வெள்ளி, 15 மார்ச், 2013

ஜே.கிருஷ்ணமூர்த்தி பள்ளிக்கூடம் தேர்வுகள் கிடையாது போட்டிகள் கிடையாது

ஒரு பள்ளிக்கூடத்தின் கதை இந்தியாவின் சிறந்த பள்ளிகளில் ஒன்று அது. ஆச்சர்யம்... அதை ஒரு நாளும் அவர்கள் விளம்பரப்படுத்திக்கொண்டது கிடையாது. ஏனென்றால், அவர்களுக்குப் போட்டிகள் ஒரு பொருட்டல்ல. வெற்றிகள் பொருட்டல்ல. பரிசுகளும் பொருட்டல்ல! ஐந்து வயது நிரம்பிய ஒரு குழந்தை ‘‘எனக்கு மூடு சரியில்லை, வகுப்பில் உட்கார்ந்திருக்கப் பிடிக்கவில்லை’’ என்று ஆசிரியரிடம் சொல்லி--விட்டு, பள்ளியின் பூங்காவில் மரத்தடியில் தனிமையில் உலவ முடியும் என்றால், அது ‘தி ஸ்கூலில்’ மட்டுமே சாத்தியம். சென்னையில் 1973-ல் நிறுவப்பட்ட இந்தப் பள்ளி, ஜே.கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நடத்தும் 9 பள்ளிக்கூடங்களில் இரண்டாவதாகத் தொடங்கப்பட்டது.  ‘‘சரியான கல்வியானது, தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கும்போதே, அதைவிட மிக முக்கியமான ஒன்றைச் சாதிக்க வேண்டும். அதாவது, வாழ்வின் முழுப் பரிமாணத்தை மனிதன் உணரும்படிச் செய்ய வேண்டும்’’ என்று சொல்வார் ஜே.கே. ‘‘போர்கள் அற்ற அமைதியான உலகம் வேண்டும் என்றால், அது முதலில் போட்டிகள் அற்ற உலகமாக இருக்க வேண்டும்’’ என்பது ஜே.கே-வின் நிலைப்பாடு.  போட்டிகள் கிடையாது; தேர்வுகள் கிடையாது; ஒப்பீடுகள் கிடையாது; வெற்றிகள் கிடையாது; தோல்விகள் கிடையாது; பரிசுகள் கிடையாது; தண்டனைகளும் கிடையாது என்று ஜே.கே-வின் எண்ணங்களுக்கு ஏற்ப பள்ளிக்கூடங்களை நடத்துவது என்பது இன்றைய சூழலில் அவ்வளவு எளிமையானது அல்ல. ஒட்டுமொத்த உலகின் போக்குக்கும் எதிர் திசையில் பயணிப்பதற்கு ஒப்பானது. பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிப்பில் மட்டும் அல்ல; விளையாட்டிலும் பாலினப் பாகுபாடின்றி, சேர்ந்தே பங்கேற்கும் மாணவ - மாணவியரால் எப்படி விகல்பம் இல்லாமல் பழக முடியும்? எட்டாம் வகுப்பு வரை தேர்வுகளே இல்லாமல் படிப்பவர்களால், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எப்படி வெற்றிகரமாக எழுத முடியும்? அசந்தால், நம் காலின் மேலேயே கண நேரத்தில் ஏறி நின்றுவிடக் கூடிய இன்றைய போட்டிச் சூழ் உலகை, போட்டிகளைச் சந்திக்காமல் வளரும் குழந்தைகள் எதிர்கொள்வது எப்படி? இப்படி எண்ணற்ற கேள்விகளுக்கு, குழந்தைகளைப் பதில்களாக்கி நடமாடவிட்டு இருக்கிறது இந்தப் பள்ளிக்கூடம். ஆசிரியர்களை அண்ணா, அக்கா என்று அழைக்கிறார்கள் குழந்தைகள். ஆசிரியர்கள் மேல் துளி பயம் இல்லாமல் அவர்களை அணுகுகிறார்கள். எதைப் பற்றி, யாரிடம் வேண்டுமானாலும் கேட்கும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது. அவரவருக்கு விருப்பமான உடைகளை அணிந்து இருக்கிறார்கள். பாடங்களைப் படிக்கிறார்கள், பாட்டு - நடனம் கற்றுக்கொள்கிறார்கள், ஓவியங்கள் வரைகிறார்கள், விளையாடுகிறார்கள், மரத்தடியில் அமர்ந்து விவாதம் நடத்துகிறார்கள், நெசவு நெய்கிறார்கள்... எல்லாமும் அவர்களுடைய  விருப்பப்படியே நடக்கிறது. ஆனால், அவர்களிடமிருந்து வெளிப்படும் ஆற்றல் பிரமிக்கவைக்கிறது. ஆசிரியர்கள் ஒவ்வொருவருமே ஆச்சர்யப்படுத்துகிறார்கள். இந்தப் பணிக்காக மிகப் பெரிய பதவிகளை, சம்பளத்தை எல்லாம் விட்டுவிட்டு பணியாற்றுபவர்கள் நிறையப் பேரைப் பார்க்க முடிகிறது.
எல்லோரிடமுமே நிதானத்தையும் தெளிவையும் பார்க்க முடிகிறது. பள்ளி மைதானத்தில், புழுதி கால்களோடு சின்ன பையனைப் போல், விளையாட்டு ஆசிரியர் வினயன் ஓடிக்கொண்டிருக்கிறார். ‘‘எவ்வளவு வசதிகள் இருந்தாலும் சரி... ஒரு விளையாட்டைச் சுவாரஸ்யமாக நீ விளையாட வேண்டும் என்றால், உன்னை எதிர்த்து ஆட ஆட்டக்காரன் வேண்டும். இதுதான் விளையாட வரும் மாணவர்களிடம் நாங்கள் சொல்லும் முதல் செய்தி. எல்லோருக்குமே எல்லோருமே முக்கியம் என்று புரிந்துகொள்வதைவிட வாழ்க்கையில் நல்ல விஷயம் என்ன இருக்க முடியும்?’’ என்று கேட்கிறார் வினயன். ஓவிய ஆசிரியர் தாரித் பட்டாச்சார்யா இன்னும் வியக்கவைக்கிறார். கரிக்கட்டைகள், களிமண் என்று கைக்குக் கிடைக்கும் பொருட்களை எல்லாம் நம்முடைய முன்னோர்கள் எப்படி அற்புதமான மையாகப் பயன்படுத்தினார்கள் என்பதைக் கற்றுக்கொடுத்திருக்கிறார். ஓவியக்கூடம் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள  சுவர்கள் முழுவதும் ஓவியங்களாக இருக்கின்றன. தேர்ந்த தொழில்முறை ஓவியர்களின் ஓவியங்களுக்குச் சவால் விடுகின்றன அவை. ‘‘காகிதங்களில் வரையக் கற்றுக்கொடுக்கும்போது, குழந்தைகளுக்கான படைப்பு எல்லை சுருங்கிவிடுகிறது. அதனால்தான், மிக நீளமான சுவர்களை உங்கள் திரைகள் ஆக்கிக்கொள்ளுங்கள் என்று குழந்தைகளுக்குச் சொல்லி இருக்கிறேன்’’ என்று சிரிக்கிறார் பட்டாச்சார்யா. குழந்தைகள் இங்கே படிக்கும்போதும் சரி, விளையாடும்போதும் சரி... அந்தந்த வகுப்பு சார்ந்து பங்கேற்பது இல்லை. ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை, ஐந்து முதல் ஏழாம் வகுப்பு வரை என்று கலந்து கலந்துதான் பங்கேற்கவைக்கப்படுகிறார்கள். ‘‘வாழ்க்கையின் எல்லாக் காலகட்டங்களையும் எல்லா வயதினருடனும் சேர்ந்தேதானே எதிர்கொள்கிறோம்; எனில், பள்ளிக்கூடமும் அப்படித்தானே இருக்க வேண்டும்?’’ என்கிறார்கள். குழந்தைகள் சோழர்களைப் பற்றிப் படிக்கும்போது தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்கிறார்கள். அவர்களுக்கு காந்தியைப் பற்றிச் சொல்லிக்கொடுக்கும்போது வார்தாவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். ‘‘கல்வி என்பது அடிப்படையில் உணர்தல்தான்’’ என்கிறார் முதல்வர் ஜெயஸ்ரீ நம்பியார்.

        பொதுத் தளத்தில் ‘தி ஸ்கூல்’ தொடர்பாக ஒரு பிம்பம் உண்டு. ‘‘பணக்கார வீட்டுக் குழந்தைகள் படிக்கும், பணக்காரர்களுக்கான பள்ளிக்கூடம்’’ என்பதே அது. ஆனால், கிட்ட நெருங்கிப் பார்க்கும்போது அது உண்மை இல்லை என்றே தோன்றுகிறது. கோடீஸ்வரர்களின் பிள்ளைகளின் மத்தியில், பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகளும் கல்வி உதவித்தொகையுடன் படிப்பதைப் பார்க்க முடிகிறது. தவிர, தன்னுடைய மாணவர்களைத் தாண்டியும் கல்விச் சேவையை எடுத்துச் செல்கிறது ‘தி ஸ்கூல்’. நாட்டின் பொதுக்கல்வித் துறையில் தமிழகம் கொண்டுவந்த முன்னோடித் திட்டமான செயல்வழிக்கற்றல் திட்டம் இங்கிருந்து உருவாக்கம் பெற்றதுதான். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சி, விளிம்பு நிலையில் இருக்கும் பள்ளிகள் தத்தெடுப்பு போன்ற சில பணிகளையும் முன்னெடுக்கிறது.

        நம் நாட்டில் 66 ஆண்டுகளாக குழந்தைகள் சுதந்திரத்தைப் பற்றியும் மாற்றுக் கல்விமுறையைப் பற்றியும் பேசிக்கொண்டே இருக்கிறோம். அரசு ஏன் ‘தி ஸ்கூல்’ முறையைப் பின்பற்றக் கூடாது? இந்தியாவின் நான்கில் ஒரு பள்ளி தனியார் பள்ளி என்கிற அளவுக்கு அரசுப் பள்ளிகளுக்கு இணையாகத் தனியார் பள்ளிகள் வளர்ந்துவரும் காலம் இது. ஏன் தனியார் பள்ளிகள் இந்தக் கல்விமுறையை முன்னெடுக்கக் கூடாது?
ஆனந்த விகடன் மார்ச், 2013.



ஒரு விண்ணப்பம்:  சென்னையில், தியாஸபிகல் சொசைட்டிக்குச் சொந்தமான இடத்தில் இதுவரை செயல்பட்டுவந்த  'தி ஸ்கூல்' இப்போது அந்த இடத்தைக் காலி செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறது. நிரந்தரமான ஓர் இடத்தில் செயல்பட  புதிய பள்ளிக்கட்டடம் கட்டும் திட்டத்தை ஜே.கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையினர் மேற்கொண்டுவருகின்றனர். அதற்கு நிதி உதவி அவர்களுக்குத் தேவைப்படுகிறது. இப்படி ஒரு பள்ளிக்கூடம் நம்மூரில் ஒரு நிரந்தர இடத்தில் நீடிப்பது முக்கியம். எனவே, முடிந்தவர்கள் அவசியம் உதவுங்கள்.

விவரங்களுக்கு:
தொலைபேசி எண்: 044 - 2491 5845, 2446 5144
மின்னஞ்சல்:  theschool.kfi.chennai@gmail.com
இணையதளம்: http://www.theschoolkfi.org/index.php

காசோலைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
 The Secretary,
 Krishnamurti Foundation India,
 Vasanta Vihar,
 124 - 126, Greenways Road,
 RA Puram, Chennai 600 028.

வங்கிக் கணக்கு விவரம்:
 For The School Relocation Fund
 Name of beneficiary: Krishnamurti Foundation India
 Account Number: 01411450000021
 Bank Name and Branch: HDFC Bank, RA Puram, Chennai 600 028
 Account Type: Domestic, Savings
 IFSC Code: HDFC0000141  writersamas.blogspot.com

கருத்துகள் இல்லை: