செவ்வாய், 11 செப்டம்பர், 2018

புல்லட் நாகராஜன் வெறும் பினாமியாம் . பின்னணியில் போலீஸ்!.. பாலமுருகன் ...

புல்லட் நாகராஜன் பின்னணியில் போலீஸ்!
மின்னம்பலம்: மதுரை மத்தியச் சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளாவை வாட்ஸ்அப்பில் மிரட்டிய ரவுடி புல்லட் நாகராஜனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
கடந்த வாரம், தன்னை ரவுடி புல்லட் நாகராஜன் வாட்ஸ்அப்பில் மிரட்டியதாக மதுரை மத்தியச் சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா, மதுரை காவல் துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதமிடம் புகார் அளித்தார். இதுகுறித்து தேனி மாவட்ட எஸ்பி பாஸ்கரனிடம் தகவல் அளிக்கப்பட்டு, ஒரு சிறப்புக் குழு அமைத்து புல்லட் நாகராஜனைத் தேட ஆரம்பித்தனர் போலீசார்.
தேனி மாவட்டம் மேலமங்களம் மேலத்தெருவில் வசித்து வரும் புல்லட் நாகராஜனின் தந்தை பெயர் சுப்பிரமணி. நாகராஜனின் மனைவி பெயர் சுசிலா. இவர்களுக்கு வினிதா என்ற மகள் உண்டு. புல்லட் நாகராஜனின் அண்ணன் பழனியப்பன், 2006ஆம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று, மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 வருடங்களுக்கு மேலாகச் சிறையிலிருந்தவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டபோது பழனியப்பனும் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

சிறையில் போலீஸ் அதிகாரிகளும் மற்ற கைதிகளும் தன்னை அடித்ததாக நாகாராஜனிடம் கூறினார் பழனியப்பன். இதையடுத்து, மதுரை மத்தியச் சிறை கண்காணிப்பாளருக்கு வாட்ஸ்அப் மூலமாக மிரட்டல் விடுத்தார் நாகராஜன். இது மட்டுமில்லாமல், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி மாவட்டம் தென்கரை காவல் நிலைய ஆய்வாளர் மதனகலா உட்பட மூவருக்கும் வாட்ஸ்அப் மூலமாகக் கொலை மிரட்டல் ஆடியோ அனுப்பினார்.
இதனால், தேனி மாவட்ட ஏடிஎஸ்பி சுருளிராஜா தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு நேற்று (செப்டம்பர் 10) காலை 10.30 மணிக்குப் பெரியகுளம் தேவாலயம் அருகில் புல்லட் நாகராஜனைத் துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்தனர்.
நாகராஜன் எப்போதும் தற்பாதுகாப்புக்காக துப்பாக்கிகள், கத்தி வைத்திருப்பது போலீசாருக்குத் தெரிந்திருந்தது. அவரிடம் சோதனையிட்டபோது, ஏர் ஹன் (காற்று துப்பாக்கி), விளையாட்டுத் துப்பாக்கி மற்றும் இரண்டு கத்திகள் மட்டுமே இருந்தன. மேலும், சிறுவர்கள் விளையாடும் நூறு ரூபாய், ஐந்நூறு ரூபாய் நோட்டுகளும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தான், புல்லட் நாகராஜனிடம் இருந்து கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகச் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

நாகராஜன் மீது சேலம் மாவட்டத்தில் 10 செயின் பறிப்பு வழக்குகள் உட்பட 75 செயின் பறிப்பு வழக்குகளும், கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன என்று தேனி மாவட்ட காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், பல தகவல்கள் வெளியாகியுள்ளன. “அடைக்கலம் கொடுத்த போலீஸ் பாலமுருகன்தான், எனக்கு செல்போன் சிம் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில்தான் பெண் ஆய்வாளரை மிரட்டினேன். அவர் யாரை மிரட்டச் சொல்லி செல்போன் நம்பர் கொடுக்கிறாரோ, அவரை மிரட்டுவேன். பின்பு, அவரை மிரட்டி பாலமுருகன் பணம் வாங்கிக்கொண்டு, அதில் ஒரு பங்கை எனக்குக் கொடுப்பார்” என்று கூறியுள்ளார் நாகராஜன்.
போலீஸ் தொடர்பு
பெரியகுளம் காவல் நிலையத்தில் குற்றப் பிரிவில் பணிபுரிபவர் பாலமுருகன். 48 நாட்களுக்கு முன்பு பெரியகுளத்தில் உள்ள பாலமுருகர் கோயிலுக்குத் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, கூட்டத்தில் புகுந்த பத்துப் பெண்கள் 20க்கும் மேற்பட்ட தாலிச் சங்கிலிகளைத் திருடிச் சென்றுவிட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் திருட்டில் ஈடுபட்ட 10 பெண்களும் அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் போலீஸ் பாலமுருகன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பாலமுருகனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, “என்னைத் தேவையில்லாமல் விசாரித்தால் பங்கு கொடுத்த அதிகாரிகளையும் காட்டுவேன்” என அவர் மிரட்டியுள்ளார். இதனால், அச்சமடைந்த அதிகாரிகள் அவரை விட்டுவிட்டனர். இதுகுறித்து மேலதிகாரிகளுக்குத் தெரியவந்துபோது, பாலமுருகன் ஆயுதபடைக்கு மாற்றப்பட்டார்.
பாலமுருகன் தன்னுடைய கட்டுப்பாட்டில் செயின் பறிக்கும் பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் என்று ஒரு படையையே வைத்திருந்துள்ளார். குற்றவாளி பிடிபட்டதும், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் திருடு போன பொருள் வேண்டுமா அல்லது குற்றவாளி வேண்டுமா அல்லது அதுக்கு மேல் ஏதாவது வேண்டுமா என்று கேட்டு பிரச்சினையைத் தீர்ப்பது பாலமுருகனின் வழக்கமாக இருந்துள்ளது.
“தமிழக காவல் துறைக்குக் கலங்கத்தை ஏற்படுத்தும் கருப்பு ஆடு பாலமுருகனைக்
கைது செய்யாமல் நேர்மையாகப் பணி செய்யும் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து குற்றவாளிகளைக் காப்பற்றி வருகின்றனர் அதிகாரிகள்” என்று தேனி மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
“தமிழகம் முழுவதும் முக்கியக் குற்றங்களின் பின்னணியில் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்களை மேலதிகாரிகள் கண்டுபிடித்தாலும், அவர்கள் நல்ல சோர்ஸ் என்று முடித்துக்கொள்கின்றனர் சில அதிகாரிகள் என்று புகார் தெரிவித்தார் போலீஸ் அதிகாரி ஒருவர். புல்லட் நாகராஜன் கைது விவகாரம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: