ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

இளங்கோவன்: தொகுதி பங்கீடு ஒரு பிரச்சனையே அல்ல

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ’’காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து நான் எதிர்பார்க்காத வகையில் அதிகமானவர்கள் மனு கொடுத்து வருகிறார்கள். உண்மையான காங்கிரஸ் காரர்கள் உணர்வுபூர்வமாக உற்சாகமாக மனு கொடுத்து வருகிறார்கள். விருப்பமனு கொடுக்காதவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விருப்பப்பட்டாலும் அவர்கள் விருப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
தி.மு.க.– காங்கிரஸ் கூட்டணியில் தே.மு.தி.க.வும் இணைய வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். அதற்காக விஜயகாந்தை தேவைப்பட்டால் நேரில் சந்தித்து அழைப்பேன். எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். கண்டிப்பாக தேர்தலுக்கு பிறகு அதனை எல்லோரும் அறிவார்கள்.

தொகுதி பங்கீடு என்பது எல்லாம் பெரிய பிரச்சினை அல்ல. ஒரு காலத்தில் காங்கிரசும், தி.மு.க.வும் தலா 110 தொகுதிகளில் போட்டியிட்டது. அதன்பிறகு காஙகிரஸ் 45 தொகுதிகளில் போட்டியிட்டது. கடந்த தேர்தலில் 63 தொகுதிகளில் போட்டியிட்டோம். தொகுதி எண்ணிக்கை என்பது சூழ்நிலைக்கு ஏற்ப அமையும். நிச்சயமாக சுமூகமான முறையில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் முடியும். மதசார்பற்ற கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளோம். அ.தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு ஒரே குறிக்கோள். தி.மு.க.– காங்கிரஸ் கூட்டணி உருப்படாது என்று மு.க.அழகிரி விரக்தியில் கூறியிருக்கிறார். அதுபற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. சீமான் பேசுவதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவரது பிரச்சாரம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவர் எதை சொன்னாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள். வருகிற தேர்தலில் அ.தி.மு.க. அரசின் ஊழல், பொறுப்பற்ற தன்மை, முதல்வர் எந்த ஊருக்கு சென்று மக்களை சந்திக்காதது ஆகியவைதான் பிரசாரத்தில் முக்கிய இடம் பெறும். டாக்டர் ராமதாஸ் வலுவில்லாதவர்கள்தான் கூட்டணி அமைப்பார்கள் என்றும், பா.ம.க. வலுவான கட்சி, 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என்றும் கூறியிருக்கிறார். ரொம்ப சந்தோஷம். தனித்து போட்டியிடட்டும். அடுத்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் 500–க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேண்டுமானாலும் போட்டியிடட்டும்’’என்று தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். nakkheeran,in

கருத்துகள் இல்லை: