வெள்ளி, 21 ஜூலை, 2017

ரயில்வே உணவு: மனிதர்களுக்கு ஏற்றதல்ல!

மின்னம்பலம் :இந்திய ரயில்வேயில் அளிக்கப்பட்டு வரும் உணவு மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல என்று சிஏஜி தெரிவித்துள்ளது.
இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை இந்திய ரயில்வேத் துறையின் கேட்டரிங் சேவைகள் தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 21) தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், “ ரயில்வேயால் வழங்கப்படும் உணவு மனிதர்கள் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல. அவை கெட்டுப் போனவையாகவும், பழையவற்றைச் சூடேற்றி வழங்கப்படுவதாகவும் உள்ளது. மேலும், ரயில்நிலையங்களில் விற்கப்படும் குடிநீர் பாட்டில்கள் அங்கீகாரம் பெறாதவையாகவும், பாட்டிலில் விற்கப்படும் பொருட்கள் காலாவதியானவையாகவும் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் சுத்தம், சுகாதாரம் பேணப்படுகிறதா என முறையாக ஆய்வு செய்யப்படுவதில்லை. ரயில்களில் வழங்கப்படும் உணவு வகைகளில் பல தரம் குறைந்ததாக உள்ளன. பெரும்பாலும் உணவுகளுக்கு ரசீது வழங்கப்படுவது இல்லை. இதுபோல், உணவுப் பொருட்களுக்கான விலை பட்டியலும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிஏஜி அணி மற்றும் ரயில்வே நிர்வாகிகள் இணைந்து 74 ரயில் நிலையங்கள் மற்றும் 80 ரயில்களில் ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
கேட்டரிங் கொள்கையில் தொடர்ந்து மாற்றங்கள் செய்வதால், பயணிகளுக்கு கேட்டரிங் சேவை வழங்குவதில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்குப் பிறகு ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் இருக்கும் குடிநீர் குழாய்கள் சுத்தமாக இல்லை. குப்பைத் தொட்டிகள் வைக்கப்படுவதில்லை, ரயில்வேயால் வழங்கப்படும் உணவுகள் மூடப்படுவதில்லை, ரயில் பெட்டிகளில் கரப்பான்பூச்சிகள், எலிகள், தூசுகள், பூச்சிகள், கொசுகள் ஈக்கள் நிறைந்து உள்ளன என்றும் சிஏஜி குழு தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை: