சனி, 20 பிப்ரவரி, 2016

Freedom 251..A Hoax..ரூ.145 கோடி வசூல்...உலகின் மலிவு விலை ஸ்மார்ட் போன்.. சதுரங்க வேட்டை?

புதுடில்லி: சில ஆண்டுகளுக்கு முன், உலகிலேயே, மிகவும் விலை குறைவான, 'நானோ' காரை, டாடா நிறுவனம் அறிமுகம் செய்த போது, பல நாடுகள் வியப்புடன் பார்த்தன. தற்போது, உலகிலேயே மிகவும் மலிவான, ஸ்மார்ட் மொபைல் போனை, 251 ருபாய்க்கு அறிமுகம் செய்வதாக, டில்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த, 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது, பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.'இது சாத்தியமில்லை, ஏமாற்று வேலை' என, சில தரப்பினர் கூறி வரும் நிலையில், 'இந்த மொபைல் போனை வேண்டி, முன்பதிவு செய்யும் அனைவருக்கும், ஜூன் மாதத்திற்குள் அளிப்போம்' என, 2015 செப்டம்பரில் உருவான, ரிங்கிங் பெல் நிறுவனம் கூறியுள்ளது.


இதுவரை மொபைல்போன் தயாரிப்பில் ஈடுபடாத, மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையாத இந்த நிறுவனத்தை
உருவாக்கியவர், மோகித் குமார் கோயல். இவரது தந்தை ராஜேஷ் கோயல், உத்தர பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டம் கர்கிபுக்தாவில், மிகச்சிறிய மளிகைக் கடையை நடத்தி வருகிறார். டில்லியில் உள்ள அமிட்டி பல்கலையில் பொறியியல் பட்டம் படிக்கும் வரை, ஊரில், தன் தந்தைக்கு உதவியாக மளிகைக் கடையில் வேலைபார்த்தார் மோகித் குமார்.

தற்போது, அவர் துவங்கியுள்ள நிறுவனத்தில் மோகித் குமார் தவிர, அவரது தந்தை ராஜேஷ் குமார் கோயல், தாயார் சுஷ்மா தேவி ஆகியோரும் இயக்குனர்களாக உள்ளனர். அவரது மனைவி தார்னா, நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளனர்; இவர்களுக்கு, சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. 'பிரீடம் 251' மொபைல் அறிமுக விழாவில் கூட, மோகித் தன்னை முன்னிலைபடுத்திக் கொள்ளவில்லை. பல்வேறு துறைகளில் பணியாற்றிய நீண்ட அனுபவம் உள்ள, நிறுவனத்தின் தலைவர் அசோக் சத்தா தான், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.ஒரு சாதாரண நகரில், மளிகைக் கடை நடத்தி வருபவரின் மகனான மோகித், தன் திடீர் அறிவிப்பால், தற்போது உலகெங்கும் பிரபலமாகி விட்டார்.

ரூ.145 கோடி வசூல்-மத்திய அரசு கண்காணிப்பு :
*ஆன் - லைன் மூலமாக, 25 லட்சம் மற்றும் டீலர்கள் உட்பட, இதர வகையில், 25 லட்சம் என, மொத்தம், 50 லட்சம் மொபைல் போன்களை ஜூன் மாதத்தற்குள் விற்க, மோகித் இலக்கு நிர்ணயித்து உள்ளார் * தபால் செலவு உட்பட, தலா, 291 ரூபாய் வீதம், இதுவரை முன்பதிவு செய்துள்ள, 30 ஆயிரம் பேரிடமிருந்து, முன்பணமாக, 87 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது
* மொத்தம், 50 லட்சம் மொபைல் போன்களை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதன் மூலம், 145.5 கோடி ரூபாய் மொத்தமாக வசூலாகும்
* பல்வேறு தரப்பினர் மற்றும் இந்திய செல்லுலார் சங்கம், சந்தேகத்தை எழுப்பியுள்ளதால், இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாக, மத்திய தொலைத் தொடர்பு துறை தெரிவித்துள்ளது
* 'ஏதாவது தவறு நடப்பதாக சந்தேகம் ஏற்பட்டாலோ, புகார் வந்தோலோ, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  தினமலர்.com

கருத்துகள் இல்லை: