சனி, 30 ஜனவரி, 2016

சகாயம்:தேர்தல் அரசியலை தாண்டி சமுகத்தை நோக்கி செல்லவேண்டும்

முற்றுப்புள்ளி வைத்த சகாயம்!சகாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து சமூக வலைதளத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் ஒரு தரப்பினர் சில மாதங்களாகவே பிரசாரம் செய்து வருகிறார்கள். ஆனால், அதற்கு சகாயம் எந்தப் பதிலும் சொல்லாமல் மெளனமாக இருந்து வந்தார். கடந்த 26-ம் தேதி திருச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் வயல் கூட்டம் நடந்தது. அதற்கு சகாயம் வந்திருந்தார். முன்னதாக பேசிய கவிஞர் நந்தலாலா, “இந்த கூட்டத்துக்கு வருகை தந்துள்ள சகாயம் ஐ.பி.எஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். சிறிது இடைவெளிவிட்டு, ‘‘இந்தியன் பப்ளிக் சர்வீஸ் என்று வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி கைதட்டல் வாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய சகாயம், இதுவரை தன்னைப் பற்றி வந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோலப் பேசினார்.


‘‘மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவது எளிதல்ல. அதைவிட அந்த நம்பிக்கையை தக்கவைக்க மிகப் பெரிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்​கிறது. இப்படிச் செயல்படுவதால் என்னை பைத்தியக்காரன், பிழைக்கத்தெரியாதவன் என்று சொல்​கிறார்கள். இந்தப் பைத்தியக்காரனை தலைமையேற்க வா என பல இளைஞர்கள் கூப்பிடுகிறார்கள்.  நான் வருகிறேனோ, இல்லையோ ஆனால், அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளேனே  அதுதான் முக்கியம். நான் அதிகம் நம்புவது குழந்தைகள், இளைஞர்களைத்​தான். அவர்கள்​தான் இந்தத் தேசத்தில் மாற்றத்தைக் கொண்டுவரப்​போகிறார்கள்” என்றார்.

‘‘அரசியலுக்கு வருவீர்களா?” என்று அவரிடம் கேட்கப்பட்டது. ‘‘அரசியலில் நேர்மையைக் கொண்டு வர வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள் தொடங்க வேண்டிய இடம் சமூகத்தில் இருந்துதான். தேர்தல் அரசியலைத் தாண்டி சமூகத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்று எண்ணுகிறேன்” என்று சொல்லி இதுவரை தன்னைப் பற்றி வந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சகாயம். vikatan.com

கருத்துகள் இல்லை: