வெள்ளி, 21 ஜூலை, 2017

இங்கு திராவிட இயக்கம் என்ன செய்தது? லாலுவின் வார்த்தைகளில் தெறிக்கும் உண்மைகள்!

சாய் லட்சுமிகாந்த் : திராவிட இயக்கங்களை கொச்சைப்படுத்தும் சில புதிய துரோகிகள் கண்திறக்கட்டும்.....
லாலு பிரசாத் யாதவ் ஒரு நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் பெற்றோர் எங்களை பள்ளிக்கு அனுப்புவார்கள். பள்ளி அசம்பிளியிலேயே அந்தந்த ஜாதி மாணவர்கள் பிரிக்கப்படுவார்கள். யாதவ மாணவர்கள் ஆசிரியர்களின் வீட்டு மாடுகளை கவனிக்க அனுப்பப் படுவார்கள். நண்பகல் வகுப்பறைக்கு வந்து தூங்கவேண்டும் பிறகு மாலை வீட்டிற்குச் செல்ல வேண்டும். இப்படித்தான் அந்த அந்த ஜாதி மாணவர்கள் அவரவர் குலத்தொழிலைச் செய்யவேண்டும். இந்தியா எங்கும் இப்படித்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டோம். அப்போ தெல்லாம் ஆசிரியர் மேசையில் இருக்கும் பத்திரி கையைத் தொட்டாலே காது கிழிந்து விடும் அளவிற்கு திருகிவிடுவார் என்று தன்னுடைய மாணவர் பருவ அனுபவத்தைக் கூறியுள்ளார் - லாலு பிரசாத்.
நாடோடிகளின் நிலை இதைவிடக் கொடூரம், என்.டி. டி.வி., என்ற செய்தி தொலைக்காட்சியில் பிகாரில் எலிபிடிக்கும் நாடோடிகளின் வாழ்க்கைப் பற்றி ரவீஷ் குமார் படம்பிடித்திருந்தார்.
சுதந்திரத்திற்கு முன்பு இந்த மக்கள் வயல்வெளிகளில் பயிர்களைச் சேதப்படுத்தும் எலிகளைப் பிடித்து அதற்கான கூலியை வாங்கிக்கொண்டு வாழ்க்கை நடத்தினர், கூலியாக நெல், கோதுமை, கடுகு, கடலை போன்றவை கிடைக்கும்.

ஆனால், ஆங்கிலேயர்கள் சென்ற பிறகு இவர்களின் வாழ்க்கையில் கொடூர மாற்றம் ஏற்பட்டது.
இவர்கள் வயலில் இறங்குவதால் வயல் தீட்டுப்படுகிறது என்று கூறி உயர்ஜாதியினர் இவர்களை ஊரைவிட்டுத் துரத்தினர். ஏதாவது வேலைகொடுங்கள் என்று கெஞ்ச வேண்டிய நிலையில் மாடுகளுக்குப் பதிலாக இந்த மக்களில் ஆண், பெண் என்று பாராமல் அவர்களின் கழுத்தில் ஏர் பூட்டப்பட்டது. எல்லாவற்றையும் விடக் கொடூரம் அவர்களுக்குக் கூலியாக சாணி கொடுக்கப்பட்டது. ஆமாம் மாடுகளின் வயிற்றில் இருந்து செறிக்காமல் வெளியே வந்த கோதுமைகளை இவர்கள் கழுவி எடுத்துச் செல்லவேண்டும். அதுதான் அவர்களது உணவு!
சுதன்மான்ஜி என்ற 80 வயது முதியவர் தன்னுடைய அனுபவத்தை பற்றிக் கூறும்போது: அம்மா கூடை நிறைய சாணியை அள்ளி வருவார்கள் அதைக் கழுவினால் ஒரு கைப்பிடி கோதுமைகூட கிடைக்காது. சில நேரங்களில் அந்தச் சாணிக் கூடையில் மனிதக் கழிவுகளும் கலந்திருக்கும் என்று தெரிவித்தார்.
இப்போது நினைத்துப்பாருங்கள்!
தமிழ்நாட்டின் நிலையை!
பெரியாரின் பணியை!
அவர் இல்லாமல் இருந்திருந்தால்?
கும்பிடுறேன் சாமியோவ்தான்...
பெரியாரை நாம் போற்றவேண்டும்!

கருத்துகள் இல்லை: