சனி, 17 மே, 2014

அழகிரி: தி.மு.க. தோல்விக்கு காரணமானவர்கள் கட்சியில் இருந்து விலகவேண்டும்:

“தி.மு.க. தோல்விக்கு காரணமானவர்கள் கட்சியில் இருந்து விலகவேண்டும்” என்று மு.க.அழகிரி கூறினார்.
நேற்று வெளியான பாராளுமன்றத்தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்வதற்காக, மதுரையில் மு.க.அழகிரி இல்லத்தின் முன்பு மிகப்பெரிய திரையிலான டி.வி. ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அழகிரியும், அவருடைய ஆதரவாளர்களும் அங்கு அமர்ந்து தேர்தல் முடிவுகளை தொடர்ந்து பார்த்தனர்.

அப்போது அழகிரியிடம் நிருபர்கள் தேர்தல் முடிவு குறித்து கருத்து கேட்டனர்.

அதற்கு அவர், ‘‘நான் தான் தேர்தலில் போட்டியிட வில்லையே, வெற்றி-தோல்வி பற்றி எனக்கு கவலையில்லை” என்று கூறினார்.


அதன்பின் மீண்டும் மாலையில், நிருபர்கள் தேர்தல் முடிவு குறித்து மு.க.அழகிரியிடம் கருத்து கேட்டனர். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- தி.மு.க.வின் தோல்வி குறித்து?

பதில்:- இந்த தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம், கலைஞரின் அறிவுரைப்படி நடக்காமல் போனது தான். மேலும் கட்சியின் ஆல் இன் ஆல் அழகுராஜா மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரமாக நடந்து கொண்டார். யாரையும் மதிக்க வில்லை. இதுதான் தோல்விக்கு முக்கிய காரணம். கலைஞரின் விருப்பப்படி வேட்பாளர்களின் தேர்வு நடைபெற வில்லை. அதனால் தான் தி.மு.க. படுதோல்வி அடைந்துள்ளது. எனவே இந்த தோல்விக்கு காரணமானவர்கள் கட்சியில் இருந்து விலகவேண்டும்”.

கேள்வி:- மீண்டும் கலைஞர் அழைத்தால், கட்சியில் சேருவீர்களா?

பதில்:- அவர் அழைத்தால் பார்ப்போம். ஆனால் என்னுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் கட்சியில் சேருவேன். அதாவது முறைகேடாக நடந்த உட்கட்சி தேர்தலை ரத்து செய்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். மாவட்ட செயலாளர்களை மாற்ற வேண்டும். கட்சியை சுத்தம் செய்ய வேண்டும்.

கேள்வி:- அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று இருக்கிறதே?

பதில்:- அ.தி.மு.க.வினர் தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்ததாக பத்திரிகைகளில் எல்லாம் செய்தி வந்ததே. அதுமட்டுமின்றி கலைஞரின் சொல்படி நடக்காததால், தி.மு.க.வின் பலவீனத்தை அ.தி.மு.க. தனக்கு சாதகமாக்கிக் கொண்டது.

கேள்வி:- தேசிய அளவில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றுள்ளதே?

பதில்:- நரேந்திரமோடிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.அழகிரி கூறினார். .maalaimalar.com/

கருத்துகள் இல்லை: