செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

மறைந்த சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் வரலாறு

விகடன்.காம் :சிங்கப்பூரில் 5 லட்சத்துக்குத் மேற்பட்டத் தமிழர்கள் வசிப்பதோடு உயரிய பொறுப்பிலும் இருக்கின்றனர். சிங்கப்பூரின் 6வது அதிபராக தேர்வு செய்யப்பட்ட எஸ்.ஆர். நாதன். மிக முக்கியமானவர். சிங்கப்பூரின் 'இரண்டாவது தந்தை ' என்று அழைக்கப்படும் எஸ்.ஆர். நாதன் அந்த நாட்டு வரலாற்றில் நீண்ட காலமாக அதிபர் பதவியில் இருந்தவர். >1924ம் ஆண்டு செல்லப்பன் - அபிராமி தம்பதிக்கு நாதன் பிறந்தார். அவருடன் சேர்ந்து வீட்டில் நான்கு குழந்தைகள். அப்போது சிங்கப்பூர் மலேசியாவுடன்தான் இருந்தது. குடும்பத்தில் கஷ்ட ஜீவனம்தான். நாதனின் தந்தை மலேசியாவுக்கு சென்றால் பிழைத்துக் கொள்ளலாம் என நினைத்தார். அவருக்கு ஒரு மலேசிய ரப்பர் தோட்டத்தில் குமாஸ்தா வேலை கிடைக்கிறது. சிங்கப்பூரில் இருந்து மலேசியாவில் உள்ள ஜோகூருக்கு குடும்பம் இடம் பெயர்கிறது. ரப்பர் தொழில் நசிவை கண்ட நிலையில், குடும்பத்தை காப்பாற்ற முடியாத சூழலில் செல்லப்பன் தற்கொலை செய்து கொள்ளகிறார். நான்கு குழந்தைகளுடன் தொடர்ந்து மலேசியாவில் வசிக்க முடியத நிலையில் தவிக்கிறார்  நாதனின் தாயார்  . குழந்தைகளை அழைத்துக் கொண்டு மீண்டும் சிங்கப்பூருக்கே வருகிறார்..
;சிங்ப்பூரில் கஷ்டப்பட்டு குடும்பம் ஓடுகிறது. இதற்கிடையே பள்ளி படிப்பு உயர்கல்வியை கற்ற எஸ்.ஆர். நாதன்,தொழிலாளர்கள் உரிமைகளுக்காக போராடத் தொடங்கினார். தொழிற்சங்க நடவடிக்கைகளிலும்  ஈடுபட்டார் கடந்த 1955ம் ஆண்டு முதல் சிங்கப்பூரின்  பல்வேறுத் துறைகளில் பணி புரிந்த எஸ்.ஆர். நாதனின் வாழ்க்கையில் 1974ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் மிக முக்கியமானது.  சிங்கப்பூருக்கு சொந்தமான புலாவு புகாம் தீவில் எண்ணெய் கிடங்கு ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் மீது ஜப்பான் ரெட் ஆர்மி மற்றும் பாலஸ்தீன விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். 4 தீவிரவாதிகளில் இருவர் ஜப்பான் ரெட் ஆர்மியையும் இருவர் பாலஸ்தீனத்தையும் சேர்ந்தவர்கள். சிங்கப்பூரில் இருந்து வியட்நாமுக்கு செல்லும் எண்ணெய் சப்ளையை நிறுத்த வேண்டுமென்பதுதான் தீவிரவாதிகளின் நோக்கம்.
தீவில் இருந்த ஒரு படகையும் அதில் இருந்தவர்களையும் கூடத் தீவிரவாதிகள் பணையக் கைதிகளாக பிடித்துக் கொண்டனர் .  படகை மத்தியத் தரைக்கடலை நோக்கி ஓட்டத் தொடங்கினர். சிங்கப்பூர் கடற் பாதுகாப்புப் படையினர் அவர்களை மடக்கி விட்டனர்.

அப்போது சிங்கப்பூரின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறைத் தலைவராக எஸ்.ஆர். நாதன் இருந்தார். பணயக்கைதிகளை மீட்கும் இந்த நடவடிக்கைக்கு எஸ்.ஆர். நாதன் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். தீவிரவாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 7 நாட்களாக நடந்த இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், ''தங்களை பாதுகாப்பாக குவைத் செல்ல அனுமதித்தால் பணயக் கைதிகளை விடுவிப்பதாக தீவிரவாதிகள் உறுதியளித்தனர்.'' தொடர்ந்து ''பணயக் கைதிகளை விடுவித்து விடுங்கள். நீங்கள் குவைத் செல்ல நான்  பணயக் கைதியாக உங்களுடன் வருகிறேன்'' என எஸ்.ஆர். நாதன் கூறினார். அதனடிப்படையில்  பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். உறுதியளித்தபடி, எஸ்.ஆர் நாதன் உட்பட 13 அதிகாரிகள் பணயக் கைதியாகி 1974ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி தீவிரவாதிகளுடன் விமானத்தில்  குவைத் நோக்கி பயணித்தனர். அடுத்த நாள் தாயகம் திரும்பிய போது, சிங்கப்பூரே திரண்டு அவருக்கு வரவேற்பளித்தது. 'என்னை விட என் தேசம்தான் எனக்கு முக்கியம் ''  எஸ்.ஆர். நாதன் அடிக்கடி உதிர்க்கும்  வார்த்தை. சொன்னதைப் போலவே தன்  தேசத்து மக்களுக்காக தனது உயிரையும் பணயம் வைக்கத் துணிந்தவர்தான் எஸ்.ஆர். நாதன். ஒரு உயிரிழப்புக் கூட இல்லாமல், இந்த நடவடிக்கையை வெற்றிக்கரமாக நடத்திக் காட்டினார் எஸ்.ஆர். நாதன்.

>சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்படும் லீ குவான் யூவுக்கு நெருக்கமானவராகவும் இருந்தார். அதிபர் ஆவதற்கு முன், 1988-90 களில் ஆண்டு மலேசியத் தூதராகவும் 1990 - 96 வரை அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதராகவும் எஸ்.ஆர். நாதன் பணியாற்றினார். தொடர்ந்து 1999ம் ஆண்டு செப்டம்பர் 1ம் மேதி சிங்கப்பூரின் அதிபராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 2005ம் ஆண்டும் மீண்டும் போட்டியில்லாமல் தேர்வு செய்யப்பட்டார். சிங்கப்பூர் வரலாற்றில் அதிக காலம் சுமார் 12 ஆண்டுகள் பதவியில் இருந்த பெருமைக்குரியவர் இவர். மூன்றாவது முறையாக சிங்கப்பூர் அதிபராக வாய்ப்பு இருந்தும் அதனை ஏற்க மறுத்து, வயது முதிர்வு காரணமாக அதிபர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். கடந்த 2013ம் ஆண்டு சிங்கப்பூரின் உயரிய ''ஆர்டர் ஆஃப் டெமாஸெக்'' விருது எஸ்.ஆர். நாதனுக்கு வழங்கப்பட்டது. >
சிறந்த நிர்வாகியான எஸ்.ஆர். நாதன், சொன்ன சொல்லை நிறைவேற்றிக் காட்டுபவர். 'லிட்டில் இந்தியா ' பகுதியில் உள்ள முத்தையா உணவகத்திற்கு ஒரு முறை சாப்பிட வருவதாக எஸ்.ஆர். நாதன் வாக்குறுதி அளித்திருந்தார். அதிபர் பதவியில் இருந்து விலகிய பின், அந்த ஹோட்டலுக்கு மதிய உணவுக்கும் சென்று. அந்த உணவகத்தின் உரிமையாளருக்கு இன்பஅதிர்ச்சி அளித்தார். குழந்தைகளிடம் அன்பும் பரிவும் காட்டுவார். எஸ்.ஆர். நாதனின் மனைவியின் பெயர் ஊர்மிளா. இவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். இருவரும் காதலித்து சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். கடந்த சில தினங்களாகவே 92 வயது எஸ்.ஆர் நாதனுக்கு வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. 3 வாரங்களாக மருத்துவமனையில்தான் இருந்தார். சிசிக்சை பலனளிக்கவில்லை.
''சிங்கப்பூர் அரசு மருத்துவமனையில் மிஸ்டர். நாதனின் உயிர் அமைதியா பிரிந்துவிட்டது'' என் சிங்கப்பூர் அரசு நேற்று அறிக்கை வெளியிட்ட போது அந்த சிறிய தேசம் சோகத்தில் மூழ்கியிருந்தது. வியாழக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் அவரது உடலுக்கு சிங்கப்பூர் மக்கள் அஞ்சலி செலுத்தலாம் என அறிவிக்கப்ட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்யலாம் என்றும் அரசுத் தேவையான உதவிகளை செய்யும் என்றும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. < -எம். குமரேசன்.

கருத்துகள் இல்லை: