ஞாயிறு, 25 அக்டோபர், 2015

தனித்து போட்டியிட்டால் திமுக 70 - 80 தொகுதிகளில் வெற்றி ! கருத்து கணிப்பு....

சட்டசபை தேர்தலில், தனித்துப் போட்டியிட்டால், தி.மு.க.,வுக்கு, 70 - 80, 'சீட்' கிடைக்கும்' என, சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளதால், அக்கட்சியினர் சந்தோஷத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்காக பிரத்யேகமாக செயல்படும் சமூக வலைதளம், தொகுதி மக்களின் கேள்வி கேட்கும் கூட்டம், 'நமக்கு நாமே' சுற்றுப் பயணம், விடியல் மீட்பு பேரணி பொதுக்கூட்டம், வேட்பாளர் தேர்வு பணி, 234 தொகுதிகளில் வெற்றி, தோல்வி பற்றிய சர்வே உள்ளிட்ட, முக்கிய பணிகளை, 'ஒன் மேன் குரூப் - ஓ.எம்.ஜி.,: ஸ்டாலின் பார் சி.எம்.,' என்ற குழு, மேற்கொண்டு வருகிறது. இந்த குழு சார்பில், ஸ்டாலின் சுற்றுப் பயணத்திற்கு பின், எடுத்துள்ள சர்வே முடிவில், 'தி.மு.க., தனித்து போட்டியிட்டால், 70 - 80 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே கூட்டணி சரியாக அமைந்தால் அடுத்தஆட்சி அதிமுகவாக இருக்காது..... 


இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, பிரதான கட்சிகள் எதுவும் முன்வரவில்லை. இதனால், தனித்தே தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற முனைப்புடன், ஸ்டாலின், 'நமக்கு நாமே' சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார்; இரண்டு கட்ட பயணத்தை முடித்துள்ளார். இதற்கிடையில், ஸ்டாலினுக்கென இயங்கும் பிரத்யேக குழு, சமீபத்தில் தமிழகம் முழுவதும் சர்வே எடுத்துள்ளது. அதில், தி.மு.க., தனித்து போட்டியிட்டால், 70 முதல் 80 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புஉள்ளது என கூறப்பட்டுள்ளது. இதனால், தி.மு.க., தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். தி.மு.க., கூட்டணியில் இணைய, தே.மு.தி.க., மற்றும் காங்கிரஸ் முரண்டு பிடிக்கும் சூழலில், தனித்தே போட்டியிடும் முடிவை, வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர். இதைத்தொடர்ந்துதான், தேர்தல் பணி பொறுப்பாளர்கள் பட்டியலை கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது. விரைவில், 14 மண்டலப் பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுவர். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கனிமொழி யோசனை:

'சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் தனித் தொகுதிகளில் போட்டியிட, குறைந்தபட்சம், 14 மகளிருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்' என, அக்கட்சித் தலைவர் கருணாநிதியிடம், மகளிர் அணி செயலர் கனிமொழி வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.'மாற்றுத் திறனாளிகள், பெண்கள் உள்ளிட்ட பலருக்கும், முக்கியத்துவம் அளித்து, தேர்தல் அறிக்கை தயார் செய்ய வேண்டும்' என, கருணாநிதியிடம், கனிமொழி வலியுறுத்தி உள்ளார். மேலும், 'தி.மு.க., போட்டியிடும் தனி தொகுதிகளில், 14ல் பெண்களை நிறுத்த வேண்டும்' என்றும், கனிமொழி யோசனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: