ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

டெல்லியில் போலிசுக்கு எதிராக வெடித்த போராட்டம் 5 சிறுமி பாலியல் பலாத்காரம் 2,000 ரூபாய் லஞ்சம் கொடுத்து போலீசார் பேரம் பேசினர்.

ஐந்து வயது சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், டில்லி மக்கள் கொந்தளித்துள்ளனர். மீண்டும் வீதியில் இறங்கி, போராட துவங்கியுள்ளனர். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை, நேற்று முற்றுகையிட்ட அவர்கள், போலீசாரை நோக்கி, வளையல்களையும், ரூபாய் நோட்டுகளையும் வீசி எறிந்து, தங்களின் கோபத்தையும், ஆவேசத்தை காட்டியதால், பெரும் பரபரப்பு உருவானது.கடந்த டிசம்பரில், டில்லியில், ஓடும் பஸ்சில், மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம், நாடு முழுவதும், பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. டில்லி நகரத்தையே உலுக்கும் வகையில், மிகப் பெரிய போராட்டங்களும் நடைபெற்றன.இந்நிலையில், டில்லியின் கிழக்குப் பகுதியில் உள்ள, காந்தி நகரில், ஐந்து வயது சிறுமி, கடந்த வாரம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். பலத்த காயங்களுடன் அந்தச் சிறுமி, மருத்துவமனையில், உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதால், இந்த விவகாரம், டில்லியை ஆட்டிப் படைக்கத் துவங்கியுள்ளது.நேற்று காலை, 11:00 மணியளவில், டில்லி, ஐ.டி.ஓ., பகுதியிலுள்ள போலீஸ் கமிஷனர் தலைமை அலுவலகம் முன், ஏராளமானோர் கூடினர். அதிகளவில் தடுப்புகளை வைத்து, அரண்கள் ஏற்படுத்தி இருந்தாலும், நேரம் ஆக ஆக, பொதுமக்களின் எண்ணிக்கை கூடியது. இதனால், அந்தப் பகுதி முழுவதும், போராட்டக்காரர்கள் வசம் வந்தது. சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானவர்கள், மிகுந்த கோபத்தில் இருந்தனர். போலீசாரை நோக்கி, வளையல்களையும், ரூபாய் நோட்டுகளையும் வீசி எறிந்தனர். சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து, முதலில் போலீஸ் நிலையத்தில், புகார் கொடுத்த பெற்றோரிடம், 2,000 ரூபாய் லஞ்சம் கொடுத்து, இந்த விஷயத்தை அப்படியே விட்டு விடும்படி, போலீசார் பேரம் பேசினர்.


இதையே காரணம் காட்டி, நேற்று, போராட்டக்காரர்கள், அடக்க முடியாத ஆவேசத்தைக் காட்டினர்.போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் மட்டுமின்றி, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேயின் வீடு, சிறுமி சிகிச்சை பெற்று வரும், எய்ம்ஸ் மருத்துவமனை, காந்தி நகர் போலீஸ் நிலையம் என, பல இடங்களிலும் மக்கள் வெள்ளமென கூடி, ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் மட்டுமின்றி, அரவிந்த் கெஜ்ரிவாலின், ஏழை மக்கள் கட்சியினரும், பெரிய அளவில் பங்கேற்றனர். இது தவிர, கம்யூனிஸ்ட், பா.ஜ., கட்சிகளின் மாணவர் அமைப்புகளும், போராட்டத்தில் பங்கேற்றதால், பெரிய அளவில் பதட்டம் காணப்பட்டது. "டில்லி போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்து, நீரஜ் குமாரை உடனடியாக நீக்க வேண்டும்' என்பதே, ஆர்ப்பாட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. அடுத்து, பெற்றோருக்கு லஞ்சம் கொடுத்த போலீசாரையும், பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, கோஷமிட்டனர்.

சம்பவம் குறித்து, டில்லியில், நேற்று, உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், பல விஷயங்கள், அதிர்ச்சிகரமாக உள்ளன. எனவே, இந்த விவகாரத்தின் முழு பின்னணி சம்பவங்களையும் தொகுத்து, அறிக்கை தரும்படி, டில்லி போலீசுக்கு உத்ரவிடப்ட்டுள்ளது. சிறுமியின் பெற்றோர், புகார் கொடுக்கச் சென்ற போது, போலீசார் ஏன் எப்.ஐ.ஆர்., போடவில்லை? வேண்டுமென்றே காலதாமதம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? பெற்றோருக்கு எதற்காக, போலீசாரே லஞ்சம் தர வேண்டும்? இந்த கேள்விகள் எல்லாவற்றுக்கும், பதில் தர வேண்டும் என்றும், டில்லி போலீசிடம் கோரப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்தவுடன், உள்துறை அமைச்சகம் நடவடிக்கைகளை எடுக்கும்.இவ்வாறு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே கூறுகையில், ""இந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை, மூடி மறைக்க முயற்சித்ததாக, போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி, தவறுசெய்த போலீசார் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

பின்வாசல் வழியே சென்ற குலாம் நபி ஆசாத்!டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை பார்க்க, மத்திய சுகாதார அமைச்சர், குலாம்நபி ஆசாத், நேற்று வந்தார். மருத்துவமனை முன், மக்கள் கோபத்துடன் இருந்ததால், அவரால் முன் வாசல் வழியே, செல்ல முடியவில்லை. போலீஸ் பாதுகாப்புடன், பின் வாசல் வழியே, அழைத்துச் செல்லப்பட்டார்.பின், எய்ம்ஸ் டாக்டர் குப்தா கூறுகையில், ""சிறுமி, ஆபத்தான நிலையை தாண்டி விட்டார். அவளுக்கு உயர் தர சிகிச்சை அளிக்கும்படி, அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். எட்டு பேர் கொண்ட டாக்டர்கள் குழு, சிறுமியின் உடல் நிலையை கண்காணித்து வருகிறது. காயங்கள் எல்லாம் ஆறியவுடன், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
மாமனார் வீட்டில் பதுங்கியகொடியவன் சிக்கினான் : டில்லியில் ஐந்து வயது சிறுமியை, தன் வீட்டுக்குள் அடைத்து வைத்து, பாலியல் பலாத்காரம் செய்த, மனோஜ் குமார், பீகாரில் உள்ள, அவனது மாமனார் வீட்டில் பதுங்கியிருந்தபோது, டில்லி போலீசார், சுற்றி வளைத்து கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:கைது செய்யப்பட்டுள்ள, மனோஜ் குமார், 22, பீகார் மாநிலத்தை சேர்ந்தவன். சில ஆண்டுகளுக்கு முன், தொழில் நிமித்தமாக, டில்லிக்கு வந்தான். டில்லியில் உள்ள, துணிக்கடையில் பணிபுரிந்தான். சமீபத்தில் தான், அவனுக்கு, திருமணம் நடந்தது.பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சிறுமி, சுய நினைவை இழந்ததால், இறந்து விட்டதாக கருதி, அங்கிருந்து தப்பி ஓடினான். பீகாரில், அவன் பதுங்கியிருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசார், அங்கு சென்று, அவனை கைது செய்தனர். அவனிடம், தீவிர விசாரணை நடந்து வருகிறது. டில்லியில், சிறுமியின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இவன் வசித்தான் என்பது குறிப்பிடத்தக்கது. "சிறுமி உடல் நிலை சீராக உள்ளது' : கொடியவனால், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சிறுமி, தற்போது, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறாள். சிறுமியின் உடல்நிலை குறித்து, எய்ம்ஸ் மருத்துவமனை கண்காணிப்பாளர், டாக்டர் சர்மா கூறியதாவது:சிறுமியின் உடல் நிலை சீராக உள்ளது. நினைவுதிரும்பியுள்ளது. கொஞ்சமாக பேசுகிறாள். உடலின் முக்கிய பாகங்கள் அனைத்தும், சீராக இயங்குகின்றன. தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து, வேறு வார்டுக்கு மாற்றியுள்ளோம். ஆனாலும், சிறுமியின் உடல் நிலையை, டாக்டர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். சிறுமியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும், முக்கியமான அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது.இவ்வாறு, டாக்டர் சர்மா கூறினார்.

"" ஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை அறிந்ததும், அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தேன். இதுபோன்ற, மோசமான சம்பவங்கள், தொடர்ந்து நடப்பதற்கு, என்ன காரணம் என்பதை அறிந்து, அதற்கு தீர்வு காண வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.
பிரணாப் முகர்ஜி,ஜனாதிபதி

"" சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், வேதனையையும், கவலையையும் அளிக்கிறது. இதுபோன்ற குற்றங்கள், மீண்டும் நிகழாமல் தடுக்க, டில்லி மாநில அரசு, அதிரடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். பேச்சை குறைத்து, செயலில் இறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
சோனியாகாங்., தலைவர்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, மரண தண்டனை விதிப்பது தான், சரியானது. இதற்கு குறைவான எந்த தண்டனையும், பயன் தராது. பாலியல் பலாத்காரத்தை தடுக்க வகை செய்யும் சட்டத்தில், தண்டனைகளை மேலும் கடுமையாக்க வேண்டும். இது தொடர்பாக விவாதிக்க, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
சுஷ்மா சுவராஜ்லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் -நமது டில்லி நிருபர்-

கருத்துகள் இல்லை: