செவ்வாய், 17 மே, 2022

வேல்முருகனின் முன்னாள் மனைவி பாஜகவில் இணைந்தார்

வேல்முருகனுக்கு வீசிய வலை: பாஜகவில் இணைந்த முன்னாள் மனைவி!

மின்னம்பலம் :  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சமீப நாட்களாக பிற கட்சியின் பிரமுகர்கள் பாஜகவில் சேருவது தொடர்ந்து நடந்து வருகிறது.
அந்தவகையில் நேற்று (மே 16) தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பண்ருட்டி வேல்முருகனின் மனைவியாக இருந்து விவாகரத்து பெற்ற காயத்ரி பாஜகவில் இணைந்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து அவர் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார். முன்னாள் பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணனையும் சந்தித்துள்ளார் காயத்ரி.
இது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் தனது சமூக தள பதிவில், "இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் திரு. வேல்முருகன் அவர்களின் மனைவி திருமதி.காயத்ரி அவர்கள் பாஜக மாநில தலைவர் அவர்களின் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டதோடு என்னை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.



பொன்.ராதாகிருஷ்ணனின் இந்த பதிவிலேயே பலர் பின்னூட்டத்தில், "வேல்முருகனும் காயத்ரியும் நான்கைந்து வருடங்களுக்கு முன்பு முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்த நிலையில் வேல் முருகனின் மனைவி பாஜகவில் இணைந்தார் என்று எப்படிக் கூறுகிறீர்கள்?" என கேள்விகளையும் எழுப்பி உள்ளனர்.

ஆனால் பொன் ராதாகிருஷ்ணனின் இந்த பதிவுக்கு வேறு பின்னணி இருக்கிறது என்கிறார்கள் வட மாவட்ட அரசியல் வட்டாரத்தினர்.

"பொன் ராதாகிருஷ்ணன் 2014- 19 மோடி அமைச்சரவையில் இணை அமைச்சராக பதவி வகித்தார். தமிழ்நாட்டில் அப்போது பாஜகவை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக வட மாவட்டங்களில் தீவிர கவனம் செலுத்தினார் பொன். ராதாகிருஷ்ணன். வன்னியர் சமுதாய பிரமுகர்களை பாஜகவில் இணைத்தார்.

அந்த வகையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்ற கட்சியைத் தொடங்கி அப்போது துடிப்பாக நடத்திக்கொண்டிருந்த வேல்முருகனை பாஜகவின் மேலிடத்திலிருந்து அணுகியிருக்கிறார்கள்.

நீங்கள் பாஜகவுக்கு வந்துவிடுங்கள். தமிழக பாஜக மாநில தலைவர் பதவியைக் கூட உங்களுக்குத் தருகிறோம். நீங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதி தருகிறோம். தமிழகத்தில் பாஜகவை வளர்க்க வேண்டும். அதற்கு உங்களைப்போல துடிப்புள்ள இளம் தலைவர்கள் எங்களுக்கு வேண்டும் என்று அப்போது வேல்முருகனிடம் பேச்சு நடத்தினார்கள்.

ஆனால் வேல்முருகன், 'பாஜகவில் சேர்ந்தால் இதுவரை நான் அரசியலில் சேர்த்து வைத்த அத்தனை புகழும் அடிபட்டுப் போய்விடும்' என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

அன்று வேல்முருகனை குறிவைத்து களமிறங்கிய பாஜக சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவரால் விவாகரத்து செய்யப்பட்ட அவரது மனைவியை தற்போது பாஜகவில் சேர்த்துள்ளது" என்கிறார்கள் வட மாவட்ட அரசியல் வட்டாரங்களில்.

ஆரா

கருத்துகள் இல்லை: