சனி, 27 ஆகஸ்ட், 2016

மும்பை ஹாஜி அலி தர்கா கருவறைக்குள் பெண்கள் செல்ல அனுமதி ஐகோர்ட்டு தீர்ப்பு

மும்பை ஒர்லி கடல்பகுதியில் அமைந்துள்ள ஹாஜி அலி தர்கா கருவறைக்குள் பெண்கள் செல்வதற்கு அனுமதி அளித்து மும்பை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.
பெண்களுக்கு தடை மும்பை ஒர்லி கடல்பகுதியில் அமைந்துள்ள ஹாஜி அலி தர்கா மிகவும் பிரசித்தி பெற்றது. ஒர்லி கடற்கரையில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு நடுவே அமைந்துள்ள இந்த தர்கா, மும்பையின் எழில்மிகு காட்சியை பிரதிபலிக்கிறது. இந்த ஹாஜி அலி தர்காவின் கருவறைக்குள் பெண்கள் சென்று வழிபாடு நடத்துவதற்கு கடந்த 2012–ம் ஆண்டு தர்கா அறக்கட்டளை திடீரென தடைவிதித்தது.
இதனால், பெண்கள் ஹாஜி அலி தர்கா கருவறைக்குள் சென்று வழிபாடு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தடையை நீக்க கோரி ‘பாரதீய முஸ்லிம் மகிளா அந்தோலன்’ என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சாகியா சோமன் மற்றும் நூர்ஜஹான் நியாஸ் ஆகிய இரண்டு பெண் உறுப்பினர்கள் மும்பை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர்.

திருக்குர்–ஆன் வசனங்கள் இந்த வழக்கின் மீதான இறுதிகட்ட விசாரணை நீதிபதிகள் வி.எம்.கன்னடே மற்றும் ரேவதி மோகிதே தேரே ஆகியோர் முன்பு நேற்று நடைபெற்றது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், ‘‘ஆண்–பெண் சமத்துவத்தை இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஆகையால், ஹாஜி அலி தர்காவில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை தேவையற்றது. இதனை நீக்க வேண்டும்’’ என்றார்.
தர்கா அறக்கட்டளை தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘முஸ்லிம் ஆண் துறவியின் கல்லறை அருகே பெண்களை அனுமதிப்பது, இஸ்லாத்தை பொறுத்தவரையில் பாவம்’’ என்று வாதிட்டார். மேலும், இதற்கு ஆதரவாக திருக்குர்–ஆனில் இருந்து சில வசனங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘இதுபோன்று வெறுமனே திருக்குர்–ஆனில் இருந்து வசனங்களை எடுத்து கூறுவது, போதுமானது அல்ல. குறிப்பாக, 2012–ம் ஆண்டு வரையில், பெண்கள் ஹாஜி அலி தர்கா கருவறைக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், தர்கா அல்லது மசூதிக்குள் பெண்கள் சென்று வழிபாடு நடத்துவதற்கு தடை விதிக்கவும், அதனை பாவம் என்று கூறவும், நீங்கள் கூறிய வசனங்களில் எந்தவொரு முகாந்திரமும் இல்லை’’ என்று நீதிபதிகள் கூறினர்.
பெண்களுக்கு அனுமதி இதைத்தொடர்ந்து, ஹாஜி அலி தர்கா கருவறைக்குள் பெண்கள் சென்று வழிபாடு நடத்துவதற்கு அனுமதி அளித்து நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு அளித்தனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட 56 பக்க தீர்ப்பு விவரத்தின் சாராம்சம் வருமாறு:–
ஹாஜி அலி தர்கா கருவறைக்குள் பெண்கள் நுழைவதற்கு தடை விதிப்பது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 14, 15 மற்றும் 25–வது ஷரத்துகளை மீறுகிறது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் கருவறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். ஆகையால், ஹாஜி அலி தர்கா கருவறைக்குள் சென்று வழிபாடு நடத்தும் பெண்களின் பாதுகாப்பை தர்கா அறக்கட்டளையும், மாநில அரசும் உறுதிப்படுத்த வேண்டும்.
அறக்கட்டளைக்கு உரிமை இல்லை தனிமனிதனின் மதக்கோட்பாடுகளையும், ஒரு குழுவின் மதக்கோட்பாடுகளையும் திருத்துவதற்கு அறக்கட்டளைக்கு உரிமை கிடையாது.
அரசியல் அமைப்பு சட்டம் 26–வது ஷரத்தின்கீழ், ‘மத விவகாரங்கள் நிர்வாகம்’ என்ற பெயரில், பொது வழிபாடு தளத்தில் பெண்கள் நுழைவதில் பாகுபாடு காட்ட அறக்கட்டளைக்கு உரிமை இல்லை. இதுபோல், அரசியல் அமைப்பு சட்டத்தின் 14 மற்றும் 15–வது ஷரத்தில் உறுதியளிக்கப்பட்டதற்கு இணங்க, பாலின பாகுபாட்டுக்கு எதிரான வேறுபாடுகளை களைந்து அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
நிறுத்தி வைப்பு இதையடுத்து, ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய போவதாக தர்கா அறக்கட்டளை தரப்பு வக்கீல் கூறினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பெண்கள் ஹாஜி அலி தர்கா கருவறைக்குள் செல்ல அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை 6 வாரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.
அடுத்த இலக்கு சபரிமலை அதேசமயம், ஹாஜி அலி தர்கா கருவறைக்குள் பெண்கள் சென்று வழிபாடு நடத்த ஐகோர்ட்டு அனுமதி அளித்ததை பல்வேறு பெண்கள் அமைப்பினர் வரவேற்று உள்ளனர். மேலும், இந்த தீர்ப்பை கொண்டாடும் வகையில் பூமாதா பெண்கள் அமைப்பை சேர்ந்த பெண்கள் ஒருவருக்கொருவர் வண்ணம் பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அந்த அமைப்பின் தலைவி திருப்தி தேசாய் நிருபர்களிடம் கூறுகையில் ‘‘ஆணுக்கு பெண் சமம் என்பதற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி, இந்த தீர்ப்பு ஆகும். எங்கள் உரிமையை நாங்கள் வலியுறுத்துகிறோம். அடுத்து கேரளாவில் உள்ள சபரிமலையில் பெண்கள் நுழைய அனுமதி பெறுவதே எங்கள் இலக்கு’’ என்றார்.   dailythanthi.com

கருத்துகள் இல்லை: