திங்கள், 7 நவம்பர், 2022

'10% இடஒதுக்கீடு; நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு': சட்டப்போராட்டத்தை முன்னெடுக்கும் முதல்வர்!

கலைஞர் செய்திகள்  - லெனின்  : உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்கும் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றியது.
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் முறை அரசியலமைப்பில் இல்லை என்றும், இது சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கை என்றும் கூறி தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தன.
பின்னர் இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி யு.யு.லலித், தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டன.

அரசியல் சாசன அமர்வு முன்பு தமிழ்நாடு, கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகளும் தங்களது வாதங்களை முன்வைத்தன. பொருளாதார இடஒதுக்கீடு கூடாது என்பதை முந்தைய உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவுப்படுத்தியுள்ளதாகவும், இட ஒதுக்கீடு என்பது வறுமையை ஒழிப்பது அல்ல, பின் தங்கிய சமூகத்தை உயர்த்துவதே இடஒதுக்கீட்டின் நோக்கம் என்றும் தி.மு.க தரப்பில் வாதிடப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில், தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்திர பட், தினேஷ் மகேஷ்வரி, எஸ்.பி.பர்திவாலா, பெல்லா த்ரிவேதி ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

அதில், இந்த சட்டத்துக்கு ஆதரவாக நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பர்திவாலா, பெல்லா திரிவேதி ஆகிய 3 பேர் ஆதரவாகவும், தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகிய இருவர் எதிராகவும் தீர்ப்பளித்தனர்.

இந்நிலையில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

"பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஐ.க. அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறை சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில், இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து நடத்தி வந்தது. இந்த வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டியுள்ளது.

எனினும், தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, சமூகநீதிக்கு எதிரானதான முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான நமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்.

சமூகநீதியைக் காக்க முதல் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வைத்த தமிழக மண்ணிலிருந்து, சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: