வியாழன், 28 மார்ச், 2019

தமிழக காதலனை தேடி சென்னை வந்த இலங்கை பெண் தூக்கில் .. தற்கொலையா கொலையா?

தினகரன் :சென்னை: சமூக வலைதளம் மூலம் தமிழக வாலிபரை காதலித்த இலங்கை பெண் காதலனை காண சென்னை வந்திருந்த போது தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் மலர்மேரி.
இவர் காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கபெருமாள்கோவிலை அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் அவினாஷ் என்ற சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் வாலிபரை சமூக வைலதளம் மூலம் பழகி காதலித்து வந்தார். கடந்த 7 மாதங்களாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் சமூகவலைத்தளம் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கையில் இருந்து விமானம் மூலம் மலர்மேரி தனது காதலனை பார்க்க சென்னை வந்தார். மலர்மேரியை அவினாஷ் ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்தார். இந்த ஜோடி சென்னையில் பல இடங்களுக்கு ஒன்றாக மகிழ்ச்சியாக சென்று சுற்றி வந்துள்ளனர்.


இந்நிலையில் கடந்த 25-ம் தேதி மலர்மேரியை இலங்கைக்கு திருப்பி அனுப்ப அவினாஷ் விமான பயணச்சீட்டு எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் மலர்மேரி இலங்கை செல்ல மறுத்து விட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது....  பின்னர் அவர் என்ன செய்தால் என்பது விசாரிக்க வேண்டிய விடயமாகும்
 அவினாஷ் மலர்மேரியை விடுதியில் தங்க வைத்துவிட்டு நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று விட்டார் என்று கூறப்படுகிறது .

மலர்மேரி தங்கி இருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.

இதனையடுத்து ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மலர்மேரி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இந்த தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இலங்கை பெண்ணின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து அவரது காதலர் அவினாஷிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: