வியாழன், 7 ஏப்ரல், 2016

சிதம்பரத்தில் பிராமணாள் அசிங்கம் அகற்றப்பட்டது....திராவிடர் கழகத்தின் முயற்சிக்கு வெற்றி


சிதம்பரம், ஏப்.7_ ஆடல்வல்லான் உயர்தர பிராமணாள் ஓட்டல், பெயர் பலகையில் “பிராமணாள்’’ சொல் அகற்றப்பட்டது. சிதம்பரம் மாவட்ட கழகம் சார்பில், சென்ற வாரம் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில், மாவட்டக் கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட கழகச் செயலாளர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன், நகர கழகத் தலைவர் கோவி.குணசேகரன், நகர அமைப்பாளர் இரா.செல்வரத்தினம், இளைஞரணித் தலைவர் ப.ஆ.முரளிதரன் ஆகியோர் - சிதம்பரம் கீழ வீதியிலுள்ள ஆடல்வல்லான் பிராமணாள் உயர்தர சைவ ஓட்டல் பலகையிலுள்ள “பிராமணாள்’’ சொல்லை அகற்றவேண்டும் என மனு அளித்தனர்.

கடந்த 3.2.2016 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் இச்சொல்லை நீக்க கெடு விதித்து எச்சரிக்கை செய்த விடுதலை செய்தியையும் இணைத்து மனு கொடுத்தனர்.
இம்மனுவை ஏற்றுக்கொண்டு, சிதம்பரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேலு, ஆய்வாளர் த.மோகன், துணை ஆய்வாளர் அருண் ஆகியோர் மேற்படி “பிராமணாள்’’ சொல்லை நீக்க நடவடிக்கை எடுத்தனர்.
கழகப் பொறுப்பாளர்களின் முயற்சி
காவல்துறையின் ஒத்துழைப்புக் காரணமாக ஓட்டல் உரிமையாளரான தீட்சதர் “பிராமணாள்’’ என்ற சொல்லை அகற்றிவிட்டார். ஓட்டல் மேல் பகுதியிலிருந்த பெரிய விளம்பரப் பலகையை கழற்றிவிட்டார்.
மாவட்டத் தலைவர் பேரா.பூ.சி.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் அன்பு.சித்தார்த்தன் ஆகியோர் நேற்று (6.4.2016) காவல் துறை ஆய்வாளர் அவர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். விடுதலை.காம்

கருத்துகள் இல்லை: