சனி, 23 மார்ச், 2019

ஜெயலலிதா.. இந்து பத்திரிகையின் பச்சை பொய் .. அப்போலோவில் அம்மையார் குணமடைந்து விட்டார்..

LR Jagadheesan : ஜெயலலிதாவின் உடல்நிலையை பற்றி அவரது உடனுறை
தோழியும் அதிமுக கட்சியும் மட்டுமா பொய்த்தகவல்களை பரப்பினார்கள்?
ஆனப்பெரிய ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் என்னவெல்லாம் சொன்னார்கள் என்பதற்கான ஒரு சோற்றுப்பதமான சாட்சியங்கள் இந்த screenshotகள்.
ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று சொன்ன சி ஆர் சரஸ்வதி போன்ற அதிமுக கட்சிக்காரர்களை இன்றுவரை கலாய்க்கும் யாரும் அதே போன்ற பொய்களை அவர்களை விட அழகாக சொன்ன, பரப்பிய இந்த ஊடகங்களையோ ஊடக ஜாம்பவான்களையோ இன்றுவரை ஒரே ஒரு கேள்வி கேட்கவில்லை என்பது எவ்வளவு பெரிய விசித்திரம்? விடுபடல்?
அதுவும் ஒரு உலகறிந்த ஊடகம். உலக அளவில் இன்றுவரை மதிக்கப்படும் மிகச்சில இந்திய ஊடகங்களில் முதன்மையான ஊடகமும் கூட. உலக அளவில் இருக்கும் இயங்கும் ஆனப்பெரிய ஊடகங்களுக்கான பெரிய பெரிய சர்வதேச நிறுவனங்கள், அமைப்புகளில் எல்லாம் உறுப்பினராக இருந்தபடி இன்றுவரை ஆதிக்கம் செலுத்தும் ஒரு பிரதான இந்திய ஊடகமும் அதன் ஆனப்பெரிய ஆசிரிய பீடத்தை அலங்கரித்தவர்களும் ஜெயலலிதா குறித்து சொன்ன, பரப்பிய பொய்கள் கொஞ்சமா? நஞ்சமா?

தயவுசெய்து இந்த பதிவுகளை எல்லாம் பொறுமையாகவும் முழுமையாகவும் ஒரு எட்டு படியுங்கள். எத்தனையெத்தனை பொய்கள்? எப்படியெல்லாம் பரப்பப்பட்டன? அதுவும் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கும் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக வெல்ல வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக அதிமுக தலைவர்களும் அப்பல்லோ மருத்துவமனையும் ஜெயலலிதாவின் பெயரால் திட்டமிட்டு பரப்பிய பொய்களை எந்த எதிர்கேள்வியும் கேட்காமல் அப்படியே செய்தியாக்கி பரப்பிய அவலத்தின் சாட்சியம் இந்த செய்திகள். வேட்பாளர் பரிந்துரை மனுவில் கைநாட்டு வைத்த ஜெயலலிதா அதே வேட்பாளருக்கு ஆதரவாக மக்களை வாக்களிக்கக்கோரும் அறிக்கையில் கையெழுத்துபோட்டார் என்கிறது இந்த செய்தி. மின்னல்வேக மீட்சி என்பது இது தானோ?
https://www.thehindu.com/…/I-have-taken…/article16445239.ece
https://www.thehindubusinessline.com/…/j…/article9305119.ece
அத்தோடு ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பின் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த சந்தேகங்கள் பலமாக எழுந்த பின்னணியில் அவற்றைப் போக்கும் அப்பல்லோவின் நாடகத்தனமான செய்தியாளர் சந்திப்பை இவர்கள் விதந்தோதிய விதத்துக்கு சாட்சி இந்த செய்தி.
https://www.thehindu.com/…/For-medical-…/article16774494.ece
இந்த மூன்று செய்திகளும் ஊடகவியல் மாணவர்களுக்கு நிரந்தர பாடமாக வைக்கப்படவேண்டியவை. ஒரு செய்தியை ஊடகவியலாளர்கள் எப்படி அணுகக்கூடாது என்பதற்கான உதாரணமாக. அரசும் ஆளும் வர்க்கமும் சொல்லும் பொய்களை “தனிமனித அந்தரங்கம்” என்கிற பொய்படுதா போட்டு மூடி புனிதப்படுத்திய பெரும் தவறை செய்தவர்கள் இந்த ஊடகங்களும் ஊடகவியலாளர்களுமே. இதில் கூடுதல் கொடுமையாக “பெண்ணீயம்” வேறு தன் பங்குக்கு பல்லிளித்தது.
ஆளும்கட்சி இடைத்தேர்தலில் வெல்ல ஆயிரம் பொய்சொல்லும் என்பது இந்திய/தமிழக அரசியலில் இதற்கு முன்பும் நடந்தது தான். ஆனால் அத்தகைய பொய்களை அப்படியே எந்த எதிர் கேள்வியும் கேட்காமல் தங்களின் “நடுநிலை தவறாத நம்பகத்தன்மை” என்கிற ராஜமுத்திரையை அதற்குமேல் குத்தி பொதுமக்களிடம் பரப்பவேண்டிய தேவை இந்த ஊடகத்துக்கும் ஊடகவியலாளர்களுக்கும் ஏன் எழுந்தது? நடந்திருப்பது எவ்வளவு பெரிய விபரீதம்? நினைக்க நினைக்க அறுவெறுப்பும் ஆயாசமும் அல்லவா மிஞ்சுகிறது?
இத்தனைக்கும் இந்த ஊடகமும் ஊடகவியலாளரும் ஜெயலலிதாவுக்கு மிக மிக நெருக்கமானவர்கள். ஒருநாள் இருநாள் நெருக்கமல்ல. வாழ்நாள் நெருக்கம். எந்த அளவுக்கு நெருக்கம் என்றால் 2001 தமிழக சட்டமன்றத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேர தமாகா தலைவர் ஜி கே மூப்பனார் தயங்கி வாரக்கணக்கில் இழுத்தடித்துக் கொண்டிருந்தபோது அவரை ஜெயலலிதா தலைமையிலான கூட்டணிக்கு “இணங்கச்செய்ய தினம் தினம் தூதராக செயல்பட்ட” அளவுக்கு மிக நெருக்கம்.
அந்த அளவுக்கு நெருக்கமான ஊடகவியலாளரும் அவரது ஊடகமும் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து அதிமுக கட்சியும் ஆட்சியும் திட்டமிட்டு பரப்பிய பொய்களுக்கு துணைபோன விபரீதமெல்லாம் இன்றுவரை கேள்விக்குள்ளாகாமலே இருக்க என்ன காரணம்?
குறிப்பாக இது தொடர்பான செய்திகளை இந்த ஊடகமும் ஊடகவியலாளரும் மற்றுமுள்ள தமிழ்நாட்டு இந்திய ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் கையாண்ட விதம் சரியா?
இப்போது நினைத்துப்பார்க்கையில் உண்மையில் இவர்கள் யாரும் ஜெயலலிதாவின் உண்மையான ஆதரவாளர்களோ, நண்பர்களோ, ஜெயலலிதாவின் நலனை விரும்பியவர்களோ அல்ல என்றே சந்தேகிக்கத் தோன்றுகிறது. அத்தகைய உண்மையான ஜெயலலிதா நலம் விரும்பிகளாக இவர்களில் யாரேனும் ஒரே ஒருவராவது இருந்திருந்தால் அவரது சிகிச்சை குறித்த இத்தனை பொய்களுக்கும் இவர்கள் அனைவரும் இத்தனை தூரம் கூட்டாக துணைபோயிருக்கமாட்டார்கள்.
திராவிடர் இயக்கம், அதன் அரசியல் கட்சிப்பிரதிநிதியான திமுக, அதன் தலைவரான மு கருணாநிதி என்கிற மூன்று தரப்பார் மீதிருந்த தங்களின் சொந்த வரலாற்று வன்மத்தை தீர்த்துக்கொள்ள இவர்களுக்கு பெரிதும் தேவைப்பட்ட, பயன்பட்ட பலவித கருவிகளில் ஜெயலலிதாவும் ஒருவர் என்பதாக மட்டுமே இவர்கள் அவரை பார்த்தார்கள், பயன்படுத்திக்கொண்டார்கள் என்றே சந்தேகிக்கத்தோன்றுகிறது. அதனால் தான் அந்த ஆயுதத்தை அதன் ஆயுள் முடியும்வரை அதிமுகவினர் எப்படி பயன்படுத்திக்கொண்டு தூக்கியெறிந்து கடந்து சென்றுவிட்டார்களோ அப்படியே இவர்களும் கடந்தார்களே தவிர ஜெயலலிதாவுக்கு நன்மை செய்ய ஒருநாளும் நினைக்கவில்லை போலும்.
அப்படி நினைத்திருந்தால் தமது நேசத்துக்குரிய ஜெயலலிதாவின் இறுதிநாட்களில் அவரது உண்மை நிலையை ஊருக்கு சொல்லவேண்டிய தம் அடிப்படை ஊடக அறத்தை இவர்கள் இப்படி தொலைத்திருக்க மாட்டார்கள். இவர்கள் ஜெயலலிதாவுக்கும் நாணயமாக இருக்கவில்லை. தாம் சார்ந்த ஊடகத்தொழிலுக்கும் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை.
பின் குறிப்பு: ஜெயலலிதாவின் இறுதிநாட்களில் நடந்த ஒவ்வொன்றும் சசிகலாவும் அப்பல்லோவும் மட்டுமே நடத்தியவை அல்ல. ஒட்டுமொத்த அதிமுக தலைவர்களும் அமைச்சர்களும் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழக அரசாங்க அதிகார வர்க்கமும் மத்திய அரசும் அவர்கள் அனுப்பிய AIIMS மருத்துவர்கள் குழுவும் தமிழ்நாட்டு/இந்திய ஊடகங்களும் சேர்ந்து செய்த கூட்டுக்களவாணித்தனம். இது ஜெயலலிதா என்கிற தனி மனுஷியின் இறுதிநாட்கள் பற்றிய தனிப்பட்ட பிரச்சனை அல்ல. ஏழுகோடி தமிழர்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டின் முதல்வரின் இறுதிநாட்கள் எப்படி இருந்தன? அவர் உடல்நிலைகுறித்து உண்மைகள் உலகுக்கு சொல்லப்பட்டதா? இல்லை திட்டமிட்டு பொய்கள் பரப்பப்பட்டதா? போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை தெரிந்துகொள்வது தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமை. தமிழக கிராமங்களில் வயதான பெற்றோரை வாரிசுகளே “தலைக்கூத்தல்” உட்பட பவேறு வழிகளில் கொல்லும் கொடுமைகள் பற்றிய செய்திகள் குற்ற வழக்குகளாக பதியப்பட்டு விசாரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் ஏழுகோடி பேர் தம்மை ஆள தேர்ந்தெடுத்த ஒரு முதல்வரின் இறுதிநாட்கள் எப்படி, எதற்காக இத்தனை இத்தனை பொய்களால் மூடி மறைக்கப்பட்டது என்பது அவசியம் பதில்காண வேண்டிய கேள்விகளே. சட்டப்படிக்கு இதற்காக யாரும் தண்டிக்கப்படாமலே கூட போகலாம். சட்டத்தின் கீழ் அதற்கு வழி இல்லாமலும் போகலாம். ஆனால் இதில் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமான பாடங்கள் பாக்கியிருக்கின்றன. குறிப்பாக ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும். அதற்காகவேனும் இதன் முழு உண்மைகளும் வெளிக்கொண்டுவரப்படவேண்டும்.

கருத்துகள் இல்லை: