திங்கள், 15 ஆகஸ்ட், 2016

பலூசிஸ்தான் தனிநாடாக உருவாகும் ? இந்தியா பங்களாதேஷை உருவாக்கியது போல .....? INDIA MAY HELP BALOCHISTAN GET FREE FROM PAKISTAN


பாகிஸ்தான் மனசாட்சியின்றி பலுசிஸ்தானை மூர்க்கத்தனமாகத் தாக்குவதாக கடும் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் மத்திய பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர். மேலும் இன்று பலுசிஸ்தான் இந்தியாவின் உதவியை கோரியுள்ளநிலையில் அமைச்சரின் பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சின்மயா மிஷன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனோகர் பாரிக்கர், பாகிஸ்தானுக்கு எதிராக கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறார். அந்தக் கூடடத்தில் அவர் பேசியதாவது. ‘இந்தியாவுக்குள் 10 பயங்கரவாதிகளை அனுப்பும்போது, பயங்கரவாதத்தால் அதேயளவு பிரச்னையை பாகிஸ்தான் எதிர்கொண்டு வருகிறது.
பாகிஸ்தானின் எங்கேயோ ஒரு மூலையில் குண்டு வெடிக்கிறது. அதில் 70-80பேர் உயிரிழக்கின்றனர். சமீபத்தில், பாகிஸ்தானின் குயிட்டா நகரில் மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்பில் 70 பேர் உயிரிழந்தனர். தனது சொந்த மக்களின்மீதே குண்டுகளை வீசும் ஒரே நாடு பாகிஸ்தானாகவே இருக்கும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பலூசிஸ்தானை கையாளும்விதத்தைப் பார்த்தால், சொந்த நாட்டு மக்களின் மீதே குண்டுகளை வீசும் ஒரே நாடு பாகிஸ்தான் மட்டுமே” என்றார்.
இந்நிலையில், இன்று வங்கதேசத்தை விடுவித்ததுபோல் பலுசிஸ்தானையும் விடுவியுங்கள் என பாலுச் இன மக்கள் இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் . மேலும் வங்கதேசத்துக்கு உதவியதுபோல், தங்களுக்கும் இந்தியா உதவி செய்ய வேண்டும் என பலுசிஸ்தானில் செயல்படும் பலுச் குடியரசுக் கட்சியும் அதே கோரிக்கையை முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சித் தலைவர் பிரஹம்தாக் கூறுகையில், " பாகிஸ்தான் எங்களை பயங்கரவாதிகளாக கருதுகிறது. நாங்கள் இந்தியாவின் தூண்டுதல்படி செயல்படுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. எங்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என சர்வதேச சமூகத்துக்கு கோரிக்கை விடுக்கிறோம். அவர்கள், இங்கு வந்து பார்க்கட்டும் சூழ்நிலையை ஆய்வு செய்யட்டும். லிபியா மற்றும் சிரியாவில் சர்வதேச சமூகம் தலையிடும்போது, இங்கு ஏன் தலையிடக்கூடாது. சொந்த நாட்டில் மக்கள் உதவியின்றி அகதிகளாக வெளியேறுகின்றனர். பாகிஸ்தான் ராணுவம் காரணமாக பலுசிஸ்தான் பகுதி புறக்கணிக்கப்படுகிறது. பலுசிஸ்தான்மீது பாகிஸ்தான் ராணுவம் குண்டு போடுகிறது. கிராம மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர். எங்களை பயங்கரவாதிகளாக பாகிஸ்தான் சித்தரிக்கிறது. வங்கதேசத்துக்கு இந்தியா உதவி செய்ததுபோல், எங்களுக்கும் இந்தியா உதவி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார். மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை: