செவ்வாய், 2 ஏப்ரல், 2019

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்- காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

மாலைமலர் :நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: பாராளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டு அதில் உள்ள அம்சங்கள் குறித்து உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:- ஓராண்டுக்கு முன்னரே தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை தொடங்கி விட்டோம். அனைத்து தரப்பு மக்களின் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் தேர்தல் அறிக்கையை தயாரித்திருக்கிறோம். 5 முக்கிய அம்சங்களை கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.;
நியாய் எனப்படும் குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் வழங்கும் வகையில் ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தின்மூலம் நாட்டில் உள்ள 20 சதவீத ஏழைக் குடும்பங்கள் பயனடையும். பண மதிப்பிழப்பு பாதிப்புகளை சரிசெய்யும் வகையில் நியாய் திட்டம் இருக்கும். புதிய தொழில் தொடங்க 3 ஆண்டுகளுக்கு எந்த அனுமதியும் தேவையில்லை. கிராம ஊராட்சிகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்

2030ம் ஆண்டுக்குள் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும். விவசாய கடன்களை திருப்பி செலுத்தாவிட்டால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், வேலை நாட்கள் 150 நாட்களாக உயர்த்தப்படும். விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நீட் தேர்வை எதிர்க்கும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அந்தமுறை ரத்து செய்யப்படும். அதற்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்

கருத்துகள் இல்லை: