புதன், 11 பிப்ரவரி, 2015

தமிழக காங்கிரசின் 10ஆயிரம் கோடி சொத்தை கைப்பற்ற டில்லியில் (சதி) ஆலோசனை!

தமிழகத்தில், காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமாக நிறைய சொத்துகள் உள்ளன. சென்னையில், தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகம் அமைந்துள்ள, சத்தியமூர்த்தி பவன், தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கம், அதையொட்டியுள்ள மைதானம் உட்பட, மாநிலம் முழுவதும் இக்கட்சிக்கென, 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாய் மட்டும், வங்கியில் 52 கோடி ரூபாய் இருப்பு உள்ளது. இந்த சொத்துகளை பராமரிக்கவும், நிர்வகிக்கவும், தமிழக காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை உள்ளது. இதில், ஐந்து பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவது வழக்கம். தமிழக காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவராக வருகிறாரோ, அவரும் இதில் ஒரு உறுப்பினராக இடம் பெறுவார். அந்த வகையில், இளங்கோவனும் டிரஸ்டில் இடம்பெற்றுள்ளார். அதே நேரத்தில், கட்சி மேலிடத்தால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் என்ற முறையில், யசோதா, சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் மட்டுமே தொடர்கின்றனர்.


ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் கட்சியை விட்டு வெளியேறியதால், டிரஸ்ட் உறுப்பினர் பதவியை இழந்துள்ளனர். அதன் காரணமாக இப்போது, இந்த அறக்கட்டளை நிர்வாகத்தை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. இதுபோன்ற வாய்ப்பை தான், காங்கிரஸ் மேலிடம் எதிர்பார்த்திருந்தது. ஏற்கனவே, ஞானதேசிகன், தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, இந்த டிரஸ்ட்டை கைப்பற்ற காங்கிரஸ் மேலிடம் முயன்றது. காங்கிரஸ் மேலிட தலைவரும், சோனியாவின் நம்பிக்கைக்கு உரியவருமான மோதிலால் வோரா, ராகுலுக்கு மிகவும் நெருக்கமான கனிஷ்க் ஆகியோர், சென்னை வந்து, காங்கிரஸ் சொத்துகளை பார்வையிட்டனர். அவை தொடர்பான, கணக்கு புத்தகங்களையும் எடுத்துச் சென்றனர்.தமிழக காங்கிரஸ் செயற்குழுவை கூட்டி, டிரஸ்ட் அதிகாரத்தை, கட்சியின் மேலிடத்திற்கு வழங்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றும்படி வலியுறுத்திச் சென்றனர். ஆனால், ஞானதேசிகன் கடைசி வரையில் அதற்கு இடம் கொடுக்க மறுத்து விட்டார். இப்போது, வாசனும் ஞானதேசிகனும் வெளியேறி விட்டனர். அதனால், காங்கிரஸ் மேலிடம் எதிர்பார்க்கும் காரியம், வெகு எளிதாக நடந்து விடும் என, தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இது குறித்து, கட்சி வட்டாரம் மேலும் கூறியதாவது: தற்போது இந்த டிரஸ்ட்டில் இடம்பெறுவதற்கு, சிதம்பரம், பிரபு, ஜெயக்குமார், மாணிக் தாகூர், விஜயதாரணி ஆகியோர் விரும்புகின்றனர். சிதம்பரத்திற்கு மேலிட ஆதரவு அதிகம் இருக்கிறது. பிரபுவை கொண்டு வரவேண்டும் என, இளங்கோவன் கருதுகிறார். யசோதாவுக்கு பதிலாக, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவுக்கான ஒதுக்கீட்டின் படி, தன்னை நியமிக்க வேண்டும் என, ஜெயக்குமார் கூறுகிறார். பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தின் கீழ், விஜயதாரணி உரிமைகோருகிறார். காங்கிரஸ் மேலிடம் வேறு விதமாக எண்ணுகிறது. டிரஸ்ட் தலைவராக, மோதிலால் வோராவை நியமிக்க திட்டமிட்டு வருகிறது. அவரது தலைமையில் டிரஸ்ட் மாற்றி அமைக்கப்பட்டால், டிரஸ்ட் நிர்வாகம் முழுவதும், காங்கிரஸ் மேலிடத்தின் கைக்கு போய் விடும். மேலும், அந்த டிரஸ்ட்டில் சிதம்பரம், மாணிக் தாகூர் ஆகியோரை புதிதாக நியமிக்கவும் மேலிடம் முடிவு செய்துள்ள தகவலும் டில்லியில் அடிபடுகிறது. இவர்களுடன், ஏற்கனவே உள்ள சுதர்சன நாச்சியப்பன், யசோதாவும் நீடிப்பரா என்பது தெரியவில்லை. அவர்களுக்கு பதிலாக புதியவர்கள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, தமிழக காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்தது.

- நமது சிறப்பு நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை: