
1788-ல் சென்னை வந்த இங்கிலாந்தின் தாமஸ் பாரி, வணிகராக உரிமம் பெற்று தொழிலை ஆரம்பித்தார். 1795ல் ‘தாமஸ் பாரி அண்ட் கோ’வாக உருவானது. 1819-ல் ஜான் வில்லியம் டேர் என்பவருடன் இணைய ‘பாரி அண்ட் டேர்’ நிறுவனமாக மாறியது.
1824ல் காலரா நோயால் பாதிக்கப்பட்டு பாரி மரணமடைகிறார். இவருடைய வணிக பங்குதாரர் டேர் தலைமையில் பாரி நிறுவனம் வளர ஆரம்பித்த பிறகு, ‘ஈஸ்ட் இந்தியா டிஸ்டில்லரி (EID) அண்ட் சுகர் ஃபேக்டரி’ உருவானது. 1939ல் டேர் ஹவுஸ், ‘ஆர்ட் டிகோ’ என்ற கட்டட பாணியில் உருவாக்கப்பட்டது. அன்று தாமஸ் நிறுவிய வணிகக் கட்டடம் இன்று, ‘ஈ.ஐ.டி.பாரி இந்தியா லிட்’ என அழைக்கப்படுகிறது.
அந்தக் கட்டடம் இருக்கும் வரிசையில், நூற்றுக்கணக்கான கடைகள், பல்லாயிரக்கனக்கான தொழிலாளர்கள், வீடற்ற – முகவரியற்ற மக்களுக்கு நிரந்தர முகவரியாக இருக்கும் அந்த இடம் தான் பாரீஸ் கார்னர்.
சிக்னலில் போக்குவரத்து காவலர் இல்லததால் குறுக்கும் நெடுக்குமாக இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நெருக்கடியில் புகையை கக்கியவாறே ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. சென்னை உயர்நீதி மன்றத்தின் ஆவின் கேட் அருகே வழக்கறிஞர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார்கள். ஆர்ப்பாட்டம் செய்தவர்களை மறைத்துக் கொண்டு பாதி சாலையில் சுற்றி நின்றிருந்தது போலிசு.

சாலையோர நடைபாதையில் வயதான பாட்டி ஒருவர் பூக்களை கட்டிக்கொண்டிருந்தார். ஐம்பது வயதைக் கடந்த ஒருவர் வெறுமனே ஐந்து வாட்ச்களை மட்டும் விற்பனைக்கு வைத்து யாரேனும் வருவார்களா என்று காத்துக்கிடந்தார். சற்று தொலைவில் கும்பலாக அமர்ந்து பெண்கள் பூவை கட்டிக்கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு அருகிலும், படிகட்டுகளிலும் அமர்ந்து ஓட்டலில் இருந்து வாங்கி வந்திருந்த உணவை சமமாக பங்கிட்டு சாப்பிட்டு கொண்டிருந்தர். இவற்றை எல்லாம் பார்த்தும் பார்க்கததுமாக அவசர அவசரமாக கடக்க முயன்ற நாகரீக மனிதர்கள்..
அதே நடைபாதை ஓரம் ஒரு ஹாலில் கருத்தரங்கம் நடக்கவிருப்பதற்கான செய்தியை தெரிவிக்கும் வகையில் ஒரு பேனரை இரண்டு இளைஞர்கள் கட்டிக் கொண்டிருந்தர். அங்கிருந்த டீ மற்றும் பழரசக் கடைகளில் வழக்கறிஞர்களின் ஆக்கிரமித்திருந்தனர்.


“இங்க தான்னா?”
இதான் பாக்குரியே இந்த ரோடு தான் எங்க வீடு… பொறந்தது வளந்தது எல்லாமே இங்க தான்.. இந்த மீன் பாடி வண்டி தான் சொந்தம்… லோடு வச்சிக்கினு மாடு மாதிரி மெரிக்கனும். அன்னன்னிக்கு ஒழச்சா தான் சோறு… மூனு வேளயும் ஒட்டல்ல தான் துன்னனும். வூடு இருந்தாதானே வூட்ல ஆக்க முடியும்… அதான் ஓட்டல்லு…
“ஞாயித்து கெழம மட்டும் தான்…. இங்கயே சோறு ஆக்குவோம்.. எப்படின்னு கேக்குறியா?

கல்யாணம் காச்சி எதுக்குமே துட்டு இருக்காது…. எங்கள நம்பி எவனும் கடனும் கொடுக்க மாட்டான்… மிஞ்சி போனா தண்டல் எடுப்போம். அதுவும் பத்தாயிரம் தான் எங்கள நம்பி கொடுப்பான்.. ஒரு நாளைக்கு எங்களால நூறு ரூபாதான் கட்ட முடியும்னு…அதுக்கு ஏத்த மாதிரி கொடுப்பானுங்க.
பசங்க எல்லாம் கவெர்மெண்ட் ஸ்கூல்ல் படிக்குதுங்க… எல்லாம் எட்டாவது, பத்தாவது அவ்ளோ தான் படிக்கும்.. இங்க எல்லோருக்கும் அதிக பட்ச படிப்பே அதுதான்.
கொழந்த குட்டிக்கு பிரச்சனன்னா,,, கே.எம்.சி. இல்லனா ஸ்டான்லி ஆஸ்பித்திரிக்கு கூட்டினு போவோம்… கல்யாணம், காதுகுத்தின்னா சமுதாயக் கூடம்… ஒரு சிலருங்க மண்டபத்துல வைப்பாங்க… அவங்க வேலை செய்யுர ஓனருங்க கிட்ட பணம் வாங்கிப்பாங்க” என்று சொல்லி முடிப்பதற்குள் வேலை அவரை வலுக்கட்டாயமாக இழுத்ததால் அவசர அவசரமாக வண்டியில் இருந்து இறங்கி ஓடினார்.
அருகில்……ஆர்வமாக பகடை விளையாடிக்கொண்டிருந்த கூட்டத்தில் இருந்து சத்தம் அதிகரித்தது….அதனை பொருட்படுத்தாமல் ஸ்ரீதர் பேச ஆரம்பித்தார்.
”இதையெல்லாம் கெட்டு இன்னா பன்ன போறீங்க…?

இங்க இருக்க யாருக்கும் வீடு கெடையாது… ஆனா ரேசன் கார்டுல இருந்து, ஆதார் கார்டு வரைக்கும் வச்சிருகோம்……ஒரு சிலருக்கு மட்டும் தீவுத்திடல்ல குடிசை இருக்கு… எங்களுக்கும் அங்க இருக்கு.. அதுகூட எங்க ஆயா அந்த எடத்த புடிச்சி குடிசை போட்டுச்சி….. இல்லனா அதுகூட இருந்திருக்காது.
மழக்காலம் வந்தா பெரும்பாடு பாடு தான். சொல்லி மாளாது… புருசன் பொண்டாட்டி, குழந்தைங்க.. எல்லோரும்.. மூடிய கதவாண்ட (கடைகளின் ஷெட்டர்) போயிட்டு ஒண்டிக்குவோம்.. சாரல் அடிக்கும்.. அதையெல்லாம் அட்ஜெஸ் பன்னி படுத்துப்போம்.. காலையில எழுந்து திரும்ப வேலைக்கு போகனும்,…..!

எங்களுக்கு எல்லா நாளும் வேலை கெடைக்காது….. வீட்டுல இருக்க பொம்பளங்க பூ கட்டி விப்பாங்க. அதுல கெடக்கிற காச வச்சி அன்னிய பொழுதை கழிப்போம்… அந்த நேரம் ஒரு நாளைக்கு குறைந்தது இருபது டீ குடிப்பொம். அதான் எங்க சாப்பாடே…..!

ஒரு நிமிசம் பொண்டாண்டியோட தனியா இருக்கனும்னு ஆசை தான்.. இந்த உணர்வுகளை எப்படி சொல்லுறதுன்னு தெரியல.. எவன் வருவான்… போவானு தான் தான் சிந்தனை இருக்கும்….. வேற என்ன சொல்லுறது சொல்லுங்க…?
எங்க பொழப்பு இப்படி இருக்குதேன்னு எவனும் எங்கள மதிக்க மாட்டனுங்க.. முக்கியமா போலிசை சொல்லனும்… ரோட்டுல கடை போட்டாலே அடிச்சி புடுங்கி வாரீக்கினு போயிடுவான்…
நாங்க… ரோட்டுல போறதா பார்த்தாலே அவனுக்கு கடுப்பாகியிம்.. கொஞ்சம் டிராபிக் ஆனாலும்..டேய்…ங்…த்தா… சீக்கிரம் எடுடான்னு” சொல்லுவான்..
இதுவே கார் காரன்னா கிட்ட போயிட்டு….. சார்..கொஞ்சம் வண்டிய எடுங்கன்னு சொல்லுவான்….. அதுவே கார் ஓட்டுறது எங்கள மாதிரி ஆளா இருந்தா எங்க கிட்ட சொல்லமாட்டங்க… ஓனர் கிட்ட போயிட்டு சொல்லுவாங்க… நாங்க….. கூலிங்க தானே.. அதான் இவனுங்கள சாருன்னு கூப்பிடனுமான்னு……கவுரவம் பார்ப்பானுங்க….” அவனுங்க கிட்ட நாம எதுவும் பேச முடியாது…..” என்று சொல்லிவிட்டு அமைதியானார்.
-வினவு புகைப்படச் செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக