புதன், 3 ஏப்ரல், 2019

பெரம்பலூரில் விசிக நிர்வாகி காரில் 2.10 கோடி ரூபாய் பறிமுதல்?

ரெய்டு: சிக்கிய விடுதலைச் சிறுத்தைகள்!மின்னம்பலம் : பெரம்பலூரில் விசிக நிர்வாகி காரில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 2.10 கோடி ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்திருக்கும் நிலையில், இன்று (ஏப்ரல் 3) திருச்சியில் விசிக மாநில நிர்வாகியின் நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
மக்களவைத் தேர்தலையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணங்கள் இல்லாத ரூபாய் நோட்டுகளையும், நகைகளையும் பறிமுதல் செய்துவருகின்றனர். அந்த வகையில் நேற்று நள்ளிரவு பெரம்பலூர் மாவட்டம் பேரளி சுங்கச் சாவடி அருகே கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரெங்கராஜன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திருச்சியிலிருந்து அவ்வழியாக வந்த விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் தங்கதுரையின் காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.

காரின் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தியும் எதுவும் சிக்கவில்லை. இதனையடுத்து வாகனத்தை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்று, ஒவ்வொரு பகுதியாகக் கழற்றிச் சோதனை நடத்தியதில், காரின் பின்புறக் கதவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை வருமான வரித் துறையிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக தங்கதுரையிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். பறக்கும் படையினருக்கு வந்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விசிக நிர்வாகி நிறுவனத்தில் ஐடி ரெய்டு
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விசிக வர்த்தகர் அணி மாநில நிர்வாகி ராஜாவுக்குச் சொந்தமாக திருச்சி மன்னார்புரத்தில் இயங்கிவரும் எல்பின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று (ஏப்ரல் 3) திடீரென சோதனை நடத்தினர். இவர் மீது ஏற்கனவே நிலம் வாங்கித் தருவதாக ஏமாற்றியது உள்ளிட்ட புகார்கள் இருப்பதாகவும், இதற்காக முன்பு பொருளாதாரக் குற்றப் பிரிவுக் காவல் துறை சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை குறிவைத்து வருமான வரி சோதனையும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணை வீட்டில் பறக்கும் படையினரும் சோதனை நடத்தினர். தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரை மட்டும் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த சோதனையானது விமர்சனத்தை உள்ளாக்கிய நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விசிக நிர்வாகிக்குச் சொந்தமான நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடந்துவருவது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: