திங்கள், 27 அக்டோபர், 2014

ஜி.கே.வாசன் : நேரு குடும்பத்தை சேராதவர் காங்கிரஸ் தலைவராக எண்ண முடியாது !

ஜி.கே.வாசன்: ‘‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் எந்த ஒரு காங்கிரஸ் தொண்டருக்குமே நேரு குடும்பத்தில் இல்லாத ஒருவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காது’’ 
எதிர்காலத்தில் நேரு குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வர வாய்ப்புள்ளது என்று கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்துக்கு ஜி.கே.வாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், ‘‘சோனியாவும், ராகுலும் மக்களிடம் வெளிப்படையாக பல்வேறு விஷயங்கள் குறித்து பேச வேண்டும். சோனியா காந்தி நல்ல தலைவர்தான். எதிர்காலத்தில் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வர வாய்ப்புள்ளது’’ என்று கருத்து தெரிவித்திருந்தார். ப.சிதம்பரத்தின் இந்த கருத்து காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், ப.சிதம்பரத்தின் கருத்துக்கு முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதிமுக அடிமைகளுக்கு சற்று குறையாத அடிமைகள் காங்கிரசிலும் இருக்கிறார்கள் என்று வாசன் ஒப்புதல் வாக்குமூலம்


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக மீனவர்கள் பிரச்சினை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இலங்கை கடற்படை தளபதியை இந்தியா அழைத்து கவுரவிக்க உள்ளது. இது தமிழக மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மத்திய அரசு மக்களின் வேதனையை உணர்ந்து சரியாக செயல்பட வேண்டும்.

தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கியதை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், பால் விலை உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏழை, எளிய மக்கள் ஆவின் பாலையே அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே, பால் விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கூடுதலாக ஏற்படும் நஷ்டத்தை அரசே ஏற்க வேண்டும். மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, தமிழக மக்களிடம் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கருத்து கேட்டு வருகிறது. பொதுமக்களுக்கும் மின் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும். என்றார்.

அதனைத் தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், ப.சிதம்பரம் தெரிவித்த கருத்து குறித்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஜி.கே.வாசன், ‘‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் எந்த ஒரு காங்கிரஸ் தொண்டருக்குமே நேரு குடும்பத்தில் இல்லாத ஒருவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காது’’ என்று கூறினார். அதாவது, ப.சிதம்பரத்தின் கருத்துக்கு ஜி.கே.வாசன் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்தார். இது காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. dailythanthi.com

கருத்துகள் இல்லை: