புதன், 20 மார்ச், 2019

நீர்வ மோடி கைது . கைவிலங்கு மாட்டப்பட்டு லண்டன் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்

நிரவ் மோடிவிகடன் ; மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே அவர் மீதும், அவரின் குடும்பத்தினர் மீதும் சி.பி.ஐ, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்திவந்தனர். இது பலரின் கவனத்துக்கு வரும் முன்னரே அவரும், குடும்பத்தினரும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர். அவர்களைக் கண்டறிந்து மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வரும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டினர்.
நிரவ் மோடி பிரிட்டனில் இருப்பதாகத் தகவல் கிடைத்ததிலிருந்து அமலாக்கத் துறை  நிரவ் மோடியை நாடு கடத்திக்கொண்டு வர தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இந்திய அமலாக்கத்துறை சார்பில் பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் மனு ஒன்றும் அளிக்கப்பட்டது. அந்த மனுவில் உள்துறை அமைச்சகம் கையொப்பமிட்டு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்துக்கு அனுப்பியது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம், நிரவ் மோடியைக் கைது செய்ய வாரன்ட் பிறப்பித்தது.

இந்நிலையில் நிரவ் மோடியை லண்டன் காவல்துறையினர் இன்று கைது செய்தனர். இன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நிரவ் மோடி ஆஜர்படுத்தப்படுவார்.
அண்மையில் லண்டன் வீதிகளில் 10,000 பவுண்ட் மதிப்புள்ள ஜாக்கெட்டை அணிந்து நிரவ் மோடி வலம் வந்தது ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. எந்தக் கவலையுமின்றி மோசடி மன்னன் லண்டனில் வலம் வருவதாக இந்திய இணையவாசிகள் கடுகடுத்தனர். அவர்களின் சாபமோ என்னவோ ஸ்காட்லாந்து யார்ட் என்று அழைக்கப்படும் லண்டன் காவல்துறையால் நிரவ் மோடி கைது செய்யப்பட்டுள்ளார். லண்டன் நீதிமன்றத்தில் நிரவ் மோடி மீதான பண மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவரை நாடு கடத்த பிரிட்டன் அரசு உத்தரவிடும்.
இது தொடர்பாக ஸ்காட்லாந்து யார்ட் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில். `நிரவ் தீபக் மோடி(48) (24.02.71) என்பவரை இந்திய அதிகாரிகள் சார்பாக செவ்வாய், மார்ச் 19 அன்று ஹோல்போர்னில் கைது செய்திருக்கிறோம். நாளை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: