வியாழன், 13 செப்டம்பர், 2018

பெண்ணை உதைத்து துவைத்த திமுக நிர்வாகி செல்வகுமார் கழகத்தை விட்டு நீக்கம்!

dailythanthi.com : பெண்ணை காலால் எட்டி உதைத்த திமுக நிர்வாகி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.
சென்னை பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் பிரபல தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா (வயது 35). இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த  தி.மு.க. பிரமுகர் செல்வகுமார் (52) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
செல்வக்குமார் தற்போது சத்தியா பியூட்டி பார்லர் நடத்தி வரும் பாரதிதாசன் நகரில் குடியிருந்துகொண்டு பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் செல்வகுமார் சத்தியாவின் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அவரை சரமாரியாக காலால் உதைத்து தாக்கினார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. இந்த சம்பவத்தை வாட்ஸ்அப் மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.


தி.மு.க.வினர் மத்தியிலும் இந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அழகு நிலையத்திற்குள் புகுந்து சத்தியாவை காலால் செல்வக்குமார் எட்டி எட்டி உதைக்கிறார். பலமுறை சத்தியாவிற்கு உதை விழுகிறது. அப்போது சத்தியா அடிக்காதீர்கள் அடிக்காதீர்கள் என்று கதறுவதும் மற்ற பெண் ஊழியர்கள் அதை தடுக்க முடியாமல் தவிப்பதும், அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம்தான் வாட்ஸ்அப்பில் இன்று வைரலாக பரவியது. 4 மாதத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை இதுவரை வெளியில் விடாமல் இப்போது அதனை வெளியிட்டது ஏன்? வெளியிட்டது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்தநிலையில் வீடியோ காட்சிகளை வெளியிட்டது சத்தியா என்பது தெரிய வந்தது. செல்வகுமார் தாக்கியது தொடர்பாக சத்தியா பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் வீடியோ காட்சிகளை தொலைக்காட்சி சேனல்களுக்கு அனுப்பியுள்ளார். வாட்ஸ்அப்பிலும் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்தே இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி தி.மு.க.முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரை இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், பெரம்பலூர் திமுக நிர்வாகி செல்வகுமார் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.  இது குறித்து க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- “ பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம் அன்னமங்கலம் கிராமத்தைச்சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் உறுப்பினர் எஸ்.செல்வகுமார் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்தால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் ”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: