திங்கள், 4 ஏப்ரல், 2016

வாசனுக்கும் வேல்முருகனுக்கும் போயஸ் கார்டன் கதவை சாத்திய மர்மம்...

'அ.தி.மு.க கூட்டணியில் புலிப்படை என்ற கட்சியைச் சேர்ந்த நடிகர் கருணாஸுக்கு சீட் ஒதுக்கிய ஜெயலலிதா, வாசன் மற்றும் வேல்முருகனுக்கு சீட் ஒதுக்காதது ஏன்?' என்பது விவாதப் பொருளாகியிருக்கிறது. அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டார் ஜெயலலிதா. 227 தொகுதிகளில் அ.தி.மு.கவும் 7 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. கூட்டணிக் கணக்கு என்ற அடிப்படையில் இந்திய குடியரசுக் கட்சி செ.கு.தமிழரசன், சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உ.தனியரசு, புலிப்படை கருணாஸ், தமிழ்மாநில முஸ்லிம் லீக் ஷேக் தாவூத் ஆகியோருக்கு தலா ஒரு இடமும், மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சியின் தமிமுன் அன்சாரிக்கு இரண்டு சீட் என ஏழு இடங்களை ஒதுக்கிவிட்டார் ஜெயலலிதா.
இனி அ.தி.மு.க கூட்டணியில் எந்த இடங்களும் காலியாக இல்லை. கடந்த மாதம் ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்த தமிழக மக்கள் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு கதவை சாத்திவிட்டார் ஜெயலலிதா. இதுதொடர்பாக, வேல்முருகனைத் தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை.
'சீட் ஒதுக்கப்படாததற்கு என்ன காரணம்?' என அ.தி.மு.க முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம்.
" வேல்முருகன் மீது அம்மா கோபமாக இருக்கிறார். வேட்பாளர் நேர்காணல், பிரசார வியூகம் என ஒருபக்கம் அம்மா படு பிஸியாக இருந்தார். கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்ட இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் பேசிக் கொண்டிருந்தோம். இதில், வேல்முருகனை அழைப்பதற்கு கொஞ்சம் தாமதமாகிவிட்டது. அவர் அதற்குள், 'எங்கே சீட் கிடைக்காமல் போய்விடுமோ என நினைத்துக் கொண்டு, தி.மு.கவில் கனிமொழியோடு சீரியஸாக சீட் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். அம்மாவை சந்தித்துவிட்டுப் போனபிறகு, கொஞ்சமும் நம்பிக்கை இல்லாமல் தி.மு.க பக்கம் தூதுவிட்டுக் கொண்டிருந்த தகவல், உளவுத்துறை மூலமாக அம்மா காதுக்கு வந்தது. உடனே பட்டியலில் இருந்து வேல்முருகனை நீக்கச் சொல்லி உத்தரவு போட்டார். எங்களோடு முறுக்கிக் கொண்டு போன சரத்குமாரை கூப்பிட்டு சீட் கொடுத்தார். அதற்கு தி.மு.க பக்கம் சரத்குமார் போகாததுதான் மிக முக்கியக் காரணம். ஆனால், வேல்முருகன் அப்படிச் செய்யவில்லை. ஒரேநேரத்தில் இரண்டு பேரோடு பேசிக் கொண்டிருந்தால் எப்படி நம்புவது?" எனக் கொந்தளித்தார் அவர்.

"எல்லாம் சரி...கடைசி வரை நம்பிக்கையோடு இருந்த வாசனுக்கு அம்மா கல்தா கொடுத்தது ஏன்?" என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டோம்.
" இன்று பட்டியல் வெளியானதில் இருந்து எங்களுக்கு கையும் காலும் ஓடவில்லை. ரொம்பவே பதட்டமாக இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு, பின்னர் தே.மு.தி.கவுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்ததுபோல, எங்களுக்கும் அதுபோலவே ஜெயலலிதா செய்வார் என நம்புகிறோம். ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.கதான் என்பதில் எங்கள் தலைவர் உறுதியாக இருக்கிறார். வருகிற 7-ம் தேதி அமாவாசை என்பதால் அன்றைக்கு எங்கள் தலைவரை அழைத்து ஜெயலலிதா பேசுவார் என நம்புகிறோம். அவர் அழைக்காவிட்டால், மக்கள் நலக் கூட்டணி எங்கள் கண்முன் இருக்கிறது. அவர்களும் எங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதைத் தவிர்த்து, 'தி.மு.க, காங்கிரஸோடு கூட்டணி வைக்கட்டும்'. 'நாங்கள் தி.மு.கவோடு கூட்டணி வைக்கிறோம்' என்ற அடிப்படையில் தி.மு.கவோடு இணைந்தால், எங்களுக்கு 25 சீட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், தி.மு.கவிடம் அதிக இடங்கள் இருக்கின்றன. அதனால் நாங்கள் தனித்துவிடப்படவில்லை. அ.தி.மு.க தலைமையிடம் இருந்து அழைப்பு வராவிட்டால், மக்கள் நலக் கூட்டணி எங்களின் பிரதான ஆப்ஷனாக இருக்கும்" என்கிறார்கள்.

ஆனால், 'தி.மு.க கூட்டணியில் வாசனுக்கு இடம் இருக்காது' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.
"கட்சிக்கு துரோகம் செய்துவிட்டுப் போனவர்களை கூட்டணிக்குள் சேர்ப்பதில் சோனியாவுக்கு விருப்பமில்லை. 'இன்னும் மூன்று ஆண்டுகளில் வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்தான் வெற்றி பெறப் போகிறது. அப்போது நம்முடைய தயவுதான் தி.மு.கவுக்கு வேண்டும்' என சோனியா கறாராகச் சொல்ல, சத்தமில்லாமல் 41 தொகுதிகள் பேசி முடிக்கப்பட்டுவிட்டன. வாசன் வருவதை காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை" என்கின்றனர். ஒருவேளை தி.மு.க பக்கமும் வாசன் தூதுவிடும் தகவலால்தான், அ.தி.மு.க மேலிடம் பட்டியலை இறுதி செய்துவிட்டதோ என்னவோ?

கார்டனை நம்பி மோசம் போன வாசனுக்கும் வேல்முருகனுக்கும் நாம் என்னதான் சொல்ல முடியும்?

ஆ.விஜயானந்த்  விகடன்,com

கருத்துகள் இல்லை: