ஞாயிறு, 26 அக்டோபர், 2014

கள்ளகாதல் அம்பலமானதால் 3 வயது சிறுவனை கொன்ற பீரோவில் அடைத்த வேலூர் பெண்மணி !

வேலூர்: வேலூரில் கள்ளத்தொடர்பு தகராறில் 3 வயது சிறுவனை வாய்,  கைகளை கட்டி தலையணையால் அமுக்கி கொலை செய்து பீரோவில்  அடைத்து வைத்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். வேலூர்  புதிய பஸ் நிலையம் அருகே உள்ள முத்துமண்டபம் பகுதியை  சேர்ந்தவர் முரளி(30), சலவை தொழிலாளி. இவரது மனைவி சுமதி (27).  இவர்களுக்கு 3 மகன்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை  வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த முரளியின் 2வது மகன்  தினேஷ் (3) திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சியடைந்த முரளி  தம்பதி பல்வேறு இடங்களிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கும்  கிடைக்கவில்லை. புகாரின்படி வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு  செய்து மாயமான சிறுவனை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று  முன்தினம் நள்ளிரவு அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாயமான தினேஷ்,  பக்கத்தில் உள்ள பிரபு என்பவரது வீட்டில் இறந்து கிடப்பதாக  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் பிரபுவின்  வீட்டிற்கு சென்றனர். அங்கு வீட்டின் கதவு பூட்டி இருந்தது. அவரது  மனைவி சுமதி (24) வெளியே அமர்ந்திருந்தார். போலீசார் கேட்டபோது  கணவர் வீட்டை பூட்டி சாவியை எடுத்து சென்று விட்டதாக கூறினார்.  இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே  சென்று சோதனை செய்தனர்.

அங்கிருந்த பீரோவை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.  பீரோவில் சிறுவன் தினேஷ் கைகள் கயிற்றாலும், வாய் துணியாலும்  கட்டப்பட்ட நிலையில் அடைக்கப்பட்டு இறந்து கிடந்தான். உடனடியாக  சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் பிரபு மனைவி சுமதியை கைது செய்து  விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில்  கூறியிருப்பதாவது: எனக்கும் எதிர் வீட்டில் இருக்கும் முரளிக்கும்  பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளத்தொடர்பாக மாறியது.  இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம்.  எங்களது தொடர்பு முரளியின் மனைவி சுமதிக்கு தெரிந்து விட்டது.  அவர் சில நாட்களுக்கு முன்பு ஊரில் உள்ள பெரியவர்களை வைத்து  பஞ்சாயத்து செய்து எங்களது கள்ளத்தொடர்பை அம்பலப்படுத்தினார்.  இதனால் நான் அவளை பழிவாங்க திட்டம் தீட்டினேன்.

நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த  சுமதியின் 2வது மகன் தினேசை எனது வீட்டுக்கு அழைத்து வந்தேன்.  பின்னர் அவனது வாயை துணியாலும் கையை கயிறாலும் கட்டினேன்.  அதன்பிறகு தலையணையை அவனது முகத்தில் வைத்து அழுத்தி  கொலை செய்தேன். வெளியே யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என  கருதி சிறுவனின் சடலத்தை பீரோவுக்குள் வைத்து பூட்டினேன். இரவு  நேரத்தில் யாருக்கும் தெரியாமல் சடலத்தை எங்காவது வெளியே  வீசிவிடலாம் என நினைத்தேன். ஆனால் நேரம் செல்ல செல்ல எனக்கு  பயம் தொற்றிக்கொண்டது. சிறுவனை கொலை செய்த விஷயத்தை  அருகில் வசிப்பவரிடம் கூறினேன். அவளது மகனை கொலை செய்து  விட்டால் என்னை பற்றி சுமதி அவதூறாக பேசமாட்டாள். குழந்தை  இறந்த துக்கத்தில் மறந்து விடுவாள் என நினைத்து கொலை செய்தேன்.  இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது.  கள்ளத்தொடர்பை அம்பலப்படுத்தியதால் சிறுவனை கொடூரமாக பெண்  கொலை செய்த சம்பவம் வேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. dinakaran,com

கருத்துகள் இல்லை: