ஞாயிறு, 10 மார்ச், 2013

U.G.Krishnamurthi வந்த மஹான்கள் எல்லோருமே போலியான மனிதர்கள்

புனிதம்,பவித்ரம்,தர்மம்,ஆன்மீகம்,ஆத்மா,கலை,கடவுள்,குரு,ஞானிகள்,பண்பாடு,மதம் என்று வாழ்க்கையில் எதைப் பற்றியெல்லாம் நீங்கள் இதுவரை உயர்வான அல்லது தாழ்வான கருத்துக்களை வைத்திருந்தீர்களோ அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி, உங்களை நீங்களாகவே தரிசிக்க உதவுதற்குத் தோன்றிய அபூர்வமான மனிதர் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி>நீங்கள் புனிதம்,பவித்ரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அனைத்துமே உங்கள் உணர்வில் படிந்திருக்கும் அசுத்தங்கள். அசுத்தம் என்ற வார்த்தை உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம்,இருந்தாலும் சொல்கிறேன் அவை அசுத்தங்களே.உங்களால் எதுவுமே செய்ய முடியாது.உங்கள் கைகளில் எதுவுமே இல்லை.இதை நான் உங்களுக்கு தர முடியாது.ஏனெனில் அது ஏற்கனவே உங்களிடம் இருக்கிறது.உங்களிடம் உள்ள பொருளையே நீங்கள் தானம் கேட்பது தமாஷாக இருக்கிறது.எவரிடமும் கேட்டுப் பெறுவதற்கு எந்தப் பொருளும் இல்லை. என்னிடம் இருப்பதுதான் உங்களிடமும் இருக்கிறது.
;நான் இருக்கும் இடத்தில்தான் நீங்களும் இருக்கிறீர்கள். என்னைப் பற்றிச் சொல்வதானால்,மத சம்பிரதாயங்கள்,அனுஷ்டானங்களுடன் நிரம்பிய ஒரு சூழ்நிலையிலேயே நான் வளர்க்கப் பட்டேன்.எனது தாத்தா நல்ல பண்பாடுடைய மனிதர்.நிறையப் படித்த, பண்டிதர்களை அவர் சம்பளம் கொடுத்து ஊழியத்துக்கு வைத்திருந்தார்.நான் தரமான கல்வியும்,அதற்கானஆழ்ந்த சூழ்நிலையும் பெறவேண்டும் என்பதில் அவர் கண்ணும் கருத்துமாய் இருந்தார். தினமும் காலை நாலு மணியிலிருந்து ஆறு மணி வரைக்கும் அந்தப் படித்த பேர்வழிகள் வந்து புனித நூல்களையும்,அதன் விளக்க உரைகளையும்,இன்னும் எல்லா சாஸ்திரங்களையும் படிப்பார்கள்.ஐந்து வயதோ,ஆறு வயதோ,ஏழு வயதோ சிறு பிள்ளையான நான் அந்தக் கருமத்தையெல்லாம் கேட்டுத் தொலைய வேண்டும்! நிறையப் புனித மஹான்கள் எங்கள் இல்லத்துக்கு வருகை புரிந்திருக்கிறார்கள்.எந்தப் புண்ணிய ஆத்மாவுக்கும் எங்கள் வீட்டுக் கதவு திறந்தே இருக்கும்.ஆனால் அந்தச் சிறிய வயதிலேயே ஒன்றை மட்டும் நான் கண்டுபிடித்து வைத்திருந்தேன். வந்த மஹான்கள் எல்லோருமே போலியான மனிதர்கள்.அவர்கள் எல்லாருமே பொய்யர்கள் என்றுதான் சொல்லுவேன். எப்படியோ எதுவெல்லாம் புனிதம் என்று சொல்லப் பட்டதோ,தெய்வீகம் என்று கூறப் பட்டதோ அவற்றின் மீதெல்லாம் எனது சிஸ்டத்துக்குள்ளேயே ஒரு வெறுப்பு ஊர்ந்து வந்து,அவற்றையெல்லாம் தூக்கி எறிந்து விட்டது.அதற்குப் பிறகுதான் எனது தேடல் தொடங்கியது.சொல்லப் பட்ட அனைத்து அனுஷ்டானங்களையும் முறைப்படி செய்தேன்.எனக்கு இளைய வயதுதான்.ஆனால் வீடுபேறு,மோட்சம்,விடுதலை,நிர்வாணம் என்று சொல்லப் பட்டதை யெல்லாம் அடைந்தே தீருவது என்ற உறுதியுடன் செயல் பட்டேன்.அது எனக்கு அவ்வளவு தேவைப் பட்டது.இல்லையெனில் இப்படி ஒரு முழு வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்திருக்க மாட்டேன்.பிறகு எனது இன்னும் தீவிரமான தேடல் ஆரம்பித்தது.எனக்கு ஆழமான மதப் பின்னணி இருந்தது.எனது வழியிலேயே நான் அனைத்தையும் ஆராய ஆரம்பித்தேன். உளவியல்,தத்துவ இயல்,மேற்கத்திய,கிழக்கத்திய தந்திர சாஸ்திரங்கள்,இன்றைய அறிவியல் கோட்பாடுகள் அனைத்தையும் பல வருடங்கள் கற்றேன்.பரந்து பட்ட மனித அறிவினை நானே ஆராயத் துவங்கினேன்.எனக்குப் பல சக்திகள் கிடைத்தன. பல அனுபவங்கள் நிகழ்ந்தன.ஆனால் அவை எதனிடமும் எனது கவனம் போகவில்லை. ஒருவரைப் பார்த்தவுடன் அவரது இறந்த காலம்,நிகழ் காலம்,எதிர் காலம் எல்லாவற்றையும் என்னால் பார்க்க முடிந்தது.ஆனால் எனக்கு மட்டும் எப்படி, ஏன் இந்த ஆற்றல் என்று வியந்தும்,குழம்பியும் இருந்திருக்கிறேனே தவிர அந்த ஆற்றலை நான் ஒரு போதும் பயன் படுத்த வில்லை.பல சமயங்களில் நான் ஏதோ சொல்லுவேன்.அது அப்படியே நடக்கும். அதனுடைய சூட்சுமம் என்னவென்று நான் எவ்வளவு முயன்றும் எனக்குத் தெரியவே இல்லை.இது பல முறை நடந்த போதும் அந்த எனது ஆற்றலுடன் நான் விளையாட வில்லை.அதற்கான ஆர்வமும் அவசியமும் எனக்கு ஏற்படவில்லை. அது மட்டுமல்ல எனக்குள் அனைத்துத் தேடலுமே நின்று போனது.அதற்குப் பிறகுதான் எனக்குப் பல விந்தையான நிகழ்ச்சிகள் நடந்தன.இப்போது எனது உடலைத் தேய்த்தால் ஒளிப் பொறிகள், பாஸ்பரஸைப் போல சிதறின.radhamanohar.blogspot.com/

கருத்துகள் இல்லை: