ஞாயிறு, 30 அக்டோபர், 2022

தென் கொரியா: சியோல் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 151ஆக உயர்வு ...

தினமணி : தென் கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 151ஆக உயர்ந்துள்ளது.
தென் கொரிய தலைநகர் சியோலின் மத்தியில் உள்ள இதேவோன் மாவட்டத்தில் நேற்றிரவு ஹாலோவீன் கொண்டாட்டம் நடைபெற்றது.
குறுகிய தெருக்களில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
மேலும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த பலி எண்ணிக்கை 151ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  
அதேசமயம் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே சியோல் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தென் கொரியாவில் ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி கிறிஸ்தவர்களால் ஹாலோவீன் கொண்டாடப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: