செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

சசிகலா புஷ்பா நேரில் ஆஜராக மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு !

சசிகலா புஷ்பா எம்.பி., வரும் திங்கட்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. முன் ஜாமீன் கேட்டு சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, சசிகலா புஷ்பாவுக்கு முன் ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.புலன் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் சசிகலா புஷ்பா வெளிநாடு சென்றுவிட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் புகார் கூறினார். ;வெளிநாடு சென்ற சசிகலா புஷ்பா முன் ஜாமீன் மனுவில் கையெழுத்திட்டது எப்படி? என்றும் கேள்வி எழுப்பினார்.இதையடுத்து நீதிபதி வேலுமணி, அரசின் சந்தேகத்தை தீர்க்க வரும் திங்கட்கிழமை சசிகலா புஷ்பா, அவரது கணவன், மகன் நேரில் ஆஜராகவேண்டும். சசிகலா புஷ்பா ஜாமீன் மனு மீது திங்கள் அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள சசிகலா புஷ்பா எம்.பி.யின் வீட்டில் வேலை செய்துவந்த இளம்பெண் பானுமதி, அவருடைய சகோதரி ஜான்சிராணி ஆகியோர் சசிகலாபுஷ்பா குடும்பத்தினர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் செய்தனர். அதன்பேரில் சசிகலாபுஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா, சசிகலாபுஷ்பாவின் தாயார் கவுரி ஆகியோர் மீது புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சசிகலாபுஷ்பா எம்.பி. உள்பட 4 பேரும் போலீசார் தங்களை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
சசிகலாபுஷ்பா எம்.பி. தாக்கல் செய்துள்ள மனுவில்,  டெல்லி மேல்-சபையில், எனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறினேன். இதன்பின்பு தான் எங்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை. எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. நான் முன்ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தேன். என்னை கைது செய்ய டெல்லி ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.

மேலும், சம்பந்தப்பட்ட ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளவும் உத்தரவிட்டது. நான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக உள்ளேன்’’என்று கூறப்பட்டுள்ளது.

சசிகலாபுஷ்பா எம்.பி. உள்பட 4 பேருக்கும் முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து அவர்கள் மீது புகார் கொடுத்துள்ள பானுமதி மனு தாக்கல் செய்துள்ளார்.
சசிகலாபுஷ்பா எம்.பி., அவருடைய கணவர், மகன் ஆகியோரின் முன்ஜாமீன் மனு, பானுமதியின் ஆட்சேப மனு ஆகியவை நேற்று நீதிபதி வி.எம்.வேலுமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. இருதரப்பினரின் வக்கீல்கள் ஆஜரானார்கள்.
சசிகலாபுஷ்பா எம்.பி.யின் தாயார் கவுரியின் முன்ஜாமீன் மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருவதால், அந்த மனுவோடு சேர்த்து இந்த மனுக்களையும் விசாரிப்பதாக கூறிய நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.
இதையடுத்து இன்றைய விசாரணையில், சசிகலா புஷ்பா எம்.பி., வரும் திங்கட்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: