வெள்ளி, 29 ஜனவரி, 2016

3 மாணவிகள் மரணம் திட்டமிட்டு நடந்த கொலை: எஸ்.வி.எஸ்.கல்லூரி தாளாளர் வாசுகி வாக்குமூலம்!

கள்ளக்குறிச்சி: எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகள் 3 பேர் மரணம் திட்டமிட்ட கொலை என்று அக்கல்லூரியின் தாளாளர் வாசுகி திடுக்கிடும்  வாக்குமூலம் அளித்துள்ளார் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி- சேலம் சாலையில் உள்ள பங்காரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா சித்த மருத்துவக் கல்லூரி உள்ளது. இக்கல்லுரியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும்,கல்வி பயில எதுவாக  அடிப்படை வசதிகள் அமைத்துத் தரப்படவில்லை என்றும் கூறி கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தார்கள்.அதில் எந்தப் பயனும் இல்லை.


இந்நிலையில் எஸ்.வி.எஸ். கல்லூரியின் மாணவிகள் மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகிய 3 பேர் கடந்த 24ம் தேதி மாலை கல்லூரியின் எதிரே உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்த 3 பேரும் அடித்துக்  கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டதாக மாணவிகளின் பெற்றோர்கள் தரப்பில்  புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து,எஸ்.வி.எஸ். கல்லூரி தலைவர் சுப்பிரமணியன், தாளாளர் வாசுகி இவர்களின்  மகன் சுவாக்கர் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகியோர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கலாநிதி, சுவாக்கர் வர்மா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கல்லூரி தாளாளர் வாசுகி சென்னை தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை 3 நாட்கள் புழல் சிறையில் வைக்கவும், 28ம்  தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வாசுகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

நேற்று கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு தமிழ்ச்செல்வி முன்பு வாசுகியை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது நீதிபதியிடம் வாசுகி அளித்த வாக்குமூலத்தில்,

இந்த வழக்கில் போலீசார் என்னை வேண்டும் என்றே சிக்க வைக்க முயற்சிக்கின்றனர். இறந்த மாணவிகள் நன்றாக படிக்கக்கூடியவர்கள். அவர்கள் இதுவரை கல்லூரிக்கு எதிராக எவ்வித போராட்டத்திலும் ஈடுபட்டது கிடையாது.

கல்லூரியை மூட வேண்டும் என கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக சிலர் செயல்பட்டு வந்தனர். எங்கள் கல்லூரியை மூடி காட்டுகிறேன் என போலீஸ்காரர் ஒருவர் சபதமிட்டார். 3 மாணவிகள் கைகளை ஒன்றாக கட்டிக் கொண்டு, எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும்?

திட்டமிட்டு, 3 மாணவிகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை, தற்கொலை என்ற கோணத்தில் எனக்கு எதிராக போலீசார் திசை திருப்பி உள்ளனர். இதில், தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். அரைமணி நேரம் ஒதுக்கினால் அனைத்து ஆதாரங்களையும் அளிக்கிறேன்". என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து போலீஸ் விசாரணையில் தகவல்கள் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். சிறையில் தனக்கு முதல் வகுப்பு ஒதுக்க வேண்டும் என்று வாசுகி மனு கொடுத்தார். ஆனால் அவரின் மனு நிராகரிக்கப்பட்டது.

பின்னர் வாசுகி அங்கிருந்து கடலூர் சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார். இன்று மதியம் மீண்டும் அவர் மீண்டும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதையொட்டி நீதிமன்றத்தில் போலீஸ்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போலீஸ் காவலில் வாசுகி விசாரிக்கப்பட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   விகடன்,com

கருத்துகள் இல்லை: