திங்கள், 26 அக்டோபர், 2015

பாஜக ஆசியுடன் காவி பயங்கரவாதிகள்....ஞானிக்கு கருப்பு மை வீசுவார்களா? .


பிரச்சார இயக்கம் போஸ்டர்-3
gnani
பத்திரிகையாளர் ஞாநி
புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் பத்திரிகையாளர் ஞாநி மீது கருப்பு மை வீசுவேன் என்று மிரட்டியுள்ளது ஒரு கூலிப்படை இந்துத்துவ வானரம்.
புத்தக வெளியீட்டு நிகழ்வில் கருப்புமை வீசுவது, கிரிக்கெட் சங்கத்தில் மிரட்டுவது போன்ற சிவசேனா கட்சியினரின் சமீபத்திய ‘லீலைகள்’ குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒரு விவாதம் நடைபெற்றது. தமிழகத்தில் அரசியல் அனாதையாக இருக்கும் இந்துத்துவா கும்பலை மக்களிடம் பிரபலப்படுத்தும் புதியதலைமுறை, தந்தி தொலைக்காட்சிகளின் வழக்கப்படி இவ்விதாதத்திற்கும் தமிழக சிவசேனா பிரமுகர் என்று ஏதோ ஒரு கூமுட்டையை அழைத்திருந்தனர்.
இவ்விவாதத்தில் தான் இந்துத்துவத்திற்கு எதிராக பேசினால் ஞாநி மீதும் மை வீசுவோம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது அந்த வானரம்.
சிவசேனாவைச் சேர்ந்த இதன் பெயர் ராதாகிருஷ்ணனாம். ஆயிரக்கணக்கானோர் பார்க்கும் ஒரு ஊடகத்தில், காமிராவின் முன்னால், வில்லன் போன்றொதொரு உடல் மொழியில் வன்முறையின் ஈடுபடுவேன் என்று அந்த ஜன்மம் பேசுவது இங்கே கவனிக்கத்தக்கது.
ஏதோ பெயர் தெரியாத கட்சிக்காரனின் சவடால் பேச்சு என்று இதை ஒதுக்கி தள்ள முடியாது. இத்தகைய ஊர் முகவரி இல்லாத ஜந்துகள்தான் தற்போது இந்தியாவெங்கும் பொதுவெளியில் மிரட்டல்களை செய்கின்றனர். இதற்கு அரசும், ஆர்.எஸ்.எஸ்ஸும் ஆசி அளிக்கின்றன. கல்புர்கியையும், பன்சரேவையும் கொன்ற சனாதன் சன்ஸ்தாவை எத்தனை பேருக்கு தெரியும்?. அவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களா மக்களிடம் செல்வாக்கு இருக்கிறதா என்பதல்ல பிரச்சனை. காலம் காலமாக எதிர்குரலை நசுக்கியே பழக்கப்பட்ட பார்பனிய சித்தாந்தம் அவர்களின் சிந்தையில் இருக்கிறது. அதை ஆளும் வர்க்கம் அங்கீகரித்திருப்பதால் சிந்தையில் ஏறிய சித்தாந்தம் வன்முறையாக வெளியே தெறிக்கும் போது இவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது.
பேரழிவு ஆயுதங்களைவிட கொடிய பார்பனிய பயங்கரவாதம், தங்களுடைய ஆட்சி மலர்ந்துவிட்டது இனி தங்களை கேட்பதற்கு யாருமில்லை என்ற சூழலில் திமிர் பன்மடங்கு அதிகரிக்கிறது. அதுதான் தாத்ரியிலும், ஹரியனாவிலும்,திருச்செங்கோட்டிலும், புதிய தலைமுறை அரங்கத்திலும் எதிரொலிக்கிறது.
பாசிஸ்டுகளை போர்க்குணமிக்க முறையில் எதிர்க்க வேண்டும் – 2103-ம் ஆண்டின் சுவரொட்டி
கொலையே செய்தாலும் தங்களை தண்டிக்க முடியாது என்ற இவர்களது நம்பிக்கையை போலீசும், நீதிமன்றங்களும் ஜனநாயகத்தின் இதர தூண்களும் பாதுகாக்கின்றன. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்துகொள்ளும்படி தனக்கு அழுத்தம் தரப்பட்டதாக பகிரங்கமாக அம்பலப்படுத்தினார் அரசு வழக்கறிஞர் ரோஹினி சலைன். தாங்கள் இஸ்லாமியர்களை கொன்றதையும், பாலியல் வன்முறை செய்ததையும் அப்போதைய குஜராத் மோடி அரசு வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் சரிக்கட்டி தன்னை காப்பாற்றியதையும் காமிராவின் முன்னால் பேசினார் பாபுபஜ்ரங்கி. அப்பாவி அப்சல் குருவை தூக்கில் போட்ட இந்திய நீதித்துறை குற்றவாளி பாபுபஜ்ரங்கியை நலமாக பராமரிக்கிறது.
2002 குஜராத் படுகொலை வழக்கில் குற்றவாளியான அமித்ஷா உள்ளிட்ட பலர் அரசு வழக்கறிஞர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்திக்கும் இடையே நடந்த மின்னஞ்சல் பறிமாற்றங்களை நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தினார் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட். அரசு அதிகாரிகளும் ஆர்.எஸ்.எஸ்-ம் எத்தனை ஆயிரம் இழைகளால் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதில் அமித்ஷாவிற்கு எதிராக வாதாட வேண்டிய அரசு வழக்கறிஞர் அமித்ஷாவுக்கு ஆதரவாக குருமூர்த்தி மற்றும் அவரது வழக்கறிஞர் ஜேத்மாலினியோடு சேர்ந்து வாதங்களை முன்வைக்கிறார், கலந்தாலோசிக்கிறார்.
அதாவது அமித்ஷாவுக்கு எதிராக அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்ய வேண்டிய பதில் மனுவை ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்திக்கு அனுப்பி சரிபார்க்க சொல்கிறார். திருத்தங்கள் செய்த குருமூர்த்தி அமித்ஷாவின் வழக்கறிஞர் ரான்ஜெத்மலானிக்கு அனுப்பி மீண்டும் ஒரு முறை சரி பார்க்க கூறுகிறார். இதை கேட்டு உச்சநீதிமன்றம் பதறவில்லை. குற்றம்சாட்டப்பட்டவரும், அரசும் கூட்டுசதியா என்று கவலைப்படவில்லை. குறைந்தபட்சம் நித்யானந்தா கூறியது போல போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணம் என்று கூட மழுப்ப முயற்சிக்கவில்லை. மாறாக மூன்றாம் நபரிடம் கருத்து கேட்பது சட்டத்தில் தடைசெய்யப்படவில்லை என்றும் அதனால் குருமூர்த்தியிடம் கருத்து கேட்டது சரிதான் என்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம். நீதிமன்றத்தை நாடிய சஞ்சீவ் பட்டை குற்றவாளியாக்குகிறது. இது குறித்து சஞ்சீவ் பட்டின் வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் இ-மெயில்ஆதாரங்கங்களை பகிரங்கமாக வெளியிட்டு தீர்ப்பை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்.
இந்து மதவெறியர்களை போலீஸ் காப்பாற்றுவதும், போலிஸ் விட்டுவிட்டால் நீதிமன்றமே முன்வந்து அவர்களை காப்பாற்றுவதும் இத்தனையும் மீறினால் பாராளுமன்றம் அவர்களை காப்பாற்றுவதும் தான் இங்கு நடைமுறையாக உள்ளது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இது தான் நடைமுறை. சனாதன் சன்ஸ்தா வை தடை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டதும், அப்சல் குருவை தூக்கிலிட்டதும் முன்னால் காங்கிரஸ் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
sliderஇந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த நம்பிக்கைதான் தோற்றுவிக்கும் அதிகாரம் தான் சிவசேனாவின் வாள்களாகவும், கருப்பு மையாகவும், சனாதன் சன்ஸ்தாவின் துப்பாக்கி தோட்டாக்களாவும் வெளிவருகின்றன. கூடவே கட்சியில் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளவும், முன்னேறவும் பெரிய சம்பவங்களை அரங்கேற்ற வேண்டிய தேவையும் பல்வேறு வானரப்படை ஜந்துகளுக்கு இருக்கிறது. ஆயிரக்கணக்கில் கொலை செய்தால் கட்சி தலைவர் பதவி, நூற்றுக்கணக்கில் செய்தால் அமைச்சர் பதவி கிடைப்பது உறுதி.
அத்வானிகளும், அமித்ஷாக்களும்,மோடிகளும் கட்சி தலைவராகவும், பிரதமாராகவும், விசாரணை கமிஷானால் குற்றம் சாட்டப்பட்ட பால்தாக்ரே அரச மரியாதையோடு சமாதியானதும், முசாபர் நகர கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மத்திய அமைச்சர்களாக இருப்பதும் சமீபத்திய சான்றுகள்.
இதே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து போலீசில் புகார் செய்து நீதிமன்றங்கள் மூலம் தண்டித்து, அதன் மூலம் இந்துமத வெறியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி அவர்களின் வன்முறையை அடக்கிவிடலாம் என்று முயல்வது கொக்குதலையில் வெண்ணை வைப்பதற்கு ஒப்பானது.
ஆனால் ஞாநியோ அந்த அளவிற்கு கூட செல்லவில்லை. புதிய தலைமுறை நிறுவனத்திடம் நியாயம் கேட்டு புகார் செய்திருக்கிறார். அவர்கள் சரியான முடிவெடுப்பார்கள் என்று நம்புவதாக அப்புகார் கடிதத்தின் இறுதியில் அவரே கூறுகிறார். இன்று வரை பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் பாரிவேந்தர் பச்சைமுத்துவின் வியாபார சாம்ராஜ்யத்தில் ஒன்று தான் புதிய தலைமுறை. ஒரு வேளை வெண்ணை உருகி கொக்கின் கண்ணை மறைக்கும் போது ஞாநி வெற்றி பெறலாம். வானரங்களையும், கூலிப்படைகளையும் புதிய தலைமுறை தொலைக்காட்சி அழைத்து வருவது ஒன்று நிர்வாகம் சார்ந்தது. அதன்படி கூட்டணிகட்சி தலைவரான பச்சமுத்து தனது இந்திய அளவிலான தொழில் விரிவாக்கத்திற்கு இத்தகைய பிரைம் டைம் பிச்சைகளை இந்துமதவெறி கும்பலுக்கு போடவேண்டும். பதிலுக்கு அந்த கும்பல் இவருக்கு தொழில் பிச்சையை போடும். இப்படி பரஸ்பர ஆதாயம் உள்ளது. இரண்டாவது இத்தகைய கூலிப்படை கோஷ்டிகளை கூட்டி வந்து இப்படி மிரட்டுவதால் தமது சானலின் ரேட்டிங் எகிறும் என்பது. அதே நேரம் இத்தகைய மிரட்டலை இந்துமதவெறியர்கள் விடுவது போலத்தால் அவர்கள் செய்ய முடியும்.
தாலி குறித்த விவாதத்தில் வானரங்கள் வகை தொகையே இன்றி அட்டூழியங்கள் செய்தாலும் ஒரு பத்திரிகை நிர்வாகம் என்ற முறையில் கூட புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எள்ளளவும் கோபமோ, தார்மீக உணர்வோ வரவில்லை. அங்கே பணியாற்றும் ஊழியர்களோ, செய்தியாளர்களோ தமது பாதுகாப்பிற்கு கூட நிர்வாகத்தை நம்பியிருக்க முடியாத சூழ்நிலை. இதில் தனது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வேண்டும் என்று பச்சமுத்துவின் மகனுக்கு கடிதம் எழுதுகிறார் ஞாநி. ஏன்? மோடிக்கே எழுதலாமே?
கடந்த பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் ஞாநிக்கு பின்வருமாறு எழுதியிருந்தோம். மீண்டும் நினைவூட்டுகிறோம்.
“இத்தகைய மதவெறி பாசிஸ்ட்டுகளை எதிர்த்த போராட்டம் தெருவிலும், மக்கள் களங்களிலும் சித்தாந்த ரீதியிலும், போர்க் குணமிக்க முறையிலும் நடக்க வேண்டும். இதன்றி இவர்களை வேரறுக்க வேறு வழியில்லை. அப்படி இருப்பதாக ஞாநி போன்றவர்கள் காட்டும் ‘ஜனநாயக’ நம்பிக்கைதான் அபாயகரமானது.”
இதனால் ஞாநி போன்றவர்கள் கம்புச்சண்டை போடவேண்டும் என்று பொருளில்லை. ஆனால் இந்துமதவெறியை வளர்த்து பாதுகாக்கும் ஊடகங்கள், அரசு, நீதிமன்றம், போலிசு மேல் அவரைப் போன்றவர்கள் கொண்டிருக்கும் மாயைதான் ஆர்.எஸ்.எஸ்-இன் பலம்.
அமைப்பு ரீதியில் கட்டமைக்கப்பட்டு நாடெங்கிலும் பல ஆயிரக்கணக்கான ஷாகாக்களுடன் அடிமுதல் நுனி வரை மதவெறியூட்டப்பட்டு இந்துமதவெறியர்கள் செயல்படுகிறார்கள். இவர்களை எப்படி வீழ்த்துவது என்று ஜனநாயக சக்திகள் சிந்திக்க வேண்டிய தருணம் இது வினவு.com

கருத்துகள் இல்லை: