

அந்த வகையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே தனக்கு நெருக்கமான நட்பில் இருக்கும் ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் சரத் பவார், முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி ஆகியோரை மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமென வைகோ கேட்டிருந்தார். மேலும், தமிழகத்தில் தி.மு.க-வின் தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க கூட்டணிக் கட்சிகள் அனைத்துக்கும் வைகோ அழைப்பு விடுத்திருந்தார். வைகோவின் இந்த அழைப்பினை ஏற்று அனைவரும் ம.தி.மு.க மாநாட்டில் கலந்துகொள்வதாக உறுதியளித்தனர்.

இதில் செம ஹேப்பியான வைகோ, மாநாட்டினைத் தூள் கிளப்பிவிட வேண்டும் எனப் பலமான ஏற்பாடுகளைச் செய்தார். ஈரோடு முழுக்க மாநாட்டுக்கு வரும் தலைவர்களை வரவேற்று பேனர்கள் மற்றும் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டன. மாநாட்டு ஏற்பாடுகளை வைகோ நேரடியாக வந்து பார்வையிட்டும், நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளும் வழங்கிவிட்டுச் சென்றார்.
இதுகுறித்து ம.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “ம.தி.மு.க மாநாடு நடைபெற இருக்கிற செப்டம்பர் 15-ம் தேதியன்று (நாளை), விழுப்புரத்தில் தி.மு.க சார்பில் மிகப் பிரமாண்டமாக அண்ணா – பெரியார் பிறந்தநாள் விழா நடைபெறவிருக்கிறது. ஸ்டாலின் தி.மு.க தலைவரானதும் நடைபெறும் முதல் பெரிய நிகழ்ச்சி என்பதால், ஸ்டாலினால் ம.தி.மு.க மாநாட்டில் கலந்துகொள்ள முடியவில்லை” என்றனர்.
தி.மு.க-வினரோ, “கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் ஈரோட்டில் தி.மு.க மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. அதில் தி.மு.க-வினர் மட்டும்தான் கலந்துகொண்டனர். ஆனால், ம.தி.மு.க மாநாட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. `பி.ஜே.பி-க்கு எதிரான தலைவர்களை மேடையேற்றி ஸ்டாலினால் செய்ய முடியாததை, வைகோ செய்கிறார் என்கிற மாய பிம்பத்தை உருவாக்குகிறார்கள்’ எனத் தி.மு.க-வினுடைய மேல்மட்ட தலைவர்கள் கூறியிருக்கின்றனர். மேலும், `திராவிடத்துக்கு அரண் அமைக்கும் ஒரே கட்சி ம.தி.மு.க என்பவர்களின் மாநாட்டில் நாம் கலந்துகொள்வதா’ என்றும் கூறியிருக்கின்றனர். அதனால்தான் ம.தி.மு.க மாநாடு நடக்கும் அதே நாளில், தி.மு.க சார்பில் ஸ்டாலின் தலைமையில் பிரமாண்டமான நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன” என்றனர்.
ஈரோடு தி.மு.க மாநில சுயாட்சி மாநாட்டில் பேசிய துரைமுருகன், “தி.மு.க-வினரைத் தவிர, வேறு யாரையும் மாநாட்டுக்கு அழைக்கக் கூடாது என நாங்கள் ஸ்டாலினிடம் கூறியிருந்தோம். மற்றவர்களை அழைத்திருந்தால் எங்களுக்கு மாநாட்டில் பேச வாய்ப்புக் கிடைத்திருக்காது” என மறைமுகமாக வைகோவைச் சாடிப் பேசினார். அதே துரைமுருகன்தான் ஸ்டாலினுக்குப் பதிலாக ம.தி.மு.க மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார்.
vikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக