திங்கள், 9 பிப்ரவரி, 2015

பணப்பட்டுவாடா முடிஞ்சு போச்சு, இனி எதுக்கு சிறப்பு அதிகாரி.... தேர்தல் ஆணையம் குறித்து தமிழிசை அதிருப்தி

திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா எல்லாம் முடிந்தபிறகு, தேர்தல் ஆணையம் சிறப்பு அதிகாரியை நியமித்து நடவடிக்கை எடுத்திருப்பது, குதிரை ஓடியபின் லாயத்தை பூட்டுவதற்கு ஒப்பானது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பாஜக வேட்பாளர் சுப்பிரமணியன் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஸ்ரீரங்கம் தொகுதியில் நேற்று அமைதியான முறையில் அனுமதி பெற்று பிரசாரம் மேற்கொண்டிருந்த எங்களது வேட்பாளர் சுப்பிரமணியன், அவரோடு தேர்தல் பணியில் ஈடுபட்ட பா.ஜ.க. மாவட்ட தலைவர் பார்த்திபன், மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தன், எங்களது கூட்டணி கட்சியான தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் விஜயராஜன் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் மீது காயம் ஏற்படுத்தும் வகையில் அ.தி.மு.க.வினர் கொலைவெறி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இது வன்மையான கண்டனத்துக்குரியது. ஸ்ரீரங்கத்தில் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கிறது. தேர்தல் ஆணையர் சக்சேனா ஆலோசனைக்கு பின் சிறப்பு தேர்தல் அதிகாரி அங்கே பணியில் அமர்த்தப்பட்ட பின்பு, தேர்தல் ஆணையம் சற்று கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இது தாமதப்பட்ட நடவடிக்கை என்றே நாங்கள் உணர்கிறோம். தேர்தல் ஆணையம் இந்த தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பே ஸ்ரீரங்கத்தில் பணப்பட்டுவாடா, ஆடைகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுவிட்டது. எனவே தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை குதிரை ஓடிய பின்பு லாயத்தை பூட்டுவது போலத்தான் தெரிகிறது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அங்கொன்றும், இங்கொன்றுமான கண்துடைப்பாக தெரிகிறதே தவிர, ஆளுங்கட்சியின் அத்துமீறல்களை முழுவதுமாக துடைப்பாக தெரியவில்லை. வாக்காளர்கள் சுதந்திரமாக சிந்திக்கும் மனநிலையை பெற்றுவிடக்கூடாது என்பதில், அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய கட்சிகள் குறியாக இருக்கின்றன. தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் எவ்வளவு பணம் கொடுத்திருந்தாலும், வாக்காளர்களின் மனம் அதற்கு அசைந்துக்கொடுக்காமல் ஊழலுக்கு எதிராக துணிச்சலுடன் போட்டியிடும் பா.ஜ.க. பக்கமே இருக்கிறது என்ற பயத்தில் பா.ஜ.க. வினர் மீது தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: