வியாழன், 29 அக்டோபர், 2015

இந்துவெறி காட்டுமிராண்டிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட எம்.எம். கல்புர்கி

எம்.எம். கல்புர்கிசாகித்ய அகாடமி விருது பெற்றவரும், ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், பழமையான கன்னட இலக்கியங்களின் ஆய்வறிஞர், கல்வெட்டு அறிஞர் என பன்முகத் தன்மை கொண்டவருமான எம்.எம்.கல்புர்கி ஆகஸ்டு 30-ம் தேதியன்று இந்துவெறி காட்டுமிராண்டிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்துத்துவத்தையும் லிங்காயத்து சாதிவெறியையும் மூட நம்பிக்கைகளையும் எதிர்த்து நின்ற பார்ப்பன எதிர்ப்புச் சிந்தனையாளர் கொல்லப்பட்டிருப்பது நாகரிக சமுதாயத்துக்கு பேரழிப்பாகும். கர்நாடகத்தில் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பசவர் உருவாக்கிய வீரசைவம் அல்லது லிங்காயத்து மதக் கொள்கை என்பது இந்து மதத்தின் கொள்கைக்கும் வழிபாட்டு முறைக்கும் முற்றிலும் எதிரானது. பசவரின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட பார்ப்பன சாதியப்படியில் மேல்நிலையில் இருந்தவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் அவரது மதத்தில் இணைந்து அவர்களுக்கிடையே திருமண உறவும் நிலவியது. இருப்பினும், குமரி மாவட்டத்தில் அய்யா வைகுந்தரை தன்னுள் அடக்கிக் கொண்டதைப் போலவே, பசவரையும் லிங்காயத்துகளையும் பார்ப்பனியம் காலப்போக்கில் உட்செரித்துக் கொண்டது. இந்துத்துவ சாதிய அமைப்பை எதிர்த்து உருவாகிய லிங்காயத்துக்கள் பின்னாளில் பார்ப்பனியத்துடன் சங்கமித்து தாழ்த்தப்பட்டோரை மிருகத்தனமாக ஒடுக்கும் ஆதிக்க சாதியாக மாறிப் போயினர்.

பசவரின் வீரசைவம் என்பது பார்ப்பனியத்தின் வேதங்களையும் சாதியமைப்பு முறையையும் நிராகரித்ததையும், பசவர் ஓரிறைக் கோட்பாட்டைக் கொண்டவராகவும் உருவ வழிபாட்டை நிராகரித்தவராக இருந்ததையும், அவரது கொள்கைகளை ஏற்று அவரது புதிய மதத்தில் இணைந்தவர்களே லிங்காயத்துகள் என்பதையும் தனது ஆய்வு நூலான “மார்கா” வில் கல்புர்கி நிரூபித்துக் காட்டினார். பசவரின் வச்சனா எனும் இசைக்கவிதைகளை ஆய்வு செய்த கல்புர்கி, லிங்காயத்துகளின் இன்னொரு கடவுளான சென்னபசவர், தாழ்த்தப்பட்டவருக்கும் பசவரின் சகோதரிக்கும் பிறந்தவர் என்றும் கூறினார். இந்த ஆய்வு முடிவுகள் 1989-ல் வெளியானதும் லிங்காயத்துகள் போராட்டங்களை நடத்தி அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர். எழுத்தாளர் பெருமாள் முருகனை மிரட்டியது போலவே கல்புர்கிக்கும் நெருக்குதல் கொடுத்து அவருடைய நூலின் சில பகுதிகளை நீக்கம் செய்ய வைத்தனர். என் சாதியை கல்புர்கி இழிவுபடுத்திவிட்டார் என்று கிளம்பிய லிங்காயத்து சாதிவெறியர்களைத் திரட்டிக் கொண்டு இந்துவெறியர்கள் தமது நோக்கங்களை ஈடேற்றி வருகின்றனர்.
கல்புர்கியின் இறுதி ஊர்வலம்
இந்துவெறி காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்து தார்வாட் நகரில் பெருந்திரளான உழைக்கும் மக்கள் பங்கேற்ற கல்புர்கியின் இறுதி ஊர்வலம்
லிங்காயத்துகளின் பார்ப்பனமயமாதலைத் தொடர்ந்து விமர்சித்து வந்த கல்புர்கி, கர்நாடகத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்றப்பட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், கல்புர்கியின் வீட்டின் மீது இந்துவெறியர்கள் கல்வீசித் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். கடந்த ஜூன் மாதத்தில், பிரபல கன்னட எழுத்தாளரும் ஞானபீட பரிசு பெற்ற பேராசிரியரும் பார்ப்பன எதிர்ப்பாளருமான யு.ஆர். அனந்த மூர்த்தியின் நினைவுநாள் கூட்டத்தில் பேசிய கல்புர்கி, பார்ப்பனியத்தின் உருவ வழிபாடு, சிலை வழிபாட்டுக்கு எதிராக உரையாற்றினார். இவற்றின் தொடர்ச்சியாகவே அம்முதியவரை கோழைத்தனமாக நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்றுவிட்டு இந்துவெறியர்கள் தப்பியோடியுள்ளனர்.
கல்புர்கி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மங்களூரு சிறீராம் சேனா குண்டர்கள் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடியுள்ளனர். “இந்து மதத்தை விமர்சித்தீர்கள் என்றால், நாயின் சாவை ருசியுங்கள்” என்று பஜ்ரங் தள நிர்வாகியான புவித் ஷெட்டி என்பவன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள கருத்தே இக்கொலைக்கு யார் காரணம் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டது. மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் மடாதிபதிகளுக்கு எதிராகவும் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் முன்னாள் பேராசிரியரும் கன்னட எழுத்தாளருமான கே.எஸ்.பகவானுக்கு, “அடுத்த இலக்கு நீங்கள்தான்” என்று அவன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளான். கொலைகாரர்களான இந்துவெறி அமைப்புகள் பின்னணியில் இருப்பது அம்பலமாகியுள்ள போதிலும், கல்புர்கியைக் கொன்ற இருவரை மட்டுமே பிடிக்க சிறப்புக் குழுக்களை அமைத்து தேடுதல் நாடகமாடுகிறது கர்நாடக அரசு.
தபோல்கர் - பன்சாரே
இந்துவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மூடநம்பிக்கை எதிர்ப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் (இடது); மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான கோவிந்த் பன்சாரே.
கல்புர்கி கொலைக்கு முன்னதாக, மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த பகுத்தறிவாளரும் மருத்துவருமான நரேந்திர தபோல்கர் கடந்த 2013 ஆகஸ்டு 20 அன்று மோட்டார் சைக்கிளில் வந்த இரு இந்துவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். “அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி” என்ற மூட நம்பிக்கை எதிர்ப்பு இயக்கத்தை 1989-ல் நிறுவி தொடர்ந்து இயக்கிவந்த தபோல்கர், அந்த இயக்கத்தின் மூலமாக போலி சாமியார்கள், பாபாக்கள், மந்திரவாதிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தினார். பிள்ளையார் சிலை பால் குடிக்காது, பேய்-பிசாசு என்று எதுவும் கிடையாது என்று ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்த அவர், “சாதனா” என்ற மூடநம்பிக்கை எதிர்ப்பு பத்திரிகையையும் தொடர்ந்து நடத்திவந்தார். மூட நம்பிக்கைகள் மற்றும் போலி சாமியார்களுக்கு எதிராக ஒரு சட்டத்தை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தில் அறிமுகம் செய்யவேண்டியதொரு கட்டாயத்தை மாநில அரசுக்கு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்தான் தபோல்கர். அதனாலேயே அம்மூத்த பகுத்தறிவாளர் இந்து வெறியர்களால் கொல்லப்பட்டுவிட்டார்.
இதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 16 அன்று மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் 82 வயதான இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான கோவிந்த் பன்சாரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். “சிவாஜி யார்?” என்ற பன்சாரேவின் நூல், சிவாஜியை இந்துத்துவ பேராண்மையின் சின்னமாகக் காட்டும் சிவசேனா – ஆர்.எஸ்.எஸ். புரட்டல்களைத் தோலுரித்துக் காட்டியது. இந்து மதத்தையும் சாதியையும் இழிவுபடுத்திவிட்டதாக மூட நம்பிக்கை எதிர்ப்பாளர்கள் மீது தொடர்ந்து அவதூறு வழக்கு தொடுப்பதோடு, வெளிப்படையாக மிரட்டல்கள் – தாக்குதல்களையும் நடத்தி வரும் “சனாதன் சன்ஸ்தா” என்ற இந்துவெறி பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளையும், கோட்சேவுக்கு சிலை எழுப்புவதையும் எதிர்த்து நின்றவர்தான் பன்சாரே. பன்சாரே கொலையையொட்டி சனாதன் சன்ஸ்தா என்ற இந்துவெறி அமைப்பைச் சேர்ந்த சமீர் கெய்க்வாட் என்பவனை மகாராஷ்டிர போலீசு கைது செய்துள்ளபோதிலும், அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களைக் கைது செய்யவோ, அப்பயங்கரவாத அமைப்பைத் தடை செய்யவோ முன்வரவில்லை.
 மலையாள எழுத்தாளர் எம்.எம்.பஷீர்
அனுமன் சேனா எனும் இந்துவெறி அமைப்பின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள மலையாள எழுத்தாளர் எம்.எம்.பஷீர்
இவர்கள் மட்டுமல்ல, பிரபல மலையாள எழுத்தாளரும் இலக்கிய விமர்சகருமான எம்.எம்.பஷீர் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். கேரளத்தில் பின்பற்றப்படும் இராமாயண மாதத்தில், “மாத்ருபூமி” நாளிதழில் இராமாயணம் பற்றிய படைப்புகள் வெளியிடப்படுவது வழக்கம். இந்நாளேட்டில் இராமாயணம் குறித்து எம்.எம்.பஷீர் தொடர் கட்டுரை எழுதிவந்த நிலையில், அவர் பிறப்பால் ஒரு முஸ்லிம் என்பதற்காகவே இந்துவெறியர்கள் அவர் இராமாயணத்தைப் பற்றி எழுதக் கூடாது என்று மிரட்டினர். “அனுமன் சேனா” என்ற பெயரில் இந்துவெறியர்கள் இவருக்கு எதிராகச் சுவரொட்டிகளை ஒட்டி ஊர்வலம் நடத்தி, நாளிதழ் நிர்வாகத்துக்கும் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து பஷீரின் தொடர் நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லியின் இந்துவெறிக் கும்பல் விடுத்த மிரட்டலைத் தொடர்ந்து, பிரபல ஐரோப்பிய எழுத்தாளரான வென்டி டோனிகரின் “இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு” மற்றும் “இந்துயிசம்” ஆகிய நூல்கள் பென்குயின் பதிப்பகத்தால் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு, குரு உத்சவ், பாடத்திட்ட மாற்றம், அதிகார வர்க்கத்தில் சங்கப் பரிவாரத்தினரைத் திணிப்பது – என இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை ஆளும் கும்பல் வேகமாகச் செயல்படுத்தி வரும் அதேநேரத்தில், பல்வேறு பெயர்களில் உருவாக்கப்படும் இந்துவெறி அமைப்புகள் பசுவதைத் தடுப்பு, மாட்டிறைச்சிக்குத் தடை, பிள்ளையார் ஊர்வலம், ரக்ஷா பந்தன் – எனப் பலவற்றிலும் புகுந்து, அதன் வழியே இந்துவெறியைத் தூண்டி வருகின்றன. இதன் ஒரு அங்கமாகவே இந்துவெறியை எதிர்க்கும் முற்போக்கு அமைப்புகளையும் சிந்தனையாளர்களையும் அச்சுறுத்தியும் படுகொலை செய்தும் வருகின்றன.
நாத்திகப் பிரச்சாரம் செய்தாலோ, வரலாற்று வகைப்பட்ட கேள்விகளை எழுப்பினாலோ, இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்திவிட்டதாக இந்துவெறியர்கள் அலறுகிறார்கள். அரசு பதவியில் இருக்கும் இந்துவெறியர்கள், மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கு விரோதமாக அரசு நிகழ்ச்சிகளையே மதச் சடங்குகளாக்குகிறார்கள். மத நம்பிக்கையை அரசு மேடையில் நின்று பிரச்சாரம் செகிறார்கள். அவர்களுக்கு அந்த உரிமை உண்டாம். ஆனால் கல்புர்கியும், பன்சாரேவும், தபோல்கரும் தங்களது நாத்திகக் கருத்தை மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டுமாம். வெளியே பேசினால் அது இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்துமாம். மதத்தை தனிப்பட்ட நம்பிக்கையாக வைத்துக் கொள்வதும், பொது நடவடிக்களை அறிவியல் கண்ணோட்டத்துக்கு உட்படுத்துவதும்தான் மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் சாரம். ஆனால் அறிவியல் வழிபட்ட நாத்திகக் கருத்தை தனிப்பட்ட நம்பிக்கை போல வைத்துக் கொள்ளச் சொல்லி, இந்துத்துவக் கருத்துக்களை தாராளமாக வெளியில் பேசுவதையே மதச்சார்பின்மையாக மாற்றிவருகிறது பார்ப்பன பாசிசம்.
சாதி என்ற நிறுவனத்தையும் உணர்வையும் பராமரித்துவரும் பார்ப்பன பாசிசம், இந்துவெறிக்கு சமூக அடித்தளமாக சாதிவெறியர்களைச் சேர்த்துக் கொள்கிறது. கொங்கு வேளாளக் கவுண்டர் சாதிவெறியர்களின் ஆதரவும் அடித்தளமும் இல்லையேல், இந்துவெறியர்களால் இத்தனை வீரியத்தோடு மாதொரு பாகன் நூலை எழுதிய பெருமாள் முருகனை எதிர்க்க முடியாமல் போயிருக்கும். இந்துவெறியும் சாதிவெறியும் இணைந்து நின்று தாக்குதல் தொடுக்கும் இந்தப் போக்குதான், கர்நாடகத்தில் லிங்காயத்து சாதிவெறியர்களை சமூக அடித்தளமாகக் கொண்டு முற்போக்கு சிந்தனையாளரான கல்புர்கியைக் கொல்லத் துணிந்திருக்கிறது.
இப்படித்தான் பல்வேறு மாநிலங்களிலும் தமது தேர்தல் உத்திக்கேற்ப சாதிவெறியர்களால் நடத்தப்படும் ஆதிக்க சாதிச் சங்கங்களுடன் இந்துவெறியர்கள் கூட்டணி அமைக்கின்றனர். இவர்களின் சமூக அடித்தளமாக சாதிவெறியர்களால் நடத்தப்படும் சாதிய சங்கங்களும் சாதியக் கட்சிகளும் மாறிப் போயுள்ளன. வர்க்கப் போராட்டத்துக்கு மாற்றாகவும், சாதியை ஒழிப்பதற்கான மண்ணுக்கேற்ற வழிமுறையாகவும் முன்வைக்கப்பட்ட சமூகநீதி அரசியல் என்ற பெயரிலான சாதிய அடையாள அரசியல்தான், மக்கள் மத்தியல் மங்கிவரும் சாதிய உணர்வை மீண்டும் புதுப்பித்துக் கிளறிவிடுகிறது. பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமை பற்றி பேசித் திரிந்த எல்லா சாதியப் பிழைப்புவாதிகளின் சாயமும் வெளுத்துப் போய், சாதியத்தைக் கட்டிக்காக்க வேண்டுமென்ற பார்ப்பனியக் கொள்கையே சமூகநீதிக் கொள்கையாக மாறியிருக்கிறது. பெரியாரையும் அம்பேத்கரையும் தங்களது அரசியல் பிழைப்புவாதத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளும் சமூக நீதி பேசும் ஓட்டுக் கட்சிகள், அவர்களது பார்ப்பன எதிர்ப்புக் கருத்துகளைப் பேசுவதில்லை. மாறாக, பார்ப்பனியத்தின் நவீன அடியாட்படையாக மாறி நிற்கிறார்கள்.
சில எழுத்தாளர்கள், கல்புர்கியின் கொலையை கருத்துரிமைக்கு எதிரான செயலாகவும், மாற்றுக் கருத்துகளை எதிர்கொள்ள முடியாத சகிப்புத்தன்மையற்ற செயலாகவும் சித்தரிக்கின்றனர். பெருமாள் முருகன் விவகாரத்திலும் இப்படிப்பட்ட சரணாகதி வாதம்தான் வைக்கப்பட்டது. பார்ப்பனியத்தையும் கொங்கு வேளாளக் கவுண்டர், வன்னியர், தேவர், லிங்காயத்து சாதிவெறியையும் எதிர்க்க முன்வராமல், இப்படி கருத்துரிமை பற்றி சண்டமாருதம் செய்வதன் மூலம் சாதிவெறியும் இந்துவெறியும் திட்டமிட்டே மறைக்கப்படுகிறது. இத்தகைய சரணாகதியும் சந்தர்ப்பவாதமும்தான் இந்துவெறியர்கள் மேலும் மூர்க்கமாகவும் வெளிப்படையாகவும் தாக்குவதற்கு வாய்ப்பாக அமைகின்றன.
அண்மைக் காலங்களில் நாம் இழந்திருக்கும் முற்போக்கு சிந்தனையாளர்களின் உயிர்கள் விலை மதிப்பற்றவை. இந்துவெறி பாசிஸ்டுகளுக்கும் அவர்களது அடியாட்படையாக உள்ள சாதியப் பிழைப்புவாதக் கட்சிகளையும் அம்பலப்படுத்தி முறியடிக்கப் போராடுவதுதான் நாம் இத்தகையோருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.
– குமார். வினவு.com

கருத்துகள் இல்லை: