ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

எந்த கடவுளும் பார்ப்பனர் கிடையாது- மனுஸ்மிருதி பிற்போக்கானது:டெல்லி JNU துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட்

 Mathivanan Maran Oneindia   : டெல்லி: எந்த ஒரு கடவுளும் பிராமணர் கிடையாது; பெண்களை சூத்திரர்களாக வகைப்படுத்தும் மனுஸ்மிருதி மிகவும் பிற்போக்கானது என்று டெல்லி ஜவஹர்லால் நேரு (ஜே.என்.யூ).
பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட் தெரிவித்துள்ளார்.
மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் ஜே.என்.யூ. துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட் பேசியதாவது: மானுடவியல் என்பது அறிவியல் பூர்வமானது.
நமது கடவுள்களின் பூர்வோத்திரத்தைப் பாருங்கள். எந்த ஒரு கடவுளுமே பிராமணர் கிடையாது. கடவுள்களில் உயர்ந்தது சத்ரியர்கள்தான். சிவபெருமான் ஒரு தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்.
பாம்புடன் சுடுகாட்டில் அமர்ந்திருப்பவர்தான் சிவபெருமான். சிவபெருமானுக்கு ஆடை என்பது குறைவுதான். பிராமணர்கள் சுடுகாட்டில் அமருவார்கள் என நான் நினைக்கவில்லை.


கடவுளர்களின் மானுடவியலை பார்த்தால் உயர்ஜாதி என்பதில் இருந்து எந்த கடவுளும் வந்தது இல்லை. லட்சுமி, சக்தி என அத்தனை கடவுள்களுமே உயர் ஜாதி இல்லை. ஜகன்னாதரை எடுத்துக் கொண்டால் ஆதி பழங்குடி. இப்படியான நிலையில் ஏன் நாம் பாகுபாட்டுடன் இருக்கிறோம்? இது மனிதநேயமற்றது.

மனுஸ்மிருதியானது அனைத்து பெண்களையும் சூத்திரர்கள் என்கிறது. மனுஸ்மிருதி என்பது மிக மிக பிற்போக்கானது. மனுஸ்மிருதியின் அடிப்படையில் ஒரு பெண் தன்னை பிராமணர் என்றோ அல்லது வேறு எதன் பெயரிலோ உரிமை கொண்டாடிவிட முடியாது. உங்களை சூத்திரர் என்கிறது மனுஸ்மிருதி. நீங்கள் திருமணம் செய்து கொண்டால் கணவரின் ஜாதி அல்லது அப்பாவின் ஜாதிதான் உங்களுடையதாகிறது. இது மிகவும் பிற்போக்கானது.

பிறப்பின் அடிப்படையிலானது ஜாதி அல்ல என பலரும் கூறுகின்றனர். ஆனால் சமூகத்தில் பிறப்பின் அடிப்படையில்தான் ஜாதி தீர்மானிக்கப்படுகிறது. பிராமணரோ அல்லது வேறு ஒரு ஜாதியை சேர்ந்தவரோ தலித்தாகமுடியுமா? அண்மையில் ராஜஸ்தானில் தலித் சிறுவன், குடிநீர் பானையை தொட்ட ஒரே காரணத்துக்காக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த குடிநீரை குடிக்கக் கூட இல்லை. நம்முடைய மனிதாபிமானம் எங்கே நிற்கிறது என யோசித்துப் பாருங்கள்? சக மனிதனை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை நினைத்து பாருங்கள். இந்திய சமூகமானது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமானால் ஜாதி ஒழிப்பு என்பது அதிமுக்கியமானதாகும். ஜாதி என்கிற செயற்கையாக கட்டமைக்கப்பட்ட ஒன்றின் பெயரால் சக மனிதனை கொலை செய்யவும் நாம் தயாராக இருக்கிறோம். புத்த மதம், பிராமண இந்துயிசத்துக்கு எதிரானது. புத்தர் இந்திய வரலாற்றில் முதல் பகுத்தறிவாளர். அதற்கு அம்பேத்கர் புத்துயிர் ஊட்டினார். இவ்வாறு சாந்திஸ்ரீ பண்டிட் கூறினார்.

ஜாதி பாகுபாடுடன் செயல்படும் சென்னை பல்கலை. துணைவேந்தர் எஸ்.கெளரி- தீண்டாமை ஒழிப்பு முன்னணி புகார்

By Mathivanan Maran Oneindia

கருத்துகள் இல்லை: