வியாழன், 29 அக்டோபர், 2015

பல்கலைக்கழக மானியக்குழு முற்றுகை! மாணவர்கள் மீது தாக்குதல்! 130000 மாணவர்களின் உதவித்தொகை நிறுத்தம்.. காலியாகும் கல்வித்துறை?

கடந்த 23.10.2015 வெள்ளிக்கிழமையன்று, மோடி கும்பல் இந்திய பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு இதுவரை வழங்கிவந்த தேசியத் தகுதித்தேர்வு அல்லாத உதவித்தொகையை (Non-National Eligibility Test Scholarship) நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. இதனால் இந்திய பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும் பி.ஹெச்.டி ஆய்வு செய்யும் பொருளாதாரீதியாக பின்தங்கிய கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி உடனடியாக இன்னும் இரண்டே மாதங்களில் முடிவிற்கு வருகிறது.
இதை எதிர்த்து வாழ்வா சாவா எனும் நிலையில் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், அம்பேத்கர் பல்கலைக்கழகம், டில்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக மானியக்குழுவை (யு.ஜி.சி) முற்றுகையிடும் (Occupy UGC) போராட்டத்தை அறிவித்து சமரசமற்று போராடிவருகிறார்கள். இதுதவிர மும்பையிலும் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

இரவில் தொடர்ந்த யூ.ஜி.சி முற்றுகை போராட்டம்

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றுவரும் இத்தொடர் போராட்டம் நேற்று ஆளும் வர்க்கத்த்தின் கொலைவெறித்தாக்குதலாக வடிவெடுத்திருக்கிறது.
27-10-2015 அன்று யு.ஜி.சி வளாகத்திற்கு முன்பாக போராடிய மாணவர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்ட தாக்குதலில் பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போலீசு வேனில் ஏற்றப்பட்டு வேனிற்குள்ளேயே வன்முறையை அவிழ்த்துவிட்டிருக்கிறது ஆளும் வர்க்கம். மாணவிகள் மீது காவல் துறை தடியடி நடத்தில் பலர் படுகாயமடைந்திருக்கின்றனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்] (படங்கள் : நன்றி countercurrents.org)
இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்திற்கு தோள்கொடுப்பதோடு கையறு நிலையில் நிற்கும் ஒவ்வொரு மாநிலத்தின் (இங்கு தமிழ்நாட்டின்) பல்கலைக்கழக மாணவர்களும் அணிதிரளவும் போராடவும் மிகவும் அவசியமான அவசரகாலநிலையை எதிர் நோக்கியிருக்கின்றனர். ஏனெனில், மோடி கும்பல் கடந்த ஆறு மாதத்திற்கு முன்புதான் கடந்த ஆண்டை ஒப்பிடும் பொழுது மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கிவரும் கல்விக்கான மானியத்தை 48% வெட்டிச் சரித்திருந்தது. இதுதவிர சென்ற பட்ஜெட்டில் ஒட்டுமொத்த கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டையும் 25% மோடி கும்பல் வெட்டியிருக்கிறது.
ஜே.என்.யு மாணவர் சங்க துணைத்தலைவர் ஷேலா ரஷீத்
ஜே.என்.யு மாணவர் சங்க துணைத்தலைவர் ஷேலா ரஷீத் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
நம் நாட்டில் மாணவர்களுக்கு கல்வி என்பது பார்ப்பனிய சாதிய கட்டுமானத்தாலும் தனியார்மய கொடூரத்தாலும் முற்றிலும் சிதைந்து கானல் நீராகத்தான் இருக்கிறது. பள்ளிக்கல்வியையே தாண்ட முடியாத சூழ்நிலையில் உயர் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பிற்கு வருகின்றவர்கள் மிகச்  சொற்பமானவர்களே. இதில் தேசிய தகுதிதேர்வு மூலம் உதவித்தொகை பெறுபவர்கள் ஒட்டுமொத்த ஆய்வு மாணவர்களில் வெறும் 5% மட்டுமே. இத்தேர்வல்லாது ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் துறைவாரியாக ஆய்வுப்படிப்பிற்கு வருகின்ற மாணவர்கள், பல்கலைக்கழகம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இம்மாணவர்கள் தங்களது குடும்பங்களை நம்பியிராது 5 வருட ஆய்வுக்காலத்தை தக்காட்டுவதற்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ரூ 5000-8000 அளவிலான தொகையில்தான் இந்த பாசிசக்கும்பல் கைவைக்கிறது என்றால்  இந்தப் பிரச்சனை பொருளாதாரப் பிரச்சனையல்ல! நாடு எதிர்கொண்டிருக்கும் கட்டமைப்பு நெருக்கடி பிரச்சனை!
மாணவர் சங்கம் யூ.ஜி.சிக்கு அனுப்பிய கடிதம்
மாணவர் சங்கம் யூ.ஜி.சிக்கு அனுப்பிய கடிதம்
வரும் டிசம்பரில் உலகவர்த்தக் கழக மாநாடு முன்வைக்கும் “காட்ஸ்” (GATS) பரிந்துரைகளை அமல்படுத்தும் தீவிரப்போக்கில் நாட்டின் எஞ்சியிருக்கும் மீதித் துறைகளையும் வேரோடு பிடுங்கி எறியும் முயற்சியாகவே மோடியின் பாசிசக்கும்பல் அனைத்து வேலைகளையும் செய்துவருகிறது.
கடந்த 72 மணி நேரங்களில் மட்டும் இதுவரை இச்சமூகம் கட்டியமைத்த கல்வி நிறுவனங்களை நிர்மூலமாக்கும் மூன்று முடிவுகளை அறிவித்துவிட்டார்கள்.
  1. இதன்படி யு.ஜி.சி வழங்கும் தேசியத் தகுதித்தேர்வு அல்லாத உதவித்தொகையை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நிறுத்தப்படுகிறது என்பது முதல் இடி.
  2. இரண்டாவதாக, அனைத்து சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வு நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இனி அந்த அந்த ஆய்வு நிறுவனங்களே ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அவை வணிகமயமாக்கப்படுவதன் மூலமாக தனக்கான நிதியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மோடியின் பாசிச அரசு அனைத்து ஆய்வு நிறுவனங்களையும் விற்றிருக்கிறது.
கொடும்பாவி எரிப்பு
பிரதமர் மோடி, யூ.ஜி.சி தலைவர் வேத் பிரகாஷ் கொடும்பாவி எரிப்பு
  1. மூன்றாவதாக, இந்தியப் பல்கலைக்கழகங்கள், சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வு நிறுவனங்கள் அல்லாது அனைத்து ஐ.ஐ.டி.க்களின் ஆராய்ச்சித்துறையும் தனியார் மயமாக்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. இதனால் வணிக நோக்கிலான ஆராய்ச்சிகளை மட்டுமே மேற்கொள்ளும்படி இந்திய அறிவியல் நிறுவனங்கள் மாற்றியமைக்கப்படுவது மட்டுமல்ல இதுவரை மக்களின் வரிப்பணத்தில் பொதுச்சொத்தாக இயங்கி வந்த இத்தகைய உயர்கல்வி நிறுவனங்கள் கேள்வி கேட்பாரின்றி கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன.
மூன்று முடிவுகளின் படி பார்த்தால் இந்தியக் கல்வித்துறை அடியோடு காலி!
இத்தகைய கட்டமைப்பு நெருக்கடியை எதிர்த்து களமிறங்க வேண்டியது மிக மிக அவசியம் என்பதை இச்செயல்கள் தீவிரமாக உணர்த்துகின்றன.
ஆகையால் பல்கலைக்கழக மானியக்குழு போராட்டத்திற்கு மாணவர்களுக்கு ஆதரவு தரவேண்டியது முதல் வேலை! தமிழ்நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் இதில் இணைய வேண்டியது இரண்டாவது வேலை.
“அனைவருக்கும் கல்வி கொடுக்க முடியாத அரசை தூக்கி எறிவோம்” மாணவர்களின் முழக்கப் போராட்டம்

இவையிரண்டும் கட்டமைப்பு நெருக்கடியை வீழ்த்துகிற அரசியலாக இல்லாமல் போனால் கல்வித்துறை கைவிட்டுப்போவதை நம்மால் தடுத்துவிட இயலாது என்பதை புரிந்துகொள்வது இன்றைய நிலையில் அவசரமான அவசியமான மூன்றாவது வேலையாகும்.
– இளங்கோ வினவு.com

கருத்துகள் இல்லை: