வியாழன், 13 செப்டம்பர், 2018

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம்; வழக்கை மீளப்பெற ரூ.5 பாதிரியார் கோடி பேரம்!


தினமலர் : கொச்சி : கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் பெற, பாதிரியார் தரப்பில் இருந்து, 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில், கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த, பிராங்கோ என்ற பாதிரியார், அவரது கட்டுப்பாட்டில் பணியாற்றி வந்த கன்னியாஸ்திரியை, 2014 - 2016 வரை, 13 முறை, பாலியல் பலாத்காரம் செய்ததாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கிறிஸ்தவ அமைப்புகளுடன் சேர்ந்து, ஐந்து கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, 'இந்த வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும்' என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், வழக்கு தொடர்பான விசாரணைக்கு, வரும், 19ல், நேரில் ஆஜராகும்படி, பாதிரியார் பிராங்கோவுக்கு, போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர். மேலும், போலீஸ் உயர் அதிகாரிகளின் கூட்டம், நேற்று நடந்தது. இதில், பாதிரியாரை கைது செய்வது தொடர்பாக, விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாதிரியார் பிராங்கோ மீதான பாலியல் பலாத்கார புகாரை வாபஸ் பெற்றால், 5 கோடி ரூபாய் கொடுப்பதாக, அவரது நண்பர்கள் மூலம் பேரம் பேசப்பட்டது என, பலாத்காரத்துக்கு ஆளான கன்னியாஸ்திரியின் சகோதரர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, பிராங்கோ மீது பல்வேறு புகார்கள் கூறப்படும் நிலையில், அவர் பேரம் பேசுவதாக கூறப்படுவது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: