வியாழன், 4 ஏப்ரல், 2019

ஆந்திராவில் ஜெகன் வெற்றி பெறுகிறார் .. நடிகை ரோஜா அமைச்சராகிறார் ...? வீடியோ


மின்னம்பலம் : தமிழகத்தில் பிரபலமான நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்றத் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார்.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 11 ஆம் தேதி நடக்கும் இத்தேர்தலில் ஆட்சியைத் தக்க வைக்க சந்திரபாபு நாயுடுவும், ஆட்சியைப் பிடிக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும் கடுமையான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்கள்.
இந்நிலையில் தேர்தல் பணிகளை அடுத்து சன் டிவியில் தான் வழங்கி வந்த லொள்ளுப்பா என்ற நிகழ்ச்சி உட்பட பல்வேறு டிவி நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவிட்டு முழுக்க முழுக்க நகரியில் முகாமிட்டுள்ளார் ரோஜா.
தமிழக-ஆந்திர எல்லையான திருத்தணியை ஒட்டியிருக்கும் நகரியில் ரோஜாவுக்காக அவரது கணவர் ஆர்.கே. செல்வமணியும் தங்கி தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ரோஜா தொகுதிக்குள் வருவதை அத் தொகுதி மக்கள் ஆச்சரியமான விஷயமாக கருதவே இல்லை. தங்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காரணம் கேட்டால், ‘எங்கள் எம்.எல்.ஏ. அடிக்கடி தொகுதிக்கு வந்து செல்பவர். எப்போதாவது ஒருமுறை வந்தால்தான் அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் வரும். அவர் அடிக்கடி தொகுதிப் பக்கம் வருபவர் என்பதால் நாங்கள் ஆச்சரியப்பட ஏதுமில்லை” என்கிறார்கள்.
ரோஜாவை எதிர்த்துப் போட்டியிடும் தெலுங்குதேச வேட்பாளர் காலி பானு பிரகாஷுக்கு உட்கட்சியில் கடுமையான எதிர்ப்பு நிலவுவதால் ரோஜா மகிழ்ச்சியில் இருக்கிறார். மேலும் இந்த முறை ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ். ஆர் ஜெகன் மோகன் வெற்றி பெற்று முதலமைச்சராகும் பட்சத்தில் ரோஜாவுக்கு அமைச்சர் ஆகும் வாய்ப்பும் இருப்பதாக பிரச்சாரத்திலேயே சொல்லி ஓட்டுக் கேட்கிறார்கள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர்.

கருத்துகள் இல்லை: