவரது வாழ்நாளில் ஒருபோதும் தான் பேசும் வார்த்தைகளை , அவற்றின் உள்ளடக்கம் மற்றும் பொருத்தப்பாடு கருதாமல் பேசியவரில்லை. இன்னும் கூடுதலான பெரியார் குறித்த புரிதலுக்கு,, அவர் தனது கருத்து நிலையை விரிவுபடுத்தும் படிக்கு விளக்கங்கள் சொன்னாரேயன்றி, அதன் விளைவுகளை கண்டு அஞ்சியவருமில்லை, அதனை மாற்றியமைத்தோ, திரும்பப் பெற்றுக் கொண்டதையோ அவர் செய்தவரில்லை. ஒன்றை நினைவில் கொள்வோம், அவர் ஒருநாளும் தன் பேச்சிற்காகவோ, செயலுக்காகவோ வருத்தம் தெரிவித்தவர் இல்லை. இன்னும் அழுத்தமாகச் சொல்ல, அவரைப் போல, தான் செய்யும் காரியம் என்ன என்று தெளிவாக அறிவித்த சிந்தனையாளர்கள் இல்லை என்றே சொல்லலாம். தன்னை 1920 களில் ‘ கலகக்காரன் ‘ என அறிவித்துக் கொண்ட மாபெரும் சிந்தனையாளர் பெரியார்.

தனது கலகம் வன்முறையற்றது, அது ஒரு போதும் வன்முறையின் சாயலைக்கூட பெறக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தவர். ஒரு கருத்தியல் சார் மேலாதிக்கமான, பார்ப்பன இந்து மதவாதத்தை, எதிர்த்து அதன் அடிப்படைகளைத் தகர்ப்பதற்கான மூலாதாரமான கருத்துநிலைகளை முன்வைப்பதையே அவர் ‘கலகம் ’ என்றார். வேதபார்ப்பன இந்துமத ஒழிப்பும் சாதி ஒழிப்பும் ஒருசேர மட்டுமே நடத்தப்பட வேண்டுமென்றவர். இந்துமதத்தை ஒழிக்காமல் சாதி ஒருபோதும் ஒழியாது என ஆணித்தரமாகச் சொன்னவர்.. கலகத்தில் பிறப்பதுதான் நீதி என அறிந்து செய்தவர் அவர். அதைவிட அவர் தனது கருத்துரையைக் கேட்போரது கவனத்தை இறுதியாக கொண்டு நிறுத்தும் புள்ளி மிக முக்கியமானது. ஆம், நான் எனக்குப்பட்டதைச் சொல்லியிருக்கிறேன், அதை நீங்கள் அப்படியே ஏற்க வேண்டிய அவசியமில்லை, உங்கள் சுயசிந்தனையில் ஆய்ந்து அது சரியெனப்பட்டால் அதன்படி செய்யுங்கள், இல்லையெனில் விட்டு விடுங்கள். இந்தரீதியில் முடியும் அவரது உரைகளின் சாரத்தை சுயசிந்தனையில் இருத்தி ஏற்கப்பட்ட/,உள்வாங்கப்பட்ட,சிந்தனைகளே இந்த மண்ணில் உரமாகி நிற்கிறது. அதுதான் இன்றைய காவி பயங்கரவாதமெனப்படும் தீவிரவாதத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.
ஆக, தீவிரவாதமும், பயங்கரவாத வன்முறையும் பெரியாரது சிந்தனைகளிற்கும், களச் செயல்பாடுகளுக்கும் முற்றிலும் அந்நியமானது. ஆனால், அவரது சிந்தனை ‘ பார்ப்பன இந்துத்துவத்தை’ அம்பலமாக்கும் வலுப்பெற்றது. பார்ப்பனிய வேதமதம் எப்படி இந்து என்ற கற்பிதத்தை பொது அடையாளமாக முன்னிறுத்தி, தனது சனாதன மேலாண்மையைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது என்ற பெரியார் சிந்தனை காலா காலத்திற்கும் இந்துத்துவம் எடுக்கும் அத்தனை வடிவத்தையும் தகர்க்கவல்லது. பல்கலாச்சார, பன்மார்க்க வழிமுறைகளை ஒருமையில் அடைத்து இந்தியப் பெரும்பான்மை சமூகத்தை இந்து எனும் ஒற்றை அடையாளத்திற்குள் அடைக்கும் இந்துத்துவர்களின் முயற்சி தென்னகத்தில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் தோற்பதன் காரணம் வெகுநாள் வடமாநில பார்ப்பனரல்லாத சமூகங்களிற்கு விளங்கவில்லை. தமிழ்நாட்டில் பார்ப்பனியத்திற்கெதிராக நடந்த நூற்றாண்டிற்கும் மேலான இடைவிடா போராட்டம் குறித்து அவர்கள் அறியவில்லை. அதற்கு இன்னபிற முயற்சிகளோடு, பெரியாரது முன்னெடுப்பே காரணமென்பதை இப்போதுதான் அறியத் துவங்கியுள்ளார்கள்.
பாஜக அரசின் பெரும்பான்மைவாத அரசியல் தொடர்ந்து இங்கு முறியடிக்கப்படுவதன் காரணத்தை தேடும் போதுதான் பெரியார் பாதை அவர்களுக்குத் தெரிகிறது. ஆனாலும் ஏன் பெரியாரை ‘ அறிவுசார் தீவிரவாதி ‘ என்கிறார் பாபா ராம்தேவ். ஏனெனில் அவருக்கோ , அவரைப் பேட்டி கண்டவருக்கோ பெரியார் சிந்தனைகளின் அரிச்சுவடிகூடத் தெரியாது. ஆனால் தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகிய கருத்தாக்கங்களின் பொருளையும் அதன் இயக்கவிதிகளையும் அவர்கள் அறிவார்கள். ஏனெனில் இந்திய செய்தி ஊடகங்களில் நிகழும் இரவுநேர விவாதங்கள் தீவிரவாதச் செயல்பாடுகள்தான் என்பதை அறிந்தும் அறியாதவர் போல் நடிக்கும் நயவஞ்சகர்கள்.
தீவிரவாத கருத்துப்புலம் ஒருவகை நம்பிக்கைவாதமே. மாற்றுகள் இருப்பதான நம்பிக்கையற்றது. அதுவும் ஒரு மதவாதம் போன்றதே. கேள்விகளற்று ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கும் கருத்துநிலை. தீவிரவாதத்தின் சாராம்சம் ஜனநாயகமற்றது அல்லது ஜனநாயகத்தை ஒரு பலவீனமாகக் கருதுவது. எனவேதான் உலகின் தீவிரவாதங்களில் பெரும்பான்மை மதம் சார்ந்தவை. அடுத்து பயங்கரவாதம். பயங்கரவாதம் தீவிரவாதக் கருத்துநிலையின் செயல் வடிவம். கருத்துநிலை தீவிரவாதம் களங்காணும் போது அது பயங்கரவாதமாகவே இருக்க முடியும். ஆனால் இங்கும் ஒன்றை தெளிவு செய்து கொள்வது நல்லது. தீவிரவாதமும், பயங்கரவாதமும் அனைத்து நேரங்களிலும் அரசிற்கு எதிரானது என்ற புரிதலை சற்று தள்ளி வைத்து விடுவது நல்லது. அதேபோல் தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவை பெரும்பான்மையினதாக இருக்கும் போது அது அரசாகவே இருக்க முடியும் என்பதையும் கருத்தில் கொள்ளலாம். தீவிரவாதமும்,பயங்கரவாதமும் அரசு வடிவமாகும் போது அதன் வெளிப்பாட்டு வகை எப்போதும் உயிர்ப்பலி வழியாக மட்டுமே நிகழ்வதில்லை. சிறுபான்மையினரின் உரிமை பறிப்பு மற்றும் அவர்களை குடிமைச் சமூகத்தின் இருப்பில் இரண்டாம் தரமானதாக மாற்றி, அவர்கள் உயிர்த்திருப்பதே அச்சமூட்டுவதாக இருக்கும்படியாக்குவதும் கருத்துநிலை தீவிரவாதம்/ பயங்கரவாதத்தின் விளைவுகள்தான்.

பாஜக அரசின் இந்துத்துவ ஆட்சிக்காலம் முழுதும் அரசுசார் தீவிரவாதம் அரசின் பகுதியாகவே இருக்கிறது. பார்ப்பன ( ஆர் எஸ் எஸ் ) பனியா உள்ளிட்ட உயர்சாதிகள் ( பாஜக ) நலனே இதன் அடிப்படை லட்சியம். அரசிற்கு வெளியே இயங்குவதாகக் கருதப்பட்ட ‘ பசுக்காவலர் சேனைகளும்’, ‘ காதலர்களை பொதுவெளியில் மிரட்டிய சேனைகளும்’, ‘ லவ் ஜிகாத் தடுப்பாளர்களும்’ அவர்களின் தொண்டர்படை. அவர்தம் செயல்பாடுகள் அரசின் ஆசீர்வாதத்தோடேயே இயங்கியதாக கருதப்பட்டது. அப்படிக் கருதப்பட்டதற்கான காரணம், அவர்கள் மீண்டும் மீண்டும் களமாடியதே. அவர்களது கொட்டமடக்க வேண்டிய காவல்துறை மற்றும் நீதித் துறைகளின் கைவிரல் இடுக்கின் வழியே அவர்கள் வழிந்தவிதம்தான். இது மட்டுமல்ல, இன,மொழி,கலாச்சார பன்மைத்துவத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தொடர் தாக்குதல்கள் அரசின் நேரடியான ஆணைகள் வழியே நிகழ்ந்தன. ஆனால் இந்துத்துவ அரசின் இந்தக் கலாச்சார பயங்கரவாதத்தை இந்தியத் துணைக் கண்டத்திலேயே கடுமையான எதிர்ப்புகளால் தடுக்க முனைந்து நின்றது தமிழ்நாடு மட்டுமே. ஒரு நாட்டின் சர்வ வல்லமை படைத்த சர்வாதிகாரியாகக் கருதப்படும் பிரதமர் மோடி இந்த திசை நோக்கி வரும்போதெல்லாம் “ திரும்பிப் போ மோடி “ முழக்கம் எழுகிறது. இந்த கருத்துநிலை தீவிரவாதத்தை இடைவிடாமல் எதிர்க்கும் மனப் போக்கு எப்படி தமிழ்ச் சமூகத்திற்கு சாத்தியமாகிறது எனும்போது பெரியார் மின்னலாக எழுகிறார்.
.இந்து என்ற மதமும் அதன் சாதியக் கட்டுமானமும் பார்ப்பனிய நலன் கருதியது எனவே சாதி ஒழியவேண்டுமானால் இந்துமதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதோடு விட்டாரா பெரியார். இல்லை. எந்த மதமாகிலும் மனிதருக்கு அத்யாவசியமானதோ அல்லது பலனளிப்பதாக இல்லை என்பதையும் வலியுறுத்தினார். அனைத்து வகை மதங்களையும் விமர்சிக்கத் தவறாதவரை எப்படி அனைத்துத் தரப்பும் ஏற்க முடியும்.கடவுளை மற, மனிதனை நினை என்றவர், கடவுள் மறுப்பினையும், மத ஒழிப்பினையும் மனிதர் நலன் சார்ந்தே பேசினார் என்பதை மக்கள் உணரும்படிக்கே அவர் தொடர்ந்து களமாடினார். அவர் கடவுளை மறுத்ததையும் பகுத்தறிவை பரிந்துரைத்ததோடு நில்லாமல், தேசம், தேசியம் என்பனவற்றையும் இடைவிடாமல் சாடியபடியே இருந்தார். தேசியம் என்பது பித்தலாட்டக்காரர்களின் கடைசிப் புகலிடம் என்பதையும் வலியுறுத்தியவர் அவரே. இன்றைய இந்துத்துவ தேசியவாத அரசையே அவர் வெகுகாலத்திற்கு முன்னரே அவதானித்தார். அவர் எச்சரித்த அத்தனை ஆபத்துகளின் வடிவாய் இந்தப் பாசிச அரசு வந்து நிற்கும் போது , அதற்கெதிரான போருக்கான கருத்துநிலையை பெறுவதற்கான ஆதார மையமாக இருப்பவர் பெரியார் மட்டுமே.
இன்று பெரியார் தமிழ்நாட்டிற்கு மட்டுமானவர் இல்லை, ஒட்டு மொத்த இந்தியாவிற்குமானவர்.இன்று வடக்கில் பெரியார் சிந்தனைகளின் தேவை உணரப்படத் துவங்கி இருக்கிறது. இந்தியாவின் பன்மைத்துவத்தை அழித்து ஒற்றை இந்தியா எனும் முழக்கத்தை முன்னிறுத்துவோருக்கெதிரான வலுவான ஆயுதம் பெரியார் மட்டுமே. இதை இந்துத்துவர் தரப்பும் அறிந்தே இருக்கிறது. தாங்கள் எந்தவகையிலும் உட்செரித்துவிட முடியாத ஆளுமையாக, இந்துத்துவ தர்மசாஸ்த்திர சூத்திரங்களுக்குள் அடங்காத சிந்தனைச் தெறிப்புகளை என்னவாகக் கொள்வது என்பதற்கான பல எண்ணவோட்டங்களிலொன்றுதான் பாபா ராம்தேவின் “ அறிவுசார் தீவிரவாதி “ எனும் பதம். உள்ளபடியே ” அறிவு சார் தீவிரவாதம் ‘ எனும் பதம் பெரியாருக்கான அங்கீகாரமாகவும் கொள்ள முடியும். அல்லது இந்துத்துவ தீவிரவாதம் தனக்கான மாபெரும் சவாலை தன் வடிவிலேயே கண்டு கொண்டதாகவும் கருதலாம். எப்படியோ இன்றும் பெரியார் இந்துத்துவ தேசியவாதத்தின் கொடுங்கனவாக இருக்கிறார் என்பதே மகிழ்ச்சி.
கட்டுரையாளர் குறிப்பு

வீ . எம் . எஸ் . சுபகுணராஜன் இந்திய ஒன்றிய அரசின் வருவாய்துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர். திராவிட இயக்க ஆய்வாளர் / எழுத்தாளர் . தமிழில் பெரியாரிய சிந்தனைகள் குறித்து எழுதி வருபவர். ‘நமக்கு ஏன் இந்த இழிநிலை ‘ பெரியாரின் ஜாதிச் சங்க மாநாடுகள் உரைத் தொகுப்பு நூலின் தொகுப்பாசிரியர், ‘ சாதியும் நிலமும், காலனியமும், மூலதனமும் ‘, ‘சாதீய சினிமாவும் கலாச்சார சினிமாவும் ‘ நூல்களின் ஆசிரியர்.

கருத்துகள் இல்லை: