செவ்வாய், 26 மார்ச், 2019

ராதாரவியும் சரத்குமாரும் தினகரன் கட்சிக்கு ஆதரவா?

மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை:  கேட்டை டூ கோட்டை- தினகரனை கூல் செய்த அனுராதா“ இன்று மதியம் ஒன்றரை மணி முதல் இரண்டரை வரை அமமுக வேட்பாளர்கள் ஒரு வழியாக தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டார்கள். இன்று மார்ச் 26 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் குக்கர் சின்னம் பற்றிய வழக்கு விசாரணை தொடங்கியது முதல் 11.40 மணிக்கு தீர்ப்பு வந்தது வரை அனைத்துத் தகவல்களும் மின்னம்பலம் மதியப் பதிப்பில் செய்தியாக வந்திருக்கின்றன.
குக்கர் இல்லை என்ற தீர்ப்பு வந்ததும் தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் அப்செட் ஆனாலும், அமமுக வேட்பாளர்கள் அனைவருக்கும் ஒரே சின்னம் வழங்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட தகவல் கிடைத்ததும் பெரிய நிம்மதி அடைந்தார்கள். காரணம், இந்த உத்தரவும் இல்லையென்றால் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலை வந்திருக்கும்.

தீர்ப்பு பற்றிய தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் இருந்த தனது வழக்கறிஞர்களுடன் பேசி உறுதிப் படுத்திக் கொண்ட தினகரன், ஏற்கனவே தான் உத்தரவிட்ட மாதிரி அனைத்து வேட்பாளர்களையும் மதியம் 1.30 முதல் 2.30 வரை வேட்பு மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். வேட்பாளர்கள் அனைவருமே அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு சில கிலோ மீட்டர்கள் தூரத்தில்தான் காத்திருந்தனர். தகவல் வந்ததும் ஏற்கனவே திட்டமிட்டபடி சுயேச்சை வேட்பாளர் என்ற வகையில் தயார் செய்து வைத்திருந்த வேட்புமனுவை அந்தந்த தேர்தல் அதிகாரிகளிடம் தாக்கல் செய்துவிட்டனர்.
தேர்தல் கமிஷன் இழுத்தடிப்பு, வழக்குத் தாமதம் என்று அமமுக வேட்பாளர்களுக்கு வேட்பு மனு தாக்கல் அவகாசம் முடியும் தருவாயில் நேரம் ஒதுக்கப்பட்டாலும், அதுவும் தங்களுக்கு நல்ல நேரமே என்கிறார்கள் அமமுகவினர். 25 ஆம் தேதியே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிடும் என்று எதிர்பார்த்து தினகரனின் மனைவி அனுராதா, குடும்ப ஜோதிடரின் ஆலோசனைப்படி இன்று 26 ஆம் தேதி மதியம் 1.30 மணியில் இருந்து 2.30 க்குள்தான் வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தாராம். இன்று மதியம் கேட்டை நட்சத்திரம், சித்த யோகம், கடக லக்கனம், செவ்வாய், சூரியன் ஓரை இருப்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய இதுதான் சரியான நேரம் என்று ஜோதிடர் சொல்லியுள்ளார். ஆனால் வழக்கு விசாரணை இன்றும் நடந்து தீர்ப்பும் 12 மணிக்குள் வந்துவிட, ஏற்கனவே அனுராதா பார்த்து வைத்த நல்ல நேரத்திலேயே மனு தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டனர் அமமுக வேட்பாளர்கள். ‘கேட்டை கோட்டையாளும் கவலைப்படாதீங்க’ என்று வேட்பு மனு தாக்கல் முடிந்து தினகரனிடம் சொன்னாராம் அனுராதா.
இன்னொரு பக்கம் வேட்புமனு தாக்கலின் போது ஜெயா டிவி நிருபர்கள், கேமரா மேன்களுக்கு பல கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. ஆளுங்கட்சியினர் சதிவலை செய்வார்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது தேர்தல் அதிகாரிகள் சீட்டில் இல்லாமல் இருப்பார்கள், நேரம் கடந்துவிட்டது என்று தட்டிக் கழிக்கக் காரணம் சொல்வார்கள். அதனால் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அறையில் உள்ள கடிகாரத்தை ஷூட் செய்யுங்கள் எனப் பல ஆலோசனைகள் ஜெயா டிவி கேமராமேன் மற்றும் நிருபர்களுக்கு வழங்கப்பட்டன. அதன்படியே வேட்பு மனு தாக்கல் நடந்த எல்லா இடத்திலும் ஜெயா டிவி கேமரா மேன்கள் வளைத்து வளைத்து வீடியோ எடுத்தனர்” என்று முடிந்தது மெசேஜ்.
அதை காப்பி செய்துகொண்ட ஃபேஸ்புக் தனது மெசேஜை பதிவிட்டது.
“இன்று காலை திட்டமிட்டு இருந்த அத்தனை பிரச்சாரங்களையும் கேன்சல் செய்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மாலையில் முதல்வர் பிரச்சாரம் செய்வார் என்று மட்டும் அதிமுக தரப்பில் சொல்லப்பட்டு இருந்தது. ஆனால், உடல்நிலை மட்டும் காரணம் இல்லையாம். முதல் காரணம், சரத்குமார்.
அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த சரத்குமார் எடப்பாடியை சந்திக்க அவரது வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது எடப்பாடி, ‘அம்மா இருந்த வரைக்கும் நீங்க அதிமுகவுக்கு ஆதரவாகத்தான் இருந்தீங்க. இனியும் நீங்க எங்க கூடத்தான் இருக்கணும். இப்போ சீட்டை பற்றியெல்லாம் நீங்க கவலைப்பட வேண்டாம். அடுத்த தேர்தலில் நீங்க எதிர்பார்க்காத வகையில் எல்லா நல்லதும் பண்ணித் தர்றேன். நீங்க தொடர்ந்து நம்ம கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யணும்..’ என்று கேட்டிருக்கிறார்.
சரத்குமாரும் அதற்கு ஓகே சொன்ன பிறகு ராதாரவி விஷயத்தைப் பேசியிருக்கிறார். ‘ரெண்டு வாரத்துக்கு முன்பே ராதாரவி இங்கே வருவது தொடர்பாக பேசிட்டுதான் இருந்தாரு. இப்போ திடீர்னு ஒரு சிக்கலில் மாட்டிகிட்டாரு. உடனடியாக கட்சியில் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட அவரு ரெடியாக இருக்காரு. நீங்க சொன்னால் அவரோட சந்திப்புக்கு ஏற்பாடு செய்துடுறேன்.’ என்று கேட்டாராம் சரத்குமார்.
அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘நீங்க சொல்ற விஷயம் எனக்கு தெரியும். அவரை இப்போ கட்சியில் சேர்ப்பது என்பது சரியா இருக்காது. பொள்ளாச்சி விஷயத்துலயே அதிமுகவை ஏதோ பெண்களுக்கு எதிரான கட்சி என்பதை போல ஒரு தோற்றத்தை உருவாக்கிட்டு இருக்காங்க. இப்போ நயன்தாரா விவகாரத்துல ராதாரவி சர்ச்சையில மாட்டிக்கிட்டாரு. அவரை அதிமுகவில் சேர்த்தாலோ அல்லது அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அழைத்தாலோ எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்யும். அது நமக்கு சங்கடத்தைதான் உண்டாக்கும். நமக்கு மட்டுமல்ல... அவருக்கும் கூட அது சங்கடமாகத்தான் இருக்கும். இன்னும் 20 நாளில் எல்லாம் முடிஞ்சுடும். அதுவரைக்கும் அவரை பட வேலைகளில் தொடர்ந்து கவனம் செலுத்த சொல்லுங்க. அதுக்கு பிறகு நாம தாராளமாக சேர்த்துக்கலாம்.’ என்று சொன்னாராம். ஆனால் சரத்குமார் விடாமல், ‘அவரு ரொம்பவும் மன அழுத்தத்தில் இருக்காரு. இங்கே வந்தால் கொஞ்சம் சரியாகும்னு நினைச்சேன்..’ என்று சொல்ல... ‘அப்படி ஒரு ரிஸ்கை இந்த நேரத்தில் எடுக்க முடியாது. நீங்க புரிஞ்சுக்கோங்க’ ன சொல்லி அனுப்பிவிட்டாராம் முதல்வர்” என்ற மெசேஜை பதிவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

கருத்துகள் இல்லை: