திங்கள், 18 மார்ச், 2019

எடப்பாடி பழனிசாமி : தேர்தல் செலவு பணம் கடைக்கோடி தொண்டனுக்கும் போகும் .. அம்மாவின் வெற்றியின் ரகசியம்.

மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: பணம் வந்து சேரும்: வெளிப்படையாகப் பேசிய எடப்பாடி“வேட்பாளர்களை அறிவித்த கையோடு இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தையும் நடத்தி முடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. முதலில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் வந்து இறங்க... பின்னாலேயே எடப்பாடியும் வந்து சேர்ந்தார்.
துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ். கூட்டத்தில் பேசும்போது, ‘அம்மா இல்லாமல் நாம் சந்திக்கும் இரண்டாவது தேர்தல் இது. ஆர்.கே.நகரில் நாம் கோட்டை விட்டது போல இப்போதும் இருந்துவிடக் கூடாது. இங்கே சிலர், நாங்க ஈ.பி.எஸ். அணி, இன்னும் சிலர் ஓ.பி.எஸ். அணி என்றெல்லாம் சொல்லிட்டு இருக்காங்க. அப்படி எந்த அணியும் இங்கே இல்லை. அதிமுக என்ற இயக்கம்தான் இருக்கிறது.
எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதைத்தான் நாங்கள் ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகிறோம். அப்படி நீங்க எல்லோரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே நாம இந்தத் தேர்தலில் கரையேற முடியும். இதுல நாம ஜெயிச்சா மட்டும்தான் நம்ம இருப்பைத் தக்க வெச்சுக்க முடியும். இதுல நாம எங்கே தோற்றாலும் அது நம் ஒவ்வொருவருக்கான தோல்வியும்தான்.
போனவங்களை பத்தி யாரும் கவலைப்பட வேண்டாம். இங்கே நம் கூட்டணிக்குள் பலம் வாய்ந்த பலரும் வந்திருக்காங்க. நம் கூட்டணியின் பலம் கூடிட்டுதான் இருக்கே தவிர எங்கேயும் நாம் குறையவில்லை. நான் திரும்பவும் சொல்றது எல்லோரும் ஒற்றுமையோடு வேலை பார்க்க வேண்டும் என்பதுதான். 40தான் நமது டார்கெட். ஆனால், குறைந்தது 20 தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும்...’ என்று முடித்திருக்கிறார்.
அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். ‘நான் சொல்ல நினைத்ததை எல்லாம் அண்ணன் ஓ.பி.எஸ். சொல்லிவிட்டார். அம்மா இருந்த சமயத்தில் தேர்தல் வேலைக்காகப் பத்து ரூபாய் பணம் கொடுத்தாலும் அது கட்சியில் கடைமட்டத்தில் இருப்பவர்களுக்குப் போய் சேர வேண்டும் என்றால் சேரும். இடையில் யாரும் அதில் கை வைக்க மாட்டார்கள். அதுதான் அம்மாவின் வெற்றியின் ரகசியம். இந்த முறையும் அம்மா காட்டிய வழியில் நான் பயணிக்க விரும்புகிறேன். தேர்தல் செலவுக்கான பணத்தைக் கொடுத்தால், அது முறையாக எங்கே யாருக்குப் போகணுமோ அங்கே போய்ச் சேரணும். இடையில் இருக்கிறவங்களே அதை அப்படியே வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிடக் கூடாது. இந்த விஷயத்தில் நான் மிகவும் கவனமாக இருப்பேன். எல்லாத்துக்கும் எனக்கு கணக்கு வேணும்.
நேற்று வேட்பாளர் அறிவிச்சதுமே ஒருத்தர் என்கிட்ட வந்து செலவுக்கு எப்போ பணம் வரும்னு கேட்டாரு. அதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். உங்கள் தொகுதி செலவுக்கான பணம் எந்த நேரத்துல எப்படி வரணுமோ அப்படி உங்களுக்கு வந்து சேரும். அதைச் சரியாகக் கொண்டு போய் சேர்க்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது. இதைப் பற்றிய மற்ற விஷயங்களை எல்லாம் உங்களுக்குப் பிறகு தெரியப்படுத்துறோம். எல்லோரும் உற்சாகமாகப் போய் வேலைகளைப் பாருங்க. அம்மா வழியில் நாம செயல்படுறோம்னு சொன்னதால இன்னொரு விஷயத்தையும் உங்களுக்கு சொல்றேன். இங்கே நம்ம கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கு. உங்களுக்குத் தேவையானது எல்லாம் கிடைக்குது. அப்படியும் நாம தோற்றால் அந்தத் தோல்விக்கு நீங்கதான் பொறுப்பேற்கணும். நான் வேட்பாளரை எதுவும் கேட்க மாட்டேன். உங்களைத்தான் கேட்பேன். உங்க மாவட்டச் செயலாளர் பொறுப்பில் நீங்க நீடிக்கணும்னா உங்க தொகுதி வேட்பாளரை ஜெயிக்க வைங்க. அப்புறம் என் மேல வருத்தப்படுவதில் பிரியோஜனம் இல்லை” என்று அதிரடியாக முடித்திருக்கிறார்.
எடப்பாடியா இப்படி அதிரடியாகப் பேசினார் என நம்ப முடியாத அதிர்ச்சியுடன் கிளம்பியிருக்கிறார்கள் மாவட்டச் செயலாளர்கள்.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

கருத்துகள் இல்லை: