திங்கள், 1 ஏப்ரல், 2019

பொள்ளாச்சி கொடுரம் .. திசை திருப்ப முயற்சித்த தினமலர் வகையறா ...

Sindhan : கோவை துடியலூரில் மிக மோசமான முறையில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட குழந்தை பற்றிய செய்தியில், தினமலர் இதழும் சில சங் பரிவார அமைப்புகளும் திட்டமிட்டு பொய்ச் செய்தி ஒன்றை பரப்புகிறார்கள். அது ஏன்?
குழந்தையை கொடூரமான முறையில் கொலை செய்திருக்கும் சந்தோஷ் பற்றி பல செய்திகள் இன்று பத்திரிக்கையில் வந்துள்ளன. இத்தனை நாட்கள் கைது ஏன் தாமதமானது? என்பதற்கான பதிலை உணர்ந்துகொண்டால்தான் ஏன் இவ்விசயத்தில் அரசியல் பேசப்படுகிறது என்பது புரியும்.
குழந்தை காணவில்லை என்றபோதே, அவருடைய பெற்றோர் உடனடியாக காவல்துறையை நாடினார்கள். அடுத்த நாள் குழந்தை பிணமாகத்தான் கிடைத்தார். பிறகு உடலை வாங்கமாட்டோம், குற்றவாளிகளை கைது செய் என வலியுறுத்தி ஊர் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். குழந்தையின் பிணத்தை வைத்துக் கொண்டு இப்படியொரு போராட்டம் நடத்த அவர்களுக்கு காரணம் இருந்தது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் வெளியான பின்னணியில் இனியும் ஒரு கொடுமை நடக்காத அளவுக்கு தண்டனை வாங்கித் தரவேண்டும் என குழந்தையின் அம்மா உள்ளிட்டு அனைத்து பெண்களும் ஆவேசமடைந்தனர். இந்த நிலையில் காவல்துறை உரிய குற்றவாளிகளை கைது செய்ய வாக்குறுதி கொடுத்தது.

குடும்பத்தாரும், உள்ளூர் மக்களும் சிலர் பெயர்களை குறிப்பிட்டு வழக்கு கொடுத்தார்கள். அதற்கான காரணம் வலுவானது. குழந்தையை தேடும் நடவடிக்கையில் ஊரில் உள்ள அனைவரும் ஈடுபட்டபோது, உள்ளூர் மக்களுக்கு குற்றமிழைத்தவர்கள் இவர்களாகத்தான் இருக்கும் என்று தெரிந்துவிட்டது.
ஆனால் கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் இந்துத்துவ அமைப்பில் விநாயகர் சதுர்த்தி விழாக்களை முன்னெடுப்போராக இருந்தனர். குழந்தையின் பெற்றோர் காவல்துறையை முழுமையாக நம்பினார்கள். அதைப் போலவே உடனடியாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். பிறகு மேலும் இருவர் என்று கைதுகள் தொடர்ந்தன.
விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போதே காவல்துறை நோட்டீஸ் விநியோகம் செய்தது. குற்றவாளி இவர்தான் என அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
அரசியல் தலையீடுகள் இருக்கலாம். விசாரணையை குழப்ப முயற்சி நடக்கலாம் என்ற சந்தேகத்தை இதுதான் கிளப்பியது. போலீஸ் தரப்பில் இருந்து, அதைப் போலவே ‘வட மாநில தொழிலாளர்கள்’ இருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை நடப்பதாக ஒரு செய்தி வெளியானது.
மாதர் சங்கமும், குழந்தையின் பெற்றோரும் காவல்துறையை விசாமல் வற்புருத்தினர். தேவையற்ற திசை திருப்பல் காவல்துறை மீதான நம்பிக்கையை வலுவிழக்கச் செய்யும் என்பதை குறிப்பிட்டார்கள். இந்த பின்னணியில் சந்தோஷ் மீது வழக்கு பதியப்பட்டது.
வழக்கை தாமதப்படுத்த யார் முயற்சித்தார்கள்? ஏன் தேவையற்ற திசைதிருப்பல்கள் முயற்சிக்கப்பட்டன? என்று வலுவாக எழுப்பிய கேள்வியும், எந்த அரசியல் பின்னணி இருந்தாலும் குற்ற வழக்குகளில் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது என தொடர்ந்து வற்புருத்தியும் இப்போது சில நடவடிக்கைகள் நடந்திருக்கின்றன.
இத்தனை அழுத்தங்களுக்கு பின் - பாஜகவின் சார்பில் வானதி சீனிவாசன், இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலைமை இப்படி இருக்க, யார் இவ்வழக்கில் குற்றவாளிகள் மீது வழக்கு பதியப்படவும், நியாயம் கிடைக்கவும் போராடுகிறார்களோ அவர்கள் மீதே அவதூறு செய்யும் வகையில் சிலர் பேஸ்புக்கில் பதிவுகள் செய்கிறார்கள். தங்கள் கைவசமுள்ள தினமலர் நாளிதழில் பொய்ச் செய்தியை எழுதியும் உள்ளனர்.
பேஸ்புக்கில் கேவலமான பதிவுகளை, பொய்ச் செய்தியை போடுகிறவர்கள் இந்துத்துவ அமைப்பின் பின்னணியில் இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல. கடந்த பல நாட்களாக விவாதத்தில் உள்ள இப்பிரச்சனையில் பெண் குழந்தை கொலைக்கு நியாயம் கேட்டு ஒரு பேஸ்புக் பதிவைக் கூட செய்யவில்லை என்பதுதான் விசயமே.
இன்னும் வழக்கு விசாரணை, நீதிமன்ற விசாரணை என பலகட்ட போராட்டங்கள் இருக்கின்றன. அனைத்திலும் மாதர் சங்கம் உடனிருக்கும், வாலிபர் சங்கம் உடனிருக்கும். இந்துத்துவ அமைப்புகளோ பொய்ப் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டுகின்றனர்.
இப்படி செய்து யாரை காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள் தினமலரே? இந்துத்துவ பதிவர்களே?
இனியாவது உங்கள் அற்ப அரசியலை நிறுத்த முயலுங்கள்

கருத்துகள் இல்லை: