வெள்ளி, 26 ஏப்ரல், 2013

வணிக வளாக தீ விபத்து மேனேஜர், ஷேர் நிறுவன ஓனர் கைது

  
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
கோவை: கோவையில் வணிக வளாக தீ விபத்தில் 4 பெண்கள் பலியான சம்பவத்தில் வளாக மேலாளர் மற்றும் அங்கு செயல்பட்டு வந்த பங்கு வர்த்தக நிறுவன அதிபரை போலீசார் கைது செய்துள்ளனர். வணிக வளாக உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை அவிநாசி சாலை லட்சுமி மில் சந்திப்பில் உள்ள ‘விக்னேஸ்வர் கிரெஸ்டா‘ என்ற 3 மாடி வணிக வளாகத்தில் ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ இன்சூரன்ஸ் நிறுவனம், ஷேர்கான் பங்கு வர்த்தக நிறுவனம் உள்ளிட்ட 16 நிறுவனங்கள் இயங்கி வந்தன. 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்தனர். கட்டிடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஷேர்கான் நிறுவன ரிசப்ஷனிஸ்ட் கீர்த்தனா (26), ஊழியர் ஸ்ரீலட்சுமி (30), விஜயலட்சுமி (50), மார்க்கரெட் மேரி (58) ஆகிய 4 பெண்கள் கருகி இறந்தனர். பலர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 2வது மாடியில் உள்ள ஷேர்கான் நிறுவனத்தில் நேற்று காலை யுபிஎஸ் சரியாக இயங்காததால் எலக்ட்ரீசியன் மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டுள்ளனர். கருகிய மின் ஒயரை சரி செய்துள்ளனர். பின்னர் அந்த இடத்தில் தீப்பிடித்துள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்துக்குள்ளான வணிக வளாகத்தின் உரிமையாளர் ஆதித்யா. கடந்த 99ம் ஆண்டு தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் தொழிற்சாலை கட்ட கோவை மாநகராட்சியில் அனுமதி வாங்கியுள்ளார். தொழிற்சாலை கட்டாமல் வணிக வளாகம் கட்டியுள்ளார். அதிலும் 2வது, 3வது தளத்துக்கு அனுமதியே பெறவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளுக்கு மாறாக 16 நிறுவனங்களை கொண்ட கட்டிடத்துக்கு ஒரே வழி பாதை, குறுகிய படிக்கட்டுகள், போதிய தீயணைப்பு கருவிகள், தீ எச்சரிக்கை கருவிகள் இல்லாமை, கட்டிடம் முழுவதும் கடினமான கண்ணாடிகளை திறக்க முடியாதபடி பொருத்தியுள்ளது என பல்வேறு விதிமுறை மீறல்கள் தெரியவந்துள்ளது. தீயணைப்பு துறையிடம் தீத்தடுப்பு சான்றிதழ் பெற்றிருக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

தீவிபத்து தொடர்பாக வணிக வளாக மேலாளர் ஒண்டிப்புதூரை சேர்ந்த பாஸ்கர் (45), ஷேர்கான் பங்கு வர்த்தக நிறுவன உரிமையாளர் பீளமேடு லட்சுமி புரத்தை சேர்ந்த மோகனகிருஷ்ணன் (42) ஆகியோரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர். வணிக வளாக உரிமையாளர் ஆதித்யா மீது வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.கலெக்டர் கருணாகரன் கூறுகையில், ‘தீ விபத்திற்குள்ளான கட்டிடத்தில் பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோல் விதிமுறை மீறிய வணிக வளாக கட்டிடங்களை கண்டறிய வருவாய், தீயணைப்பு, காவல்துறை, மாநகராட்சி உள்ளூர் திட்டக்குழுமம் ஆகிய துறை அதிகாரிகள் தலைமையில் ஊழியர்கள் இன்று ஆய்வு பணியில் களமிறங்கியுள்ளனர். இதன் மூலம் விதிமுறை மீறல் கட்டிடங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது‘ என்றார்.கோவை வணிக வளாக தீ விபத்து எதிரொலியாக மாநிலம் முழுவதும் வணிக வளாக கட்டிடங்கள் ஆய்வு செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கையை துவக்கி உள்ளனர்.tamilmurasu.or

கருத்துகள் இல்லை: