வெள்ளி, 29 மார்ச், 2019

ஆந்திரா பிரமாண்ட வெற்றியை நோக்கி ஜெகன் மோகன் ரெட்டி ? சந்திரபாபு நாய்டு தோல்வி முகம்?


தினமலர் :லோக்சபா தேர்தலில், ஆந்திராவில், ஜெகன்மோகனின், ஒய்.எஸ்.ஆர்.காங்., பெரும்பாலான இடங்களை வாரி சுருட்டும் என, கருத்து கணிப்புகளில் தெரியவந்துள்ளன. அதனால், தெலுங்கு தேசம் கட்சி நடுக்கத்தில் உள்ளது.
ஆந்திராவில் உள்ள, 25 லோக்சபா தொகுதிகளில், 2014ம் ஆண்டு தேர்தலில், தெலுங்கு தேசமும், பா.ஜ.,வும் கூட்டணியாக போட்டியிட்டன. தெலுங்கு தேசம், 15; பா.ஜ. 1 இடம் பெற்றது. ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர்.காங்., எட்டு இடங்களையும், காங்., ஒரு இடத்தையும் பிடித்தன. இந்த தேர்தலில், பா.ஜ., கூட்டணி உடைந்து விட்டது. அதனால், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்., - பா.ஜ., மற்றும் காங்., என, நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதில் தெலுங்கு தேசம் கட்சிக்கு செல்வாக்கு சரிந்து வருவதால், அந்த இடத்தை பிடிக்க, ஒய்.எஸ்.ஆர்.காங்., பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறது. இதற்கு நல்ல வெற்றியும் கிடைத்து உள்ளது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு கருத்து கணிப்புகள், ஒய்.எஸ்.ஆர்.காங்., 22 இடங்கள் வரை கைப்பற்றும் என, தெரிவித்துள்ளன. அதனால், ஜெகன் மோகன் ரெட்டிக்கு, அதிக மவுசு ஏற்பட்டு உள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்., கட்சிக்கு, 49 முதல், 50 சதவீதம் வரை ஓட்டுகள் கிடைக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.
2014 தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சியின் ஓட்டு சதவீதம், 40.5 சதவீதமாக இருந்த நிலையில், இந்த தேர்தலில், 36 சதவீதமாக குறையும் என, கணிக்கப்பட்டு உள்ளது. எனவே, தெலுங்கு தேசத்துக்கு, இரண்டு அல்லது மூன்று இடங்கள் மட்டுமே கிடைக்கலாம். ஆனால், காங்., மற்றும் பா.ஜ.,வுக்கு ஒரு சீட்டுக்கு கூட வாய்ப்பு இல்லை என, கணிப்புகளில் தெரியவந்துள்ளது

கருத்துகள் இல்லை: