சனி, 5 நவம்பர், 2022

தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம்; தமிழக அரசு திட்டவட்டம்

நக்கீரன் : சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் புதிய இரண்டாவது விமான நிலையம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிற நிலையில் பரந்தூர் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலிருந்தும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து பரந்தூர் மக்கள் அண்மையில் சுற்றுவட்டார கிராம மக்கள் 'விவசாயத்தை அழித்து விமான நிலையமா?'
 என்ற பதாகைகளுடன் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'தமிழக தொழில் வளர்ச்சிக்குக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க பரந்தூர் விமான நிலையம் அவசியம். சரக்குகளைக் கையாள்வது அதிகரிக்கும்போது தொழில்துறைக்கு அதிக வாய்ப்புகள் உருவாகும். இதனால் வேலை வாய்ப்பு பெருகும். தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமான இடங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டது தான் பரந்தூர். பரந்தூர் விமான நிலையம் பெரிய ரக விமானங்களைக் கையாளும் திறன் பெறும் போது சர்வதேசப் பயணிகள் வரத்து அதிகரிக்கும்.  20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 2028க்குள் விமான நிலையத்தைக் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

கருத்துகள் இல்லை: