செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

பாகிஸ்தானுக்கு 1.17 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க உலக நிதி நிறுவனம் IMF ஒப்புதல்

தினத்தந்தி : பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில், 1.17 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க ஐ.எம்.எப். ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் விதமாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) அந்நாடு 170 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நிதியுதவி கோரி இருந்தது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் இன்று ஆலோசனை நடத்தியது. இதனைத்தொடர்ந்து பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு 1.17 பில்லியன் டாலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் 7 மற்றும் 8வது தவணையாக பாகிஸ்தான் 1.17 பில்லியன் டாலர்களை விடுவிக்க அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் நிதிமந்திரி மிப்தா இஸ்மாயில் கூறுகையில், பாகிஸ்தானின் EFF திட்டத்தை புதுப்பிக்க சர்வதேச நாணய நிதியத்தின் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், "நாம் இப்போது 7வது மற்றும் 8வது தவணையாக 1.17 பில்லியன் டாலர்களைப் பெற வேண்டும். பல கடினமான முடிவுகளை எடுத்து பாகிஸ்தானை இயல்புநிலையிலிருந்து காப்பாற்றியதற்காக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நம் தேசத்தை வாழ்த்துகிறேன்" என்று தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

மற்றொரு டுவிட்டர் பதிவில், "எங்களின் ஐ.எம்.எப். திட்டத்திற்கு புத்துயிர் அளித்த நிதி இடைவெளியை நிறைவேற்ற உதவிய சீனா, சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

ஐ.எம்.எப்., உலக வங்கி, ஏ.டி.பி., ஏ.ஐ.ஐ.பி& ஐ.டி.பி (IMF, World Bank, ADB, AIIB & IDB) ஆகியவை பாகிஸ்தானுக்கு அளித்த ஆதரவிற்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

ஆதரவு அளித்த அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், துருக்கி, ஜப்பான், கொரியா மற்றும் பிற நாடுகளுக்கும் நன்றி" என்று அதில் மிப்தா இஸ்மாயில் தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை: