வியாழன், 25 ஆகஸ்ட், 2016

மோடியே தேசத்துரோகி! : ரம்யாவை ஆதரிக்கும் காங்கிரஸ்


பாகிஸ்தான் குறித்த தன் நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை. முடிந்தால் நான் பாகிஸ்தானுக்கு நடந்தே செல்வேன் என்று, அதிரடியாகக் கூறியிருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான ரம்யா. மேலும் பாகிஸ்தானில் விருந்துண்ட மோடிதான் தேசத்துரோகி; ரம்யா அல்ல என்றுகூறி, கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்ததாக நடிகை ரம்யாமீது தேசத்துரோக வழக்கு கோர்ட்டில் தாக்கல் ஆனது. ஆனாலும் இதற்காக மன்னிப்புக் கேட்கமாட்டேன் என்று மறுத்துவிட்டார் ரம்யா. மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், பாகிஸ்தான் செல்வது நரகத்துக்குச் செல்வதற்கு ஒப்பானது என்று, சமீபத்தில் கூறியிருந்தார்.


இச்சூழலில் திரைப்பட நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா, சமீபத்தில் மாண்டியாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், இஸ்லாமாபாத்தில் சார்க் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்றதுபற்றி குறிப்பிட்டார். ‘பாகிஸ்தான், நரகம் அல்ல. அங்குள்ள மக்களும் நம்மைப்போலத்தான். எங்களை நன்கு உபசரித்தார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, விட்டல் கவுடா என்ற வழக்கறிஞர் நேற்று முன்தினம் குடகு மாவட்டம், சோமவார்பேட்டையில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு ஒன்றைக் கொடுத்தார்.
அதில், ‘இந்தியாவின் பாரம்பரிய எதிரி நாடான பாகிஸ்தானை புகழ்ந்து நடிகை ரம்யா பேசியுள்ளார். இது, இந்திய மக்களை அவமானப்படுத்தும் செயல். எனவே, நடிகை ரம்யாமீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஷியாம் பிரகாஷ், இதன் விசாரணையை வருகிற 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து, கர்நாடக திரைப்படத் துறையினர், ரம்யாவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில்தான் மன்னிப்புக் கேட்க மறுத்த ரம்யா, ‘வாய்ப்புக் கிடைத்தால் பாகிஸ்தானுக்கு நடந்தே போவேன்’ என்று கூறியுள்ளார். ரம்யாவுக்கு எதிராக பிரச்னை ஏற்பட்டுவரும் வேளையில் ‘குத்து’ ரம்யாவுக்கு, துணை நிற்கப்போவதாக காங்கிரசும் அறிவித்துள்ளது. இதுகுறித்துப் பேசிய கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காத பாரதிய ஜனதா கட்சியினர், இப்போது அவர்கள்தான் தலைசிறந்த தேசியவாதிகள்போல டிராமா போடுகிறார்கள். அப்படிப் பார்த்தால், பதான்கோட் தாக்குதலுக்குப்பிறகு பாகிஸ்தானுக்குப் போய் அந்த நாட்டு பிரதமர் நவாஸ்செரீப் பிறந்தநாள் விழாவில் நமது பிரதமர் மோடி விருந்து சாப்பிட்டுவந்தார். எனவே, பிரதமர் மோடிமீதுதான் தேசத்துரோக வழக்கு போட வேண்டும் என்று அதிரடியாகக் கூறியுள்ளார்.   மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: