ஞாயிறு, 6 நவம்பர், 2022

வீட்டின் கேட்டை மூட சென்ற கணவன் மனைவி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு... சென்னை கோடம்பாக்கம் அடுக்கு மாடியில்

tamil.asianetnews.com  - Ajmal Khan  :  சென்னை கோடம்பாக்கம் ரத்தினம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மூர்த்தி,
இவர் வருமானவரித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
இவரது மனைவி பானுமதியும் தடய அறிவியல் துறையில்  துணை கண்காணிப்பாராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இவர்களுக்கு குழந்தை கிடையாது. எனவே கோடம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இதனிடையே நேற்று நள்ளிரவு மூர்த்தி வீட்டின் கேட்டை மூட சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கேட்டில் பாய்ந்து இருந்த மின்சாரம் மூர்த்தியையும் தாக்கியுள்ளது. இதன் காரணமாக அந்த இடத்திலேயை ஷாக் அடித்து நின்றுள்ளார்.
கேட்டை கணவன் பிடித்து கொண்டிருப்பதை பார்த்த அவருடைய மனைவி பானுமதி தனது கணவனை தொட்டுள்ளார்.

அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதன் காரணமாக இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர்.  இந்தநிலையில் இருவரும் இறந்த நிலையில் கேட்டை பிடித்து கொண்டு இருந்த காட்சியை பார்த்த  எதிர் வீட்டில் வசித்து வந்த வெங்கட்ராமன், இரண்டு பேரையும் மீட்க சென்றுள்ளார். ஆனால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதனையடுத்து  சுதாரித்து கொண்ட வெங்கட்ராமன், மின்சார இணைப்பை துண்டித்து விட்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.  உடனடியாக அங்கு வந்த அசோக் நகர் காவல்துறையினர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் உடலையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மின் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் இதன் காரணமாக இரண்டு பேர் உயிர் இழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: